பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5


தமிழ் நாட்டில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) தொடங்கப் பட்டபோது, வேலைவாய்ப்புக்களில் வகுப்பு முறையில் இடம் என்ற திட்டத்தை அவர் நியாயமானதாகக் கருதினார். ஆனால், இத்திட்டத்தைக் காங்கிரசார் எதிர்த்தார்கள். விடுதலை உணர்வில் ஊறித் திளைத்த அவரால் ஆங்கில ஆதரவுப் போக்குக் கொண்ட நீதிக் கட்சியினையும் முழுமையாக ஏற்க முடியவில்லை.

சென்னைத் தொழிலாளர் சங்கம் போன்ற தொழிற்சங்கப் பணிகளில் அவர் முழு ஈடுபாடு காட்டினார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 24 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்திருத்தார். இந்த நீண்ட காலப்பகுதியில் அவர் முற்போக்கு எண்ணம் கொண்டவராகவே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் அவர் வறுமையில் வாடினார் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். முற்போக்கான எண்ணம் கொண்டவரும் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டவருமான வ.உ.சி.க்குத் தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் தலைமை எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. அவர் இறந்த பிறகுகூட முழுமையான சிறப்புச் செய்யத் தயங்கினர். அதிகார முறையில் எழுதப்பட்ட பட்டாபி சீத்தாராமையாவின் காங்கிரஸ் வரலாறு என்ற நூலில் வ.உ.சி.யைப் பற்றி ஒர் இடத்தில்கூடக் குறிப்பிடவில்லை.

இருப்பினும், வ.உ.சி. மக்கள் உள்ளங்களில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவருடைய பெயரில் தெரு இல்லாத ஊரோ நகரமோ இல்லை என்று கூறுமளவுக்கு நிலைத்த புகழ் பெற்றிருக்கிறார்.

நாட்டு விடுதலைக்காகக் கடுமையான சிறைத் தண்டனை ஏற்றவர், விடுதலை இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்ட நிலையையும் 1915இல் திலகரைச் சந்தித்து ஜெர்மன் உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றி விவாதித்ததையும் தொடர்ந்து தொழிற் சங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்ததையும் தமிழ்நாட்டுச் சூழலில் பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் சில கருத்துக்களை ஏற்று உடன்பட்டதையும், ஆனால் அதில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பாததையும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்ததையும் நுணுகிப் பார்க்கவேண்டும்.

இந்திய விடுதலைப் புரட்சி, தொழிற் சங்க இயக்கம், வேலைகளுக்கு வகுப்பு முறை இடம், தமிழ் மறுமலர்ச்சி ஆகியயாவும் இணைந்த தனியான, முழுமையான அரசியல் இயக்கம் எதுவும் அன்று இல்லாத நிலையில், வ.உ.சி. ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தாலும் அவரது சிந்தனையோட்டம் இவை இணைந்த இயக்கமொன்ன்றக் கனவு கண்டிருக்கலாம்.