பக்கம்:வேமனர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூல்முகம்

வேமனரைப்பற்றி ஒரு தனிக்கட்டுரை சாகித்திய அக்காதெமிக்கு எழுத ஒப்புக்கொண்ட பிறகு, இது ஒரு கடினமான பணியாக இருக்குமென்பதை உணர்ந்தேன்; என்னுடைய அச்சங்கள் உண்மையென்றே ஆயின. வேமனரைப்பற்றித் தெலுங்கில் சில நூல்கள் கிடைக்கின்றன என்பதற்கு ஐயம் இல்லை. ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை நம்பத்தகாத கட்டுக்கதைகளை மெய்ப்பிக்கப் பெற்ற உண்மைகளாகவே எடுத்தோதுகின்றன. தெலுங்கில் கிடைக்கக்கூடிய ஆய்வு முறையிலமைந்த ஒரே ஒரு வாழ்க்கை வரலாறு—ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ அத்தகைய நூல் ஒன்றும் இல்லை—மனநிறைவு அடையத்தக்கதாக இல்லை. அதன் ஆசிரியர் தன்னுடைய முடிவுகளுக்கு என்றே செய்திகளைத் தேடியலைகின்றார். வேறு குறைகட்கும்கூட அவர் குற்றம் புரிந்தவராகின்றார், சென்ற தலைமுறையில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த சிலக்கமர்த்தி இலட்சுமி நரசிம்ஹம் என்பவரால் வேமனரைப்பற்றி எழுதப்பெற்ற நூல் ஒன்றினைத்தான் மூலங்களாகக் கொண்ட நூல்களின் பட்டியலில் சேர்த்துக் காட்டுகின்றார். அதிகமான காலத்தையும் முயற்சியையும் வீணாக்கிய பிறகு அவர் நூல் என்று குறிப்பிட்ட ஒன்று கட்டுக்கதைகள் அடங்கிய பெரிய நூலொன்றில் வேமனரைப் பற்றிய கட்டுக்கதைகளின் புதிய வடிவமாக ஒரு சிறு இயல் இருப்பது தெரிய வந்தது. வேறொரு விஷயத்தில் கூட அவர் என்னை அதிக சங்கடங்களுக்கு ஆளாக்கினர். தாம் எழுதிய வேமனரின் வாழ்க்கை வரலாற்றில் ஓரிடத்தில் மெக்லியன் என்ற ஒருவரைக் குறிப்பிடுகின்றார், அவர் குறிப்பிட்ட எழுத்தாளர் தான் செவிவழிச் செய்தியாக அறிந்த ஒருவர் என்றும், அவர் மெக்லியன் என்ற பெயருடையவர் அல்லர் என்றும், ஆனால் 1866-இல் வேமனரைப் பற்றிக் கட்டுரையொன்றினை வெளியிட்டவர் மேஜர் ஆர். எம். மெக்டனால்டு என்பவர் என்றும் பல மாதங்கட்குப் பிறகு என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

தாம் ஒரு வரலாற்று ஆசிரியர் என்று குறிப்பிடும் மற்றொரு தெலுங்கு ஆசிரியரும் கிட்டத்தட்ட தவறான வழியையே காட்டுகின்றார், தாம் எழுதிச் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட சிறு நூலொன்றில் சர். வில்லியம் ஜோன்ஸ் என்பார் வேமனரை “இந்தியாவின் பிளேட்டோ” என்று குறிப்பிட்டதாகக் கூறுகின்றார். புதுடில்லியிலுள்ள நாடாளுமன்ற நூலகத்தில் ஜோன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/8&oldid=1241825" இலிருந்து மீள்விக்கப்பட்டது