பக்கம்:வைணமும் தமிழும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

139



திருவாய்மொழி 'பகவத் பிரபந்தம்' என்று திருநாமம் பெற்று வழங்குவது போன்று, இவ்வியாக்கியானங்களின் தொகுதியும் 'பகவத் விஷயம்' என்றே போற்றப்பெறுகின்றது. மேலும் திருவாய்மொழியும், இந்த வியாக்கியானங்களும் எந்தவிதக் குற்றமின்றி ‘திருமாலவன் கவி' (திருவிரு.48) என்று முற்றிலும் பகவான் விஷயமாகவே இருக்கையால் இவற்றிற்கே ‘பகவத்விஷயம்’ என்ற சிறப்புப் பெயரை வைத்துப் போற்றினார்கள் என்றலும் பொருந்தும்.

வேறுசில உரைகள் : பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு வியாக்கியானம் இட்டருளியதுபோலவே ஏனைய பிரபந்தங்கள் அனைத்திற்கும் வியாக்கியானம் செய்தருளினர். பெரியாழ்வார் திருமொழியின் முதல் நான்கு பத்திற்கு இவர்தம் வியாக்கியானம் கிடைக்கவில்லை. அந்த நான்கு பத்திற்கு மட்டிலும் மணவாளமாமுனிகள் வியாக்கியானம் செய்துள்ளார். நஞ்சீயர், அழகிய மணவாளசீயர், அழகிய மணவாளப் பெருமாள் நயினார் என்னும் பெரியோர்களும் 'திருப்பாவை அமலனாதிபிரான்', 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' ஆகியவற்றிற்கு வியாக்கியானம் இட்டருளினர். மணவாளமாமுனிகளின் சீடர் 'அப்பிள்ளை’ என்பார் ‘இயற்பா'வுக்கு அருளிச் செய்த வியாக்கியானமும் உண்டு. மணவாளமாமுனிகளும், பிள்ளை லோகாச்சாரியசீயரும் இராமாநுச நூற்றந்தாதிக்கு வியாக்கியானம் செய்துள்ளனர். இவை தவிர, முப்பத்தாறாயிரப்படிக்கு ஜீயர் அரும்பதம் அடைய வளைந்தான் அரும்பதம் என்ற இரண்டு குறிப்புரைகளும் உள்ளன.