பக்கம்:வைணமும் தமிழும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

9



இவற்றில் கூறப் பெறும் செய்திகள் : திருமால் ஆயிரம் பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடன்மீது பள்ளி கொண்டவன்; பூவைப் பூவண்ணன்; திருமகள் விரும்பியமர்ந்த திருமார்பினன்; திருமார்பில் கெளத்துவ மணியை (ஸ்ரீ வத்சம்) யுடையவன்; பொன்னாடை புனைந்தவன்; கருடக் கொடியையுடையவன்; நான்முகனுக்கும் காமனுக்குத் தாதை, திருவாழியை வலக்கையில் தரித்திருப்பவன் (1).

கேழல் உருவைக் கூறும் உயிர்கள் உளவாதற்பொருட்டு வராகத் திருக்கோலம் கொண்டவன்; வெண்ணிற முள்ளவனுக்குப் பிறப்பு முறையால் முதியவன்; உயிர்கள் தோறும் அந்தர்யாமியாய் இருப்பவன்; ஆழிப்படையால் அவுணர்களின் தலைகளைப் பனங்காய்கள் போல் உருளச்செய்தவன்; ஆழிப்படையின் உருவம் பகைவர் உயிருண்ணும் கூற்றையும், அதன் நிறம் சுட்ட பொன்னோடு விளங்கிய நெருப்பையும் ஒக்கும்; திருமேனி நீலமணியையும் கண்கள் தாமரை மலர்களையும் ஒக்கும்; கருடக் கொடியையுடையவன்; தேவர்கட்கு அமிழ்தம் வழங்க வேண்டும் என்று திருவுள்ளத்தில் கொண்ட அளவில் அதன் பயனால் மூவாமையும் ஒழியா வலியும் சாவாமையும் உரியனவாயின (2).

அன்பராயினார் பிறவிப் பிணியை அறுக்கும் மாசில் சேவடியை உடையவன்; நீலமணி போன்ற திருமேனியையுடையவன்; கருடனின் அன்னையாகிய விநதையின் இடுக்கண் தீர்த்தவன், கேசி என்னும் அரக்கனை மாய்த்தவன்; மோகினி உருவம் கொண்டு அமரர்கட்கு அமுதம் அளித்தவன்; இவனுக்கு ‘உபேந்திரன்' என்ற திருநாமமும் உண்டு; நான்முகனின் தந்தை; அவனைத் தனது திருவுந்தியில் தோற்றுவித்தவன்.