பக்கம்:வைணமும் தமிழும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

49



தெளிவு. இந்த முறையை மேற்கொண்டு தமது பிரபந்தசாரம் இரண்டாவது முதல் பதினான்காவது வரையிலுமுள்ள பதின்மூன்று பாடல்களில் ஒவ்வொரு ஆழ்வாருடைய திருமொழிகளையும் அல்லது திருமொழியையும் தனித்தனியே அதனதன் தொகை இலக்கத்தையும் கூறுகின்றார். அவற்றில் திருமழிசைப்பிரான், நம்மாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், என்ற ஐவர்களைப் பற்றிய பாசுரங்களில் அவரவர் அருளிச்செய்த பிரபந்தங்களைத் தனித்தனியே எடுத்து அவற்றின் தனித்தனி தொகை இலக்கத்தைக் கூறியுள்ளார். முதலாழ்வார்கள் மூவர், மதுரகவிகள், குலசேகரப்பெருமாள், திருப்பாணாழ்வார், திருவரங்கத்து அமுதனார் (இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்தவர்) என்று இந்த எழுவர்பற்றிய பாசுரங்களில் அவர்கள் ஒவ்வொரு பிரபந்தத்தையே செய்தவர்களாதலின் வகை ஏதுவுமின்றி அதனதன் தொகை இலக்கமே கூறப்பெற்றுள்ளது. ஆயின் பெரியாழ்வார்பற்றின பாடலில் வகை எதுவுமின்றித் தொகை மட்டிலும் நானூற்று எழுபத்து ஒன்று இரண்டு (470+1+2=473) என்று கூறியுள்ளதை நோக்கும்போது தேசிகரின் திருவுள்ளத்தில் திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தம் அன்று என்றிருந்தமை தெளிவாக அறியக்கிடக்கின்றது. இவர் இராமாதுச நூற்றந்தாதியைச் சேர்த்துத் திவ்விய பிரபந்தம் இருபத்து நான்கு பிரபந்தங்களைக் கொண்டது என்ற கொள்கையினர்;

(4) அப்பிள்ளை ஆசிரியர் :

தேசிகருக்குக் காலத்தால் சற்றுப் பிற்பட்டவரான இவர் திருப்பல்லாண்டைத் தனிப்பிரபந்தமாகக் கொண்டவர். இதனை,