பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வ.உ.சி.

தத்துவ நூல்கள் சில எழுதினார். ஜேம்ஸ் ஆலன் என்ற அமெரிக்கத் தத்துவாசிரியரின் நூலை மொழிபெயர்த்தார்.

அவரது உடல்நிலை சிறை வாழ்க்கையின் கடுமையான சூழ்நிலையால் சீர்கேடடைந்தது. அரசியல் சூழ்நிலை அவர் சிறைக்குப் போகும்போது இருந்ததுபோல இல்லை. பழைய தலைவர்களின் செல்வாக்குக் குறைந்துவிட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் பொதுக் கொள்கைகள் உருவாகி வந்த காலம் அது. அவற்றில் பலவற்றைச் சிதம்பரம் பிள்ளையால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் எப்பொழுதும் விடுதலை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படவில்லை. அவருக்கு உடன்பாடில்லாத விஷயங்களில்கூட விலகியிப்பாரே தவிர எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. தமது மனச்சாட்சியின் வழிகாட்டுதலைப் பின்பற்றித் தமது இறுதிக்காலம் வரை பயனுள்ள ஏதாவது அரசியல் பணி, இலக்கியப் பணி, சமூக சீர்திருத்தப் பணி இவற்றில் ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு வந்தார்.

கடைசி இருபத்தைந்து ஆண்டுகள் உடல் நலிந்த நிலைமையில், அவர் இலக்கிய ஆய்விலும் வெளியீட்டிலும் நேரம் செலவிட்டார். அவர் பண்டைய இலக்கியங்கள் தமிழ் மக்களது செல்வம் என்றும் அதை ரசிக்கும் வாய்ப்பு சாமானியத் தமிழனுக்குக் கிட்டவேண்டும் என்றும் நம்பி வந்தார். அதற்காக அவற்றை எளிய நடையில் எழுதப்பட்ட உரையோடு வெளியிட ஆர்வம் காட்டினார்.

திருக்குறளுக்கு உரையெழுதியவர்களில் பரிமேலழகர் உரை படித்த பண்டிதர் வியக்க எழுதப்பட்டது. மணக்குடவர் உரை, மக்கள் மொழிக்கு நெருக்கமான நடையில் நேரடியான பொருள் கொண்டு எழுதப்பட்டது. மணக்குடவர் உரையோடு சிதம்பரம்பிள்ளை திருக்குறளின் அறத்துப்பாலைப் பதிப்பித்தார். மணக்குடவர் உரையின் நடை கடினமாக இருக்கும் இடங்களில் எல்லாம் தனது உரையை எளிய நடையில் எழுதினார். திருக்குறளை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் அவர் திருக்குறள் பதிப்பு வேலையை மேற்கொண்டார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தமிழ் நடை சாதாரணமாக, இலக்கியப் பயிற்சியில்லாத தமிழனுக்கு விளங்காது. ஆகையால், எளிய நடையில் இருந்த பழைய உரையை அடிப்படையாகக் கொண்டு நமது காலத்து மொழிநடை கலந்து உரை எழுதினார்.

இது போலவே தொல்காப்பியத்தைத் தமது உரையோடு பதிப்பித்தார். ஒழுக்க முறையில் மிக உயர்ந்த கருத்துக்கள் கொண்டவர் வ.உ.சி.