பக்கம்:வைகையும் வால்காவும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிமுகம்


“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று வள்ளுவரைப் போற்றிப் புகழ்கின்றான் புதுயுகத்து மாகவிஞன் பாரதி.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்து, தனது காலச் சமுதாயக் கோட்பாடுகளையும், வாழ்க்கை நெறிகளையும், என்றைக்கும் பொதுவான அறமுறைகளையும் வகுத்து அவர் அருளிய நூல் நிலைபேறுடையதாய், தமிழிலக்கியக் கருவூலத்தின் மாமணியாய்த் திகழ்கின்றது.

மனித சமுதாயத்தின் பன்னெடுங்காலமாக அறங்கள், சட்டங்கள், பண்பாடுகள் எனப் போற்றப்பட்ட பல நிதிகளை, கட்டுப்பாடுகளை, மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களைக் கால காலமாக வருத்தி, ஊமைகளாக்கி அவர்களது முதுகில் மிகச் சிலர் ஏறிச் சவாரி செய்வதற்குச் சாதகமாக இருந்த பல கோட்பாடுகளை, விதிகளை அக்டோபர் புரட்சியின் மூலம் 'சடசட'வென நொறுக்கி எறிந்துவிட்டு மனித குல வரலாற்றிலேயே முதன் முறையாகப் பாட்டாளி மக்களின் கையில் செங்கோலை ஈந்து புத்தறம் வகுத்தவர் லெனின், இவர் வள்ளுவர் காலத்துக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு பிற்பட்டவர்.

எனவே வள்ளுவரிலிருந்து புறப்பட்டு இலெனினுக்கு வந்து சேர சமுதாய வரலாற்றில் சுமார் இரண்டாயிரமாண்டுக் காலமாகிறது.

வள்ளுவர் அற நூல் வகுத்த ஆன்றோர், இலெனின் புதியதோர் உலகத்தையே போராடிப் படைத்த புரட்சித் தலைவன். சமுதாயப் புரட்சித் தத்துவத்தை விளக்கிப் பல நூல்களை இயற்றிய ஆசான்.

எனவே, இவ்விருவரையும் ஒப்புக் காண்பது எளிதான பணியன்று. இப்பணிக்கு இருவரது நூல்கள், கொள்கைகள் ஆகியவற்றில் தெளிவும், புலமையும் வரலாற்று ஞானமும் கட்டாயம் தேவை.