பக்கம்:வேமனர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடைய பண்ணை அலுவல்களைச் சோரவிடவும் செய்வார். உயர் வருணத்தார்களின் பகட்டான போலித்தனச் செயல்களை வெறுத்து எல்லோருடனும் எளிதாகக் கலந்து பழகுவார். பறவைகள் விலங்குகள் இவற்றின்மீது பற்று மீதூர்ந்து நிற்கிறார். பறவைகளில் காக்கையும் கூகையும் (ஆந்தை) விலங்குகளில் நாயும் பன்றியும் கழுதையும் அவருக்குப் பிடிக்காதவை. பேச்சில் கள்ளமற்றும் முடிவெடுப்பதில் சட்டென்றும் செயலில் துணிவு கொண்டும் வெளிச்செயல்களில் கருத்துடையவராகத் திகழ்வார். தன்னைப் பிறர் அவமதித்தலையோ கீழ்த்தரமான சமூகக் கொடுமைகளையோ அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஊரில் எளியவரைக் கொடுமை செய்யும் முரடர்களுடன் அடிக்கடி மோதுவார். ஏதாவது ஒரு செயல் நோக்கத்தை மேற்கொண்டால் அது முடியும்வரை போரிட்டுத் தீர்ப்பார். அவர்தம் உயர் எழுச்சிகள் அவர்தம் தந்தையாரால் மூர்க்கத்தனம் எனத் தவறாகக் கறுதப்பெற்றன.

வேமனர் தம் பெற்றோர்களிடம் அன்பையும் நன்மதிப்பையும் காட்டினார். அவர்தம் அன்னையாரின் அன்புக்குரிய செல்லக் குமாரர் ஆவர். அவரும் தன் செல்வன் தாராளமாகப் பாலும் தயிரும் திரட்டியெடுத்த வெண்ணெயும் கலந்த உணவை விரும்புகின்றான் என்பதை அறிந்துகொண்டு அவற்றைப் போதுமான அளவு வழங்குவார். அவர்தம் தந்தையார் மைந்தனின் முரட்டுத்தனத்தைப்பற்றிக் குறைகூறுங்கால் அவர்தம் அன்னையார் அவருக்காக ஏதாவது சாக்கு போக்குகளைக் கூறி அக்குறையைத் தவிர்ப்பார். தனிமையில், இத்தகைய எல்லாவகைத் தொல்லைகளையும் விளைவித்தல் கூடாது என்று மகனை வற்புறுத்தி வேண்டுவார். முன்குமரப்பருவம் தாண்டும் வரையிலும் வேமனரின் வாழ்க்கை கவலையற்றும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதன் பிறகு திடீரென்று அன்னை இறப்பதால் அவருக்குப் பெருந்துயர் வந்தெய்துகின்றது. இருட்படலம் அவரைச் சூழ்கின்றது; தனிமையையும் கைவிடப் பெற்ற நிலைமையையும் அவர் உணர்கின்றார்.

ஆழமானதும் கூரியதுமான துக்கத்தினின்றும் வேமனர் மீள்வதற்கு முன்னர், அவர் தந்தையார் இரண்டாவது திருமணம் செய்துகொள்கின்றார். இது வேமனருக்குத் தாங்கொளுத் துயரை விளைவிக்கின்றது. தன் தந்தையார் 'மனைவியிலி'யாக இருத்தல் வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் 'ஏன் இந்த நாணயமற்ற அவசரம்?' எனச் சிந்திக்கின்றார் என் அன்னையார்மீது அவர் உண்மையான அன்பு கொண்டிருக்கவில்லையா? தான் ஒரு சிறு பருவப் பெண்ணை மணந்துகொள்ளலாம் என்று அவள் சாவதற்காகக் காத்திருந்தாரா? இத்தகைய எண்ணங்கள் கடுமையானவை என்றும் கொடியவை என்றும் கருதி

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/47&oldid=1244255" இலிருந்து மீள்விக்கப்பட்டது