16
வள்ளியம்மை சரித்திரம்.
பல்லியங்கள் தாமுழங்கப் பைம்பொற் சிவிகையினில்
சொல்லரிய மாண்போடு சோபனமாய்—நல்ல
மணமகனைத் தாமழைத்து வந்தனர்செந் தூர்க்கு
மணநடத்தச் சிந்தை மகிழ்ந்து.
௮௫
மணமகன்தன் அன்னைபிதா மன்தமக்கை தங்கை
குணவநுசர் உற்றோர் குறித்த—கணமுறவே
மன்றலினைக் காண மகிழ்ச்சியொடும் ஆர்வமொடும்
சென்றிருந்தார் ஆங்கே சிறந்து.
௮௬
சென்றுநெரு நல்குடபால் சேர்ந்த கதிரோனிம்
மன்றலினைக் காண வருவான்போல்—நன்றுறவே
தான்கீழ்த் திசைவரவே சார்ந்ததுநல் லோரையென்றார்
வான்போற்றும் மாமறையோர் வந்து.
௮௭
ஏர்பெறுமா மன்றற் கிசைந்தஉயர் பல்லியங்கள்
ஆர்கலிபோ லேயொலிக்க ஆங்கெவரும்—ஆர்வமுடன்
சேர்ந்தார் மணப்பந்தல் சிந்தைதனி லேயுவகை
கூர்ந்தார் அளவிலின்பம் கொண்டு.
௮௮
மாமணமைந் தன்தனையும் மங்கையையும் மாமறையோர்
தாமழைத்து வாருமென்று சாற்றிடவே—பூமன்
சிதம்பரவள் ளற்குத் திருமஞ் சனந்தான்
இதம்பெறவே யாட்டி யினிது.
௮௯
மாண்புருவம் பெற்ற மதனோ எனவியந்து
காண்பவரின் கண்கள் களிகூர—மாண்பா
அணிசெய் தழைத்துவந்தார் ஆடவரும் அன்னான்
மணமண் டபத்தில் மகிழ்ந்து.
௯௰
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/32
Jump to navigation
Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
