பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வ.வே.சு.ஐயர்


‘பால பாரதி’ என்ற ஒரு மாதஇதழை வ.வே.சு.ஐயர் வெளியிட்டு வந்தார். அந்தப் பத்திரிக்கையை நடத்தி அதன் மூலம் வந்த குறைவான வருவாயை வைத்துக் கொண்டே தனது குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார்.

வ.வே.சு.ஐயர் உலகம் சுற்றியவர்! அங்கே ஆண்டுக் கணக்கிலும் வாழ்ந்துள்ளார். அதனால், அந்நாட்டு மக்களது பழக்க வழக்க முற்போக்கு எண்ண வளர்ச்சிகளை நன்கு உணர்ந்தவர், நேரில் பார்த்தவர், பலரிடம் பழகிப்புரிந்தவர்! எனவே, அவர் பரந்த மன முடையவர் உயர்ந்த நோக்கம் உள்ளவர்; பாரத நாட்டின் மீது தனது உயிரையே வைத்திருந்தார். அத்தகையவரின் ஆசிரமத்தில், ‘தனித்து உண்ணல்’ என்ற, ஒரு சாதி முறைப் பழக்கம் இருந்தது. சமபந்தியில் பல்வேறு சாதி மாணவர்களும் ஒற்றுமையாக உண்பதை வ.வே.சு. ஐயர் ஆதரிக்க மறுத்து விட்டார். உயர்ந்த சாதிக்கென்று தனி மாணவர் பந்தியை நடத்தி உணவை உண்ண வைத்தார். மற்றச் சாதிகளுக்கென்று ஒரு தனிப் பந்தியும் அந்த ஆசிரமத்தில் இருந்தது. இந்தப் பிரச்னை தமிழ் நாட்டில் பெரியதோர் கலவரத்துக்கும், குழப்பத்துக்கும் முன் மாதிரியான சான்றாக அமைந்தது.

இராஜாஜி போன்ற சீர்த்திருத்த நோக்கம் கொண்டவர்கள் மற்ற ஜாதி மக்களோடு மட்டுமன்று தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களுடனும் அமர்ந்து சமபந்தி உணவு உண்டார்கள். அதனால் அவர்கள் ஜாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டித்தார்கள். அதற்காக ஏச்சும் பேச்சும், நன்மை தீமைகளையும் அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். ராஜாஜியும் ஓர் பிராமணர் தான் ஆனால், அவர் முற்போக்கு எண்ணமுடையவராக இருந்தார்! திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்ததால் அவரும் வ.வே.சு. ஐயரைப் போல, அதை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தவர்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/84&oldid=1083999" இலிருந்து மீள்விக்கப்பட்டது