பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

327


 
இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை;
இங்குள்ள தேசிய இனங்களின் சொத்து!


நாம் முன்னரே கூறியிருக்கின்றோம். "தில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களாகிய நாம் முழு உரிமையுடன் வாழ முடியாது; இந்தியா ஒன்றாக இருந்தால்தான் தமிழர்கள் என்றென்றும் வடநாட்டு வணிகர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அடிமையாகவே இருக்க வேண்டி இருக்கும்" என்று!

இந்தியா ஒன்றாக இருப்பதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் தமிழர்களால் மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில் இந்தியாவில் உள்ள மற்ற தேசிய இனங்களைக் காட்டிலும், வடநாட்டுக்காரர்களாலும், பார்ப்பனர்களாலும், ஏற்பட்ட தாக்கங்கள் தமிழினத்திற்கே மிகுதி என்பது முதல் காரணம். தமிழினம் இந்தியத் தேசிய அனைத்தினங்களிலும் இந்தியாவையே ஆண்ட பேரினம் என்பது இரண்டாவது காரணம். இனி, மூன்றாவது காரணம், தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் இந்தியாவில் சமசுக்கிருதம் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மூத்த, மூலமான மொழியாக இருப்பதுடன், சமசுக்கிருதத் தொடர்பில்லாமல் வேறு தேசிய மொழிகள் இயங்காமல் இருக்கின்ற நிலையில், அதன் தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்து இயங்கும் வல்லமை பெற்றிருப்பதும், அனைத்துத் தேசிய மொழிகளினும் மிகப் பழைமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்களையும், கலை, பண்பாடுகளையும் நாகரிக