பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வ.உ.சி.

வேண்டும் என்ற விருப்பமே ஜட்ஜ் பின்கேயின் நோக்கில் குற்றமாகிவிட்டது.

பாரதியார் சென்னையில் இருந்து வெளியிட்ட இந்தியாவில் தீர்ப்பைக் கண்டித்து எழுதினார். இந்தியா பத்திரிகை அரசாங்க உத்திரவால் மூடப்பட்டது. நமது மாபெரும் கவிஞர் பாண்டிச்சேரிக்குச் சென்று வாழ வேண்டியதாயிற்று. தமது அரசியல் வாழ்க்கையைத் தொடரப் பிரெஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரிக்குச் சென்று வசிப்பது தவிர வேறு வழியில்லை. நிறுத்தப்பட்ட இந்தியாவை, பகீரத முயற்சி செய்து வெளியிடுவதில் தேசபக்தக் குழுவும் பாரதியாரும் வெற்றியடைந்தனர்.

இங்கிலாந்தில் இந்திய அமைச்சராக இருந்த மார்லி பிரபு, இந்திய வைஸ்ராயாக இருந்த மன்றோ பிரபுவிற்கு எழுதினார்:

தூத்துக்குடி மனிதர்களுக்கு அளித்திருக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த தபாலில் தீர்ப்பு எனக்கும் கிடைக்கும். இத்தகைய முட்டாள்தனமான தீர்ப்பை நான் ஆதரிக்க முடியாது. இத்தகைய முட்டாள்தனங்களையும், தவறுகளையும் திருத்துவதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டியதுதான். ஆனால் குற்றத்திற்கு மிக அதிகமான தண்டனையால் அமைதியும் ஒழுங்கும் நிலைப்பதற்குப் பதில், நமது நீதித் துறையிலேயே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.

அப்பீலில், தண்டனை 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள், பின்கேயின் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். தண்டனையை மட்டும் குறைத்தனர்,

உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டனர்:

பிள்ளையின் வாழ்க்கையின் அரசியல் நோக்கம், ஆங்கிலேயர்களை இந்திய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றுவதாகும். இந்நோக்கத்தை மறைக்கவே அவருடைய மற்ற நடவடிக்கைகள் இருந்தன. அவர் ஒரு ராஜத்துரோகி என்ற பின்கேயின் கருத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

உயர் நீதிமன்றமும் பிள்ளையின் அரசியலை ஒப்புக் கொண்டது. ஆனால் மக்களின் சார்பில் பாரதி, வ.உ.சி.க்கு