பக்கம்:வைணமும் தமிழும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வைணவமும் தமிழும்



என்ற வேதாந்த தேசிகன் வாக்கினால் அறியலாம். திருமழிசைப்பிரான் அருளிய இரண்டு பிரபந்தங்களில் திருச்சந்தவிருத்தம் முதலாயிரத்திலும் 'நான்முகன் திருவந்தாதி' இயற்பாவிலும் சேர்க்கப் பெற்று முறைப்படுத்தப் பெற்றுள்ளமையை நோக்கினாலும் முதலாயிரத்திலுள்ள பிரபந்தங்கள் அனைத்தும் இசைப்பாக்களே எனத் துணிய இயலும். எனவே, இயற்பா ஒழிந்த ஏனைய மூன்று தொகுதிகளும் இசைப்பாத் தொகுதிகள் என்பது தெளிவாகும்.

மேலே கூறப்பெற்ற முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி இயற்பா என்ற பாகுபாடும் பிரபந்தங்களின் அமைப்பு முறையும் நாதமுனிகளின் காலத்தில் ஏற்பட்டவை. பிரபந்தங்களின் எண்ணிக்கை இத்தனை என்பது நாதமுனிகள் காலத்தில் வழங்கி வந்ததாகத் தெரியவில்லை. திருவரங்கத் தமுதனார் இராமாநுசர்மீது அருளியுள்ள 'இராமாநுச நூற்றந்தாதி' இராமாநுசர்காலத்தில் இயற்பாத் தொகுதியுடன் 24வது பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டது என்பதைக் 'கோயிலொழுகு’ என்ற நூலின் வாயிலாக அறிகின்றோம். அக்காலத்திலிருந்து முதலாயிரத்தில் கண்ணிநுண் சிறுத் தாம்பைப் போல் (அடியார்மீது-நம்மாழ்வார் மீது - பாடியது) இயற்பா இறுதியில் உள்ள 'இராமாநுச நூற்றந்தாதி' எங்கணும் பெரு வழக்காக ஒதப்படுவதாயிற்று. இன்றும் அவ்வழக்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. திருக்கோயில்களில் இயற்பாவின் இறுதியில் இப்பிரபந்தத்தை அநுசந்தித்து வருகின்றனர். இதனால் இந்நூற்றாந்தாதி (அடியார்மீது - இராமாநுசம் மீது - பாடியது) இயற்பா பிரபந்தங்களுள் ஒன்றாக அமைந்துவிட்டமை புலனாகும்.