பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

321

இராசீவ். அவருக்கு அவரைப் பற்றித் தவிர வேறு எவரைப் பற்றியும் கவலையில்லை என்பது அவர் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இராசீவுக்கு உள்ள கவலையெல்லாம் தாம் நினைக்கின்ற ஒவ்வொரு திட்டத்தையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான். அதுவுமன்றி அவர் நடவடிக்கைகளை எவரும் எதிர்க்கக்கூடாது என்பதும் அவர் கொள்கையாக இருக்கிறது. அவ்வாறு எதிர்ப்பவர்களையெல்லாம் அவர் சகட்டுமேனிக்குக் கடுமையான சொற்களால் சாடுகிறார். இவருக்குத் தவிர, வேறு எவருக்கும் மக்கள் மேல் பற்றில்லை என்று இவர் கருதுவது, இவர் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் ஐந்தாய அரசைக் கொண்டு வந்த மறைமுகமான நோக்கத்தையும், 18 அகவை வந்த அனைவர்க்கும் ஒப்போலையளிக்கும் உரிமை வழங்கியதையும் பார்த்தால், அவர் விரைவில் இந்தியா முழுமைக்கும் சட்டமன்றத் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒன்றாகவே நடத்த விரும்புகிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. அவ்வாறு இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதானால், அவர் இப்பொழுது அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு முதலிய மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்கள் அரசையும் கலைத்தாக வேண்டும். பாராளுமன்றத் தேர்தல், வரும் திசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. அக் கருதுகோள் உண்மையாக இருந்தால் நம் கணிப்பும் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அஃது உண்மையாக இருந்து விட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டுவிடும். அவ்வாறு கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டால், மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அந்நிலைக்கு இந்த ஐந்தாய அமைப்புகள் கட்டாயம் இராசீவுக்குக் கைகொடுத்தே ஆக வேண்டும். எதற்கும் அண்மைக் கால விளைவுகளைப் பொறுத்தே எதிர்கால இந்தியாவின் நிலைப்பாடு இருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை எதிர்காலமே கட்டியங் கூறி உரைத்து விடும் என்று நம்புக.

— தமிழ்நிலம், இதழ் எண். 22 மே 1989