பின்னிணைப்பு-1
மொழி பெயர்ப்புகள்
கவிதை, எக்கவிதையாயினும், மொழிபெயர்ப்பில் குறைவுடையதாகின்றது. மொழிபெயர்ப்புகளில் மிக நல்லதொன்றிலும் சொல் இசையையும் அதன் பிற நுண்ணிய எழில்களையும் எடுத்துக் காட்டல் இயலாது. அடியிற்காணும் வேமனரின் கவிதைகளின் (ஆங்கில) மொழிபெயர்ப்புகளை நோக்குங்கால் இந்த உண்மையை நினைவில் இருத்துதல் வேண்டும். யாப்புடன் கூடிய மொழி பெயர்ப்புகள் சார்ல்ஸ் இ. கோவருடையவை. உரைநடையிலுள்ள மொழிபெயர்ப்புகள் சார்ல்ஸ் ஃபிலிப்ஸ் பிரெளன் என்பாருடையவை. இவற்றுள் நாம் வேமனரின் மொழி மரபின் நயத்துடன் அவருடைய இசை ஒழுக்கு, சந்த இயக்கம், பொருள் செறி திட்பம் ஆகியவற்றையும் இழந்த நிலையைக் காண்கின்றோம். ஆயினும் மொழிபெயர்ப்பில் அவருடைய கவிதையில் செறிந்து காணப்பெறும் இடியையும் மின்னலையும் காட்டி அழகினையும் ஆற்றலையும் தரும் என்று நம்பப்பெறுகின்றது.
[தமிழ்மொழி பெயர்ப்பு : இயன்றவரை தெலுங்கு மூல நூலைக்கொண்டு திருந்திய வடிவம் தர முயன்றுள்ளேன். தெலுங்கு மொழியின் நயம் எல்லாவற்றையும் தமிழில் கொண்டுவர முயலுங்கால்: தமிழ் மொழியின் நயம் முன்வந்து விடுகின்றது. ஒரு மொழியின் நயத்தைப் பிறிதொரு மொழியின் நயத்தால் புலப்படுத்த இயலாது என்ற உண்மை இதனால் தெளிவாகின்றது.]
பொய்ச்சமயம்:
“1. நாடொறும் மறையினைக் கற்பினும் கேட்பினும்
நயமிலாக் கொடியவன் புனிதமெய் திடுவனோ?
நாடொறும் கரியினைப்* பாலினற் கழுவினும்
நன்னிறம் எய்துமோ? தன்னிறம் மாறுமோ? ”
87