பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

29

தந்துகொண்டாலும் அது நம்மின் அறியாமையையே காட்டும்; நமக்குத் தாழ்வு வழியையே காட்டும்!

"துறக்க(சொர்க்க)மே என் சிறையாக அமைந்தாலும், நான் அதைத் தாண்டிக் குதித்து விடுதலை பெறவே விரும்புவேன்' என்று கூறும் விடுதலை எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் இப்படிக் கூறுவதால் இந்தியாவின் அரசியல் நலத்திந்கு எந்தவகையிலும் ஊறு நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது. இந்தியாவைப் பல சுற்றுச் சுவர்களால் குறும் பிரிவுகளாகப் பிரித்துவிட வேண்டும் என்பது நம் எண்ணமன்று. ஒவ்வொரு மாநிலமும் தனியாட்சி பெற்று இந்தியக் கூட்டரசாக இயங்கவேண்டும் என்பதே நம் கொள்கை. ஒவ்வொரு மாநிலத்தின் நன்மை தீமைகளும் அவ்வம் மாநில ஆட்சியமைப்பைப் பொறுத்தே அமையவேண்டும். மொழிவழியாகப் பிரிக்கப்பெற்றுத் தன்னாட்சியுரிமைபெய்திய கூட்டுக் குடியரசில் வேற்றுமைகளுக்கே துளியும் இடமில்லை. ஒவ்வொரு நாட்டுப் படைகளும் சேர்ந்து உலக ஒன்றிப்பு அவையின் நடுநிலைப் படைகளை அமைத்தல் போல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் படைகளும் சேர்ந்து சம தொகையினதாக ஒருபெரும் இந்தியப் படையினை ஏற்படுத்தி அதன் புறக்காப்பை வலுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதுவன்றி அவ்வம்மாநிலங்களில் நிகழும் எல்லா வகையான அரசியல், பொருளியல், குமுகாயவியல் மாறுபாடுகளும் அவ்வம்மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டனவாகவே அமைதல் வேண்டும்

தமிழகத்தில் ஓடும் தொடர்வண்டி அஞ்சல் இயக்கம், கல்வியமைப்பு, தொழில் விளைவு முதலியன யாவும் தமிழக அரசையே சார்தல் வேண்டும். தேவையானால் ஒரு மாநிலத்தின் மிகையான விளைவு மற்ற மாநிலத்தின் குறைவான விளைவைச் சரிகட்டுவதற்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து கொள்ளல் வேண்டும். இங்கு நடைபெறும் எந்த ஒரு செயலுக்கும் திருத்தத்திற்கும். இங்கு அமைக்கப்பெறும் அரசையே முழுப்பொறுப்பாக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசு தனக்கு மேலுள்ள அதிகாரத்தைக் காட்டித் தப்பித்துகொள்ளல் இயலாது. இம்முறையால் ஒரு மாநிலத்தின் ஆக்கமும் கேடும் ஆங்குள்ள மக்களின் அறிவையும், சுறுசுறுப்பையும், உழைப்பையும் பொறுத்தனவாகவின், எல்லா மாநிலத்தவரும் பொறுப்புணர்ந்து எல்லாத்துறைகளிலும் மெய்யாக ஈடுபடுகின்ற ஒரு போட்டித்