பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

337

ஐரோப்பிய ஆரியர்களாகிய வெள்ளைக்காரர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறும் பொழுது, ஆசிய ஆரியர்களான இந் நாட்டுப் பார்ப்பனர்கள், அவர்கள் விட்டுச் சென்ற ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டதுடன், அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தாங்கள் கைப்பற்றி மேலோங்கியிருந்த இன, மத, குமுகாய, கலை, பண்பாட்டு வல்லாண்மைகளை அழுத்தமாக நிலைப்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பார்ப்பன வணிக வல்லதிகார ஆட்சியாக ஒரு காசுமீரப் பார்ப்பன நேரு குடும்ப ஆட்சியாகவே - இந்திய ஆட்சி நடந்து வந்தது. நேரு, இந்திரா, இராசீவ் - என்னும் முப்பார்ப்பனக் கொடுந்தலைமை முழு வல்லாண்மை ஆட்சியில், இந்தியாவில் வேறு எந்தத் தேசிய இனமும் அதிகாரத்திற்கு வரவொட்டாமல் அடக்கி ஒடுக்கப் பெற்றது. தமிழினத்தின் நிலைகளையோ சொல்லவே வேண்டுவதில்லை. இந்தியத் தமிழ்நிலத்தில் தமிழர்கள் எத்துணையளவு துன்பமும் துயரமும் பட்டார்களோ, உரிமைகளை இழந்தார்களோ, அதைவிட இலங்கைத் தமிழ்நிலத்தில் அங்குள்ள தமிழர்கள் அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த அதே ஆரியப் பார்ப்பனர்களான சிங்கள ஆட்சியினரால் அடக்கி யொடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்டுக் குற்றுயிராயும் கொலையுயிராயும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைக்காக, அங்குள்ள தமிழ் இளைஞர்கள் பல்வேறு குழுவினராகப் பிரிந்திருந்தாலும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் கருவிப் போர் நடத்திப் போராடி வருவதை உலகமே வியந்து கவனித்துக் கொண்டுள்ளது. அவ்வாறு போராடி வருகின்ற அனைத்துக் குழுக்களிலும், மிகவும் வலுப்பெற்ற, குழுவாக, இறுதி வரை தம் ஒரே கொள்கை 'தமிழீழ விடுதலைக் கொள்கையே' என்னும் இலக்குடன் போராடி, இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழிழத்தை இன்றைக்கு முழுவதும் தன் கையகப்படுத்தியுள்ள, பெருமாவீரன் பிரபாகரன் தலைமையிலுள்ள விடுதலைப் புலிகள் குழு இருந்து வருவது, உலகத் தமிழினத்தை மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் உள்ளாக்குகிற ஒரு சிறப்புச் செய்தியாகும்.

தொடக்கத்தில் பெருமாவீரன் பிரபாகரனை குருவிக் குஞ்சைப் போல் நசுக்கிக் கசக்கிப் பிழிந்துவிடலாம் என இங்குள்ள பார்ப்பனிய அரசு கனவு கண்டது; அதற்காகச் சில சூழ்ச்சிக்