58
வைணவமும் தமிழும்
என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமை ஈண்டுக் கருதத்தக்கது. மேலும் பெரிய திருமொழி 1084 பாசுரங்களால் அமைந்திருந்தும் "பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்" (தனியன்) என்று எம்பார் அருளிச் செய்துள்ளதையும் 108 பாசுரங்களைக் கொண்ட அந்தாதியை (எ.டு. இராமாநுச நூற்றந்தாதி) நூற்றந்தாதி என்று வழங்கப்பெறுவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. எனவே 4000க்குச் சில பாசுரங்கள் குறைந்துள்ள திவ்வியப் பிரபந்தத்தை 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' என்று வழங்குவது எவ்வாற்றானும் பொருந்துவதாகின்றது.
பொதுவாகக் கூறினால் இப் பிரபந்தங்கள் யாவும் சமயச்சார்புடையன. ஆகவே, பாசுரங்கள் பக்தி நிலையையும், சமயக் கொள்கைகளையும் இறைவன் உயிர்கள் அசித்துக்கள் இவர்களின் தன்மைகளையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. ஆயினும் பாசுரங்கள் யாவும் இலக்கிய நயம் செறிந்தவையாக அமைந்துள்ளனவாதலால் சமயச் சார்பற்றவர்களும் பிற சமயத்தினரும் அவற்றை விரும்பிக் கற்றுப் போற்றுகின்றனர்.