பக்கம்:வைணமும் தமிழும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

21



தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)

என்பதில் தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

(2) அவதாரங்கள் : எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை. ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே. அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம். நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம். திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று. கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேசவாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும், கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்திவகையால்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)

என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல்

அறியலாம்.