வைணவமும் தமிழும்
33
இந்த இரு தலங்களும் வழிபாட்டிற்குரியவையாக, இருந்திருத்தல் வேண்டும். அரங்கநாதப் பெருமான் (பெரிய பெருமாள்) வீடணனின் பிரதிட்டையென்று அத்தல புராணம் கூறுவதால், இராமாயணகாலத்திலேயே திருவரங்கம் தலமாகத் திகழ்ந்திருத்தல் வேண்டும். இவ்வாறு இராமாயண காலத்திலிருந்தே திருமால் வழிபாடு தென்னாட்டிலிருந்து வந்தமை பற்றித் தெளியலாம்.
இனிச் சிலப்பதிகாரத்தில் திருமால் குன்றமும் அதன் கண் உள்ள பிலத்துவாரமும் அவண் இருந்த பவகாரணி முதலிய மூன்று பொய்கைகளும் கூறப் பெற்றுள்ளன.[1] திருமால் குன்றம் என்பது அழகர் மலை இம்மலை திருமாலிருஞ்சோலை மலை என்றும் ஆழ்வார் பாசுரங்களால் அறியப்பெறும் மதுரைக்கு வருங்கால் பல கோயில்களைக் கூறிய இளங்கோ அடிகள் கருடனைக் கொடியாகவுடைய திருமால் கோயிலையும் மேழிப் படையை வலமாக ஏந்திய நம்பிமுத்தபிரான் கோயிலையும் குறிப்பிடுவர்.[2] இன்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் பலதேவன் கோவிலும், திருமால் கோயிலும் இருந்தமையைக் குறிப்பிடுவர் அடிகள்.[3] இவற்றால் திருமால் வணக்கம் தென்னிந்தியாவில் மிகப் பழங்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்பது தெளியப்படும். மேலும் மாங்காட்டு மறையோன்,
- நீள்நிலம் கடந்த நெடுமுடி அண்ணல்
- தாள்தொழு தகையேன் போகுவல்[4]