பக்கம்:வைணமும் தமிழும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

29



மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டெழுந்து
செல்வக் கடம்பமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்!
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். (1)

கார்காலம் தோன்றியதைக் கூறுவது இப்பாடல் மல்லரை வென்ற கண்ணனின் நிறம்போல் இருளைச் செய்து எழுந்து கடப்பந்தாரினை விரும்பிய முருகனின் வேல்போல் மின்னி விசும்பில் இயங்குகின்ற முப்புரங்கனை எய்தவன் கொன்றைத்தார் மலரும்படியாக வலமாகச் சுழன்று எழா நின்றது கார்காலம். இதில் கண்ணனைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது.

(ஐ) பழமொழி நானூறு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இந்நூலாகும். இதன் ஆசிரியர் மூன்றுறையரையனார். இது நானுறு வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு பழமொழியைக் கொண்டு திகழ்கின்றது. இதில் ஒரு வெண்பா:
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல் (42)

பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதில்லை என்ற கருத்தைக்கூறுகின்றது இவ்வெண்பா. பசுக் கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகட்குத் தக்க இடையன் என்றே உலகம் சொல்லும் என்பது இவ்வெண்பா விளக்கும் கருத்து. கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்த வரலாறு இதில் வருவதைக் காணலாம்.