பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

வேண்டும் விடுதலை

நீங்கள் அனைவரும் இக்கால் உள்ள இழிவான அரசியல் நலன்கனைத் தூக்கி எறியுங்கள். வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி ஆட்சி எனறென்றும் நன்மையும் நம் பிறங்கடைகளையும் மீளாத கொத்தடிமையாகவே வைத்திருக்கும் நம்மில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர், அவர்களுக்கு முழு அடிமையாக இருக்கிற வரையிலேயே அவர்கள் உங்களைப் பாராட்டி ஏற்றுக் கொள்வார்கள். உரிமை நிலையிலோ, ஒத்துழைப்பு நிலையிலோ நீங்கள் அவர்களில் யாரேனும் ஒருவர்க்கு மாறுபட்டாலோ, வேறுபட்டாலோ, உங்களை உடனே கீழிறக்கி விட்டுவிட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக அவர்களே நேரடியாக ஆட்சி நடத்தத் தயங்கமாட்டார்கள். இது இமயமலை போன்ற வரலாற்று உண்மையாகும். எனவே, தமிழ்நாட்டுத் தேசிய இன விடுதலையே தமிழினத்தின் ஒட்டுமொத்தமான உரிமை அரசியலை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க முடியும்.

ஆகவே, நீங்கள் அனைவரும் நமக்குள் என்றென்றும் நிலையாக இருந்துவரும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு, முழுமையான இனவுணர்வுடனும், நம் தாய்மொழி உணர்வுடனும், தமிழ் நாட்டு விடுதலை உணர்வை நம் மக்களிடையே ஊட்டுதல் ஒன்றே இந்நூற்றாண்டுக்கு உரிய தலையாய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தக் கொள்கை நோக்கை அடிப்படையாகக் கொண்டே நம் கலைஞர் கருணாநிதி, மானமிகு வீரமணி, மாவீரன் நெடுமாறன். மக்கள் நலன் கருதும் கலிவரதன் நெடுஞ்செழியன், சானகி, இராமச்சந்திரன், சோமசுந்தரம், காளிமுத்து, இரா. செழியன் இந்திராப் பேராயத்திற்கு முற்றிலும் தம்மை கொத்தடிமையாக் கொண்டவர்கள் போக எஞ்சியுள்ள தமிழின முன்னோடிகள் முதலிய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குக் குரல் கொடுக்குமாறு, இன்றுவரையிலும் இனியும் கூட எந்த வகையிலும் அரசியல் நலனோ பிற எவ்வகை வாழ்வியல் நலனோ கருதாத, ஒரு தமிழின நலத் தொண்டன் என்ற முறையில் மிகவும் பணிவன்புடனும் அறிவார்ந்த உள்ளுணர்வுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

-தமிழ் நிலம், இதழ் எண். 12 நவம்பர், 1988