பக்கம்:வைணமும் தமிழும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

17



(ஊ) நற்றிணை : இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்) எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்) அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம். இங்ஙனம் தமிழ் முன்னோர் கண்ட கருத்துகள் பின்னர் ஆழ்வார்களின் கருத்துகளாக மலர்ந்தன என்று கருதுதல் பொருத்தமாகும். எடுத்துக் காட்டாக திருமங்கையாழ்வாரின்,

'பவ்வநீர் உடையாடை ஆகச் சுற்றி
பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்' (6:6:3)

என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம். இவ் விரண்டிலும் வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர - சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.