பக்கம்:வைணமும் தமிழும்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

வைணவமும் தமிழும்


ஒருவன் பிறப்பினால் சத்துவம் இராசசம் தாமசம் குணங்களையுடையவனாக இருந்தாலும் அவன் நன்னெறி அநுட்டானத்தை மேற்கொண்டு சத்துவ குணத்தை மேலாகக் கொண்ட உணவுகளைப் புசித்து வருவானாகில் விரைவில் நல்வழியை அடைந்து எம்பெருமானின் கருணைக்குப் பாத்திரமாவான் என்பது திண்ணம்.இதனை நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததனால் உடற்கட்டு, உடல்நலம், துணிவு, மனவுறுதி, பக்தி முதலிய பண்புகளை மிகுதியாகப் பெற்றிருந்தனர். இங்ஙனமின்றி இக்காலத்தவர் தான்றோன்றித்தனமாய்ச் சுவைக்கும் போகத்திற்கும் துணையான உணவு வகைகளை உண்டு தம் முன்னோர்கட்கிருந்த எல்லாவித நலன்களையும் இழந்து அற்ப ஆயுள் உள்ளவர்களாய் இருப்பது கண்கூடு. ஆகவே, நம்முன்னோர்கள் உண்டு வந்த முறைப்படி சத்துவகுண உணவுப் பொருள்களை மிகுதியாகவும் இராசசகுண உணவுப்பொருள்களைக் குறைத்தும், தாமசகுன உணவுப்பொருள்களை அறவே நீக்கியும் உணவுமுறைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். வைணவப்பெருமக்கள் உணவுப் பொருள்களை வகைப்படுத்திய முறை வருமாறு;

(அ) சத்துவகுணப்பொருள்கள் : எல்லாவிதப் பச்சரிசி, தினை, உளுந்து, பச்சைப்பயிறு, பொரி, அவல், சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம்,வெந்தயம்,வெல்லம்,சர்க்கரை, கற்கண்டு, தேன், திராட்சைப் பழம், பேரீச்சம்பழம், சாதிக்காய், சாதிப்பத்திரி, ஏல அரிசி, பச்சைக் கர்ப்பூரம், குங்குமப்பூ வாதுமை, நல்லெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கொத்தவரைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், வாழைக்காய், பலாக்காய், விளாம்பழம், இலந்தைக்காய், பழம், களாக்காய், மாங்காய்,