பக்கம்:வைகையும் வால்காவும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏனெனில் இது வள்ளுவர் சிறப்பைக் கூறப் புகுந்த நூல் அல்ல. அவர் நூலின் அடிப்படையாய் இலெனின் பெருமையை உணர்த்தும் நூலென்பதே பொருத்தம் என்பது என் கருத்து.

என் அருமை நண்பர் 'தமிழ்ப்பா நிலவு' கோவேந்தன் நூறு குறட்பாக்களைப் பெய்து, முதலிரண்டடியாக்கி, அவ்வடிகளின் பொருளியைபுக்கு ஏற்றவாறு இலெனினது சாதனைகள் கொள்கைகளைப் பின்னீரடிகளில் அடியில் எழுதி வெண்பா வடிவில் தந்துள்ளார்.

இவற்றில் வள்ளுவர் நூலிலும் இலெனினது வரலாற்றுச் சாதனைகளிலும் கோட்பாடுகளிலும் நூலாசிரியருக்குள்ள சிறந்த புலமை தெளிவாகப் புலனாகின்றது.

“பிறர்க்கின்னா” என்ற குறளடிகளுடன், “ஏழையர் இன்னலில் இன்புற்றார் வெங்கொடியர் பீழையுறப் பேர்த் தான் லெனின்” என்று லெனினைப்பற்றி இசைவுற எழுதிய குறளும், “எண்ணித் துணிக கருமம்" “காலம் கருதி இருப்பர்” “இவறலும் மாண்பிறந்த” “ஓர்ந்து கண்ணோடாது” “பெருமைக்கும் ஏனைச்” “ஊழையும் உட்பக்கம்” “இன்பம் விழையான்” “எண்ணிய எண்ணியாங்கு” “பிணி இன்மை” முதலிய குறள்களைக் கொடுத்து பின்னிரு அடிகளில் இலெனினைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பவைகளும் சமயமறிந்து பாராட்டத் தக்கவை.

சங்க நூல்கள் இலக்கணங்கள் முதலாக இன்றைய தமிழிலக்கியம் வரையில் ஆழ்ந்த புலமையும் உலகின் இன்றைய புரட்சிப் போக்குகளிலும் அவற்றைப் பிரதிபலிக்கும் நவீன இலக்கியங்களிலும் பெரும் ஈடுபாடும் தெளிவும் கொண்ட த.கோவேந்தன் இன்னும் பல புதிய பணிகளில் ஈடுபட்டுத் தமிழுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருந் தொண்டாற்றுவார் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அவர் முயற்சிகள் வெற்றி பெறுக என வாழ்த்துகிறேன்.

சென்னை,

கே. சி. எஸ். அருணாசலம்

26-4-1972.

4