பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

வேண்டும் விடுதலை

நிறுத்திக் கொண்டு, இவ் வரசியல் விடுதலைக்கு அப்பால் முதலில் எவ்வெவ் வகையில் நாம் விடுதலை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம். என்பது பற்றி இனிச் சிந்திப்போம்.

தமிழினத்தைப் பொறுத்த வரையில் உலகிலுள்ள பிற தேசிய இனங்களைப் போல் வெறும் அரசியல் விடுதலை மட்டுமே இதற்குப் போதுமான தேவையன்று. அரசியல் விடுதலையுடன் கூடிய இன விடுதலையும் இதற்குக் கட்டாயம் தேவை என்பதையும் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சிலர் இதன் பரு விளக்கத்தைத் தவறாக விளங்கிக் கொண்டு, அரசியல் விடுதலை பெறுவதுதான் நம் முதல் தொண்டு; அதைப் பெற்று விட்டால், இன விடுதலையையும் பிற விடுதலைகளையும் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள முடியும்’ என்று கருதுகின்றனர். அவர்கள் நிலமிருந்தால் நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை உடையவர்கள். நிலமிருந்து விட்டால் மட்டும் போதும், நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு பொது உண்மையே! ஆனால் அது சிறப்பு உண்மையாக முடியாது. நிலத்திற்கு மேலும் எத்தனையோ உடைமைகளையும் உரிமைகளையும் நாம் பெற வேண்டிப் பாடுபடவேண்டியிருக்கும்.

அரசியல், விடுதலை பெற்று இனவிடுதலை பெறாத பொழுது, இற்றை இந்தியா தன்னுரிமை பெற்ற வரலாறாகத்தான். அது முடியும். இந்தியாவில் நாற்பதாண்டுக்காலத் தன்னுரிமை வரலாற்றில் மக்கள் படுந்துயரையும், இழந்த உரிமைகளையும் எவரே எடுத்து முழுமையாக இயம்பி விட முடியும்? இதைவிட தமிழ் நாடு இன விடுதலை பெறாமல் அரசியல் விடுதலை மட்டும் பெற்று இயங்குவது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமன்றோ?

நாம் இன விடுதலை என்று குறிப்பது தமிழினத்தில் ஏற்கனவே இரண்டறக் கலக்கப் பட்டுள்ள மதப்பூசல்களையும் சாதி வேறுபாடுகளையும் அறவே விட்டு விலகி இன ஒருமை எய்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான். நாடு அரசியல் விடுதலை பெற்றுத் தன்னுரிமை உற்று இருக்கையில், மக்கள் பிறவியின் அடிப்படையில் வேறுபட்டுக் கிடப்பாரானால், அவ்வுரிமையை நாம் எப்படிச் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ள இயலும்? உரிமை சரிசமமாக மக்களால் நுகரப் பெறாத பொழுது, நாட்டின் அரசியல் விடுதலையால் யாருக்கு பயன் விளையும் என்று எண்ணிப் பார்க்கவும்