பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

47


தினமும் காலையில் எழுந்து பல்மருத்துவமனைக்குக் கீர்த்திகர் செல்வார். மாலையில் தான் விடுதிக்கு வந்து சேருவார். இவ்வாறு சில நாட்கள் சென்றன. பிறகு, கீர்த்திகருடைய போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. வழக்கமாகக் காலையில் எழுந்து மருத்துவமனைக்குப் போவதை நிறுத்திவிட்டார். பொழுது வந்தவுடன் எழுபவர். விடிந்து நெடுநோரமாகியும் கூட எழாமல் தூங்கியபடியே இருந்தார். பிறகு உணவு உண்டபின்பும் விடுதியிலேயே தங்கினார். விடுதியிலே வேலை செய்யும் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு நாடகம், சினிமா, இசைக் கச்சேரி போன்ற கேளிக்கை விழாக்களிலே கலந்து கொண்டு ஆடிப்பாடி இரவு நெடுநேரம் கழித்து விடுதிக்கு வருவார். அதாவது விடுதியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து வந்தார்.

கீர்த்திகருடைய புதுமாதிரியான செயல்களைக் கண்டு சாவர்கரும், வ.வே.சு.ஐயரும் மற்ற விடுதியினர்களும் கடும் கோபமடைந்தார்கள். முதலில், கீர்த்திகருடைய எல்லா நடத்தைகளுக்கும் உதவியாக இருந்த விடுதி வேலைக்காரியைப் பணியை விட்டு நீக்கினார்கள்.

ஆனால், அவர் இதைப் பற்றிக் கவலையேதும் படாமல் அதே தெருவில் வேறு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதே வேலைக்காரியை மீண்டும் வேலைக்கு அமர்த்திக் கொண்டு அவளுடன் இரவு நேரங்களில் சுற்றி அலைந்துவிட்டு, இந்தியா விடுதிக்கு நெடுநேரம் கழித்து வந்து தங்குவார்.

இவ்விதமாகக் கட்டுமீறிய செயல்களைச் செய்துவரும் கீர்த்திகள் மீது விடுதியிலுள்ள அனைவருக்கும் சந்தேகம் வலுத்தது. உடனே கீர்த்திகர் படிப்பதாகக் கூறிய பல்மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் ராஜன் விசாரித்தார். பல்மருத்துவமனையை விட்டு கீர்த்திகர் நின்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர்மீது சந்தேகம் மேலும் அதிகமானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/49&oldid=1082814" இலிருந்து மீள்விக்கப்பட்டது