பக்கம்:வைணமும் தமிழும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6.வைணவ உரைவளம்

வைணவம் உரைவளத்தால் ஏற்றம்பெற்றது என்றும், சைவம் சாத்திர வளத்தால் சிறப்புற்றது என்றும் பெரியோர்கள் பணிப்பதுண்டு. இந்த இரண்டு சமயங்களையும் நுணுகி ஆராய்வாருக்கு இது தெளிவாக புலனாகும்.

உரையாசிரியர்கள்: இவர்களை வைணவப்பெருமக்கள் 'வியாக்கியாதாக்கள்' என்று குறிப்பிடுவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களையும் அவற்றின் பொருள் சிறப்புகளையும் ஆழ்வாரிடம் நேரில் பெற்று அவற்றை உலகில் பரவச் செய்தவர் நாதமுனிகள். ஆதலின் அப்பெரியாரையே முதல் உரையாசிரியராகக் கொள்வது வைணவ மரபு. அவர் முதலாக வந்த அவ்வுரை உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, ஆளவந்தார் (நாதமுனிகளின் பேரர்), பெரியநம்பிகள், திருமாலையாண்டான், இராமாநுசர் காலம்வரையிலும் கேள்விவழியாகவே வழங்கி வந்து எம்பெருமானார் காலத்தில் தான் 'வியாக்கியானம்’ என்ற பெயரால் எழுத்து வடிவம் பெற்றது. இங்ஙனம் உரை வளர்ந்த வரலாற்றை இவண் காண்போம்.

1. ஆறாயிரப்படி : இராமாநுசர் திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்கள் செழித்து வளரத் திருவுள்ளங்கொண்டார். முதன்முதலாகத் திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்ற தம் சீடரைக் கொண்டு 'ஆறாயிரப்படி' என்ற வியாக்கியானம் இட்டருளினார்.