பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

விடுதலைப் போராட்டத்தின் வரலாறாக வாழ்ந்து காட்டிய வீர மறவர்கள் பலர் தமிழகத்தில் பிறந்திருக்கின்றார்கள். ஆனால், விடுதலை உணர்வுக்கு வித்திட்டுத் தமிழகத்தினரைத் தட்டியெழுப்பிப் போராட்டகளத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை வ.உ. சிதம்பரனார் அவர்களையே சாரும்.

விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையிலடைக்கப்பட்டுக் கொடுமையான தண்டனைகளை ஏற்ற முதல் தமிழர் வ.உ.சி. என்று கூறலாம். நாட்டு விடுதலையில் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் அவரே முன்னவராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கம், கூட்டுறவு இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று பல்வேறு துறைகளில் முன்னவராகத் திகழ்ந்தவர் வ.உ.சி.

திலகரது தலைமையிலான தீவிர முறைக் காங்கிரஸ் குழுவுக்குத் தமிழகத்தில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் வ.உ.சி.யும் பாரதியும் ஆவார்கள். திலகர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம் தீவிரமற்றவர்கள் பிடியில் வந்தவுடன் வ.உ.சி. போன்றவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். வ.உ.சி.யைப் பயன் கொள்ளக் காங்கிரஸ் இயக்கம் தவறிவிட்டது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறையில் இருக்கும் போதே, மக்களுடைய விடுதலை எழுச்சிக்குத் தலைமையேற்ற வ.உ.சி.யைச் சென்னையில் கூடிய காங்கிரஸ் மகாசபை கண்டித்திருக்கிறது. வ.உ.சி. சிறை செல்வதற்கு முன்னர் சூரத் மாநாட்டில் திலகருக்குத் துணையாக நின்றதுடன் தூத்துக்குடியில் தொழிலாளர்களைத் திரட்டிப் பல வேலை நிறுத்தங்களுக்கும் தலைமை தாங்கியிருந்தார். மேலும், அவர் நடத்தி வந்த நெல்லை தேசாபிமான சங்கம் முழு விடுதலை என்ற அடிப்படைத் திட்டத்தைக் கொண்டிருந்தது. அடுத்துப் பல புரட்சியாளர்களிடம் வ.உ.சி. தொடர்பு கொண்டிருந்தார். ஆங்கில அரசின்கீழ் சில பதவிகளைப் பெறுவதையே தொடக்கத்தில் திட்டமாகக் கொண்டிருந்த காங்கிரஸ் இயக்கத்தால் இவற்றை முழுமையாக ஏற்க முடியவில்லை. தொழிலாளர்களையும் பொதுமக்களையும் திரட்டி விடுதலை உணர்வுக்கு வேகமூட்டிய வ.உ.சி.யின் நடைமுறைக்கும் தீர்மானம் போட்டு வேலை வாய்ப்புப் பெற முயன்ற காங்கிரஸ் நடை முறைக்கும் முரண்பாடு இருந்து கொண்டே வந்துள்ளது.

பின்னர், காந்தியின் பல கொள்கைகளையும் நடைமுறைகளையும் ஏற்க அவரால் இயலவில்லை. இடையிடையே காந்தியின் ஒரு சில திட்டங்களை வ.உ.சி. வரவேற்றிருந்தாலும், அவருக்கிருந்த வேறுபாடு தொடர்ந்து நீடித்தது.