பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


இருந்த பாண்டமும் மணக்குமாம். அதில் குறைந்து விடுவேனா நான்?

“உதிர்ந்த செம்மல் மணம் கமழ்” [1] என்பது போன்று பல அடிகளிலும் நான் மணம் கமழ்கின்றேன்.

பழம் பூ நிலையிலும் எனக்கு எத்துணை காரணப்
பெயர்கள்.

உதிர்ந்ததால் உதிரல்;

காய்ந்து உடல் உணங்கியதாலும்,
பயன்படாமற் போகின்றோமே என
உள்ளம் காய்வதாலும் உணங்கல்;

உணங்கி உடல் வாடுவதாலும்,
அருந்தொழில் ஆற்ற இயலாமல்
உள்ளம் வாடுவதாலும் வாடல்;

பிறர் நலம் பேணாது பிரிகின்றோமே
என உடலும் உள்ளமும் தேம்புவதால் தேம்பல்;

“ஈதல் இயையாக்கடை சாதல் இனிது”என,
உடலும் உள்ளமும் சருகாகிக் கருகிச்
சாம்புவதால் சாம்பல்

முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆவர். நானும் சாம்பலோடு முடிகின்றேன்.

பருவங்கள் ஏழுக்குமேல் எட்டாவதாக அமைந்த இந்தச் ‘செம்மல்’ என்னும் இறப்பு நிலைக்கும் தொல்காப்பியம் இடம் வைத்துள்ளது. தொல்காப்பியத்தில் எட்டாவதாகவும் இறுதியாகவும் என் பெயர் அமைந்த இடம் உண்டு. “பூவை நிலை” எனும் தொடரில் என்பெயரைப் பொருத்திக்காட்டியுள்ளார். “பூவை நிலை” என்றால் தெய்வநிலைமாந்தன் “வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வம்”[2]: ஆகின்றான். அது போல் நான் ஆற்றிய நிறைவாழ்வால் செம்மலாகித் தெய்வமாகின்றேன். இஃதும் ஒரு நயம்.

மேலே கூறப்பட்ட 29 சொற்களும் எனது வாழ்வியல் வளர்ச்சியைச் சொல்லும் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன. இவற்றுள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு


  1. சிலம்பு : 7:89
  2. குறள்: 59