பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

49

ஆகவே தமிழர்கள் இத்தகைய அரசியல் வண்ண மத்தாப்புகளின் வெளிச்சத்தில் தங்கள் மேனி யழகுகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டா. அவர்தம் நோக்கமும் கொள்கையும் இனம் வீழ்த்தப்பட்டதையும், தம் பெருமை சாய்க்கப்பட்டதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவற்றைப் பற்றி அறிவுணர்ச்சியற்ற உடம்புகளும், வினையுணர்ச்சியற்ற மேனிகளும் வேண்டுமானால் “அவன் நல்லவன்: இவன் வல்லவன்; அவன் சொத்தை, இவன் சொள்ளை” என்று சொல்லிக் கொண்டு திரியட்டும். மானமுள்ள நாம் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெற்றாக வேண்டும் அரசியல், பொருளியல், குமுகாயவியல் அல்லது பண்பாட்டியல் முதலிய நிலைகளினின்றும் நாம் விடுதலை பெற்றாக வேண்டும். இவ்வத்தனைத் துறைகளிலும் நாம் முன்னேறியாகவும் வேண்டும்.

எங்காவது எவனாவது "தமிழ் முன்னேறிவிட்டது; தமிழ் ஆளுகிறது; தமிழ் வாழுகிறது; அங்குத் தமிழ்; இங்குத் தமிழ்” என்று சிலம்பாடுவானானால் அவனுக்காக இரக்கப்படுங்கள். அவனிடத்தில் இப்படிக் கூறுங்கள்: "ஐயா, தமிழரே! தமிழ் எவ்வளவு முன்னேறி இருக்கின்றது என்று கூறுகின்றீரோ; அவ்வளவில் அது வீழ்த்தப்படவிருக்கின்றது. மணலுள் நட்ட மரம்போல் விரைவில் சாய்ந்துவிடப் போகின்றது. ஏனென்றால் நீர் கூறும் முன்னேற்றத்தில் அடிப்படை என்பது எள்ளத்துணையும் இல்லை; உண்மையில்லை; இனி விளைந்துபோக வேண்டிய எருவில்லை; அதன் பருமையில் திண்மையில்லை; அதன் பளபளப்பு உடலின் ஒளியன்று; நோயின் மினுக்கு மொத்தத்தில் தமிழ் “சட்டிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதை” - என்று விளக்கிக் காட்டுங்கள். விளங்கிக்கொண்டால் போகட்டும்; விளங்காவிடில் கவலை வேண்டா. பக்தவத்சலத்தின் கொடியைவிட உயரமாகப் பறந்த கொடி வேறில்லை; காமராசரின் ஒரு கை கன்னியாகுமரி முனையையும் மறுகை பனிமலை உச்சியையும் தொட்டுக் கொண்டிருந்தது; அக் கால்கள் இந்தியாவைச் சுற்றிச் சுற்றி நடையிட்டன. இன்று அவர்தம் கைகால்களை முடக்கிக் கொண்டு நிசலிங்கப்பாவின் வீட்டுத் திண்ணையில் முடங்கிக்கொண்டு கிடக்கின்றார். இப்படிப் பெரிய அரசியல் மூளைகளெல்லாம் மூழ்கிப் போயின. இவர்கள் எம்மாத்திரம் வற்றிய ஓலை சலசலக்கும்: எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை என்பது அழிக்கமுடியாத உண்மை

எனவே தமிழா, “நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம். இனி நமக்கு வேறொன்றும் வேண்டுவதில்லை; நடப்பது நம் தமிழ் ஆட்சி: ஆளுவது நம் தமிழன்” என்றெல்லாம் கனவுலக வாழ்க்கையின்