பக்கம்:வைணமும் தமிழும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

15



என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி : இராமன், தானும் மற்ற வாணர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது. இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.

(iii) அகம் -220இல் வரும் வரலாறு : பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது. பரசுராமன் திருமாலின் பத்து அவதார மூர்த்திகளில் ஒருவன்.

(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது. பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில், “இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும் இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது” என வருதலான் அறியப்படும்.