பக்கம்:வைணமும் தமிழும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

53



என்பது மேலும் வலியுறுகின்றது என்றும் கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட உபதேசரத்ன மாலைப் (161920) பாசுரங்களில் இரண்டாவது தொடரிலுள்ள 'திருப்பல்லாண்டு' வேதத்திற்கு ‘ஓம்’ என்ற பிரணவம்போல் திவ்வியப் பிரபந்தத்தின் பொருளுக்கெல்லாம் சுருக்கமாகவும் மங்கள ரூபமாயும் இருப்பதாகக் கூறுகின்றதேயன்றி தெளிவாக அஃது ஒரு பிரபந்தம் எனக் கூறாமையாலும், அங்ஙனமே திருக்கோயில்களில் இருந்துவரும் வழக்கும் அது தனிப் பிரபந்தம் என்பதற்கு ஆதாரம் அல்லாமையாலும் இரண்டையும் தக்க சான்றுகளாகக் கொள்வதற்கில்லை. மேலும், 'உபதேசரத்னமாலை' ஆழ்வார்கள் அவதரித்த நாள்கள், மாதங்கள், தலங்கள் முதலிய செய்திகளைத் தருகின்றதேயன்றி அவர்கள் அருளியுள்ள பிரபந்தங்களைப் பற்றி யாங்கணும் கூறவில்லை. ஆயினும், 'திருப்பல்லாண்டு' என்ற திருமொழி அகண்ட திவ்வியப் பிரபந்தத்தின் தொடக்கத்திலிருப்பதாலும் அது வேதத்தின் பிரணவம்போல் திகழ்வதாலும் அதற்குத் தனிப் பெருமை உள்ளது. திருக்கோயில்களில் முதலில் ஒதப் பெறுவதற்கு அதனையே காரணமாகவும் கொள்ளலாம். 'திரு' என்ற அடைமொழியால் அது சிறப்பிக்கப் பெறுவதற்கும் அதுவே காரணமாகும்.

(5) பாசுரங்களின் தொகை :

நாலாயிரத்தின் பாசுரத்தொகை பற்றிய இரு வேறு கருத்துகளையும் ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவாறு இருபத்து மூன்று பிரபந்தங்களடங்கிய திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரத்தொகை