பக்கம்:வைணமும் தமிழும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வைணவமும் தமிழும்


முடிந்ததாகவே சொல்லிவிட்டால், 'அப்படியா? முடிந்து போய்விட்டாளா? இனிப் போய் நாம் என்ன செய்வது?' என்று சொல்லி ஒரு முழுக்கு போட்டுவிட்டு நிற்பன். அப்படியின்றி ‘அரைகுறையத் தலைகுறைய ஆனைக்கு உதவ ஓடி வந்தாற் போலே கடுக ஒடி வரும்படியாகச் சிறிது பசையிருப்பதாகச் சொல்லுங்கள்' என்கின்றாளாயிற்று.

'பூவை' என்ற பறவையிடம் பேசுகின்றாள் பராங்குச நாயகி. "ஏற்கெனவே உன்னை வேண்டிக் கொண்டிருந்தும், எனக்காக நீத தூது செல்லாது அசட்டையாய் இருந்து விட்டாய் "நோயானது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்” என்கின்றாள்.

சாயலொடு மணிமாமை
தளர்ந்தேன்நான் இனியுனது
வாயலவில் இன்னடிசில்
வைப்பாரை நாடாயே (8)

[மணிமாமை-அழகான நிறம்; இன்னடிசில்-மதுரமான இரை உணவு]

என்று தற்கால நிலையைக் கூறுகின்றாள். 'சாயல்' என்பது சமுதாய சோபை; இது வடமொழியில் 'இலாவண்யம்' எனப்படும்; மணிமாமை என்பது அழகு 'இவ்விரண்டும் நீங்கப் பெற்றேன்' என்கின்றாள். இங்ஙனம் இவள் சொல்லக் கேட்ட பூவை 'இதோ விரைந்து சென்று எம்பெருமானுக்கு அறிவிக்கின்றேன்' என்று புறப்படத் தொடங்கும்போது இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே