பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயகனிடத்து நடந்த நேர்மை.



தன்னேர்தா னாகுந் தகைமையாள் தன்னுடைய
நன்னா யகனொடுவாழ் நாள்களிலே—அன்னான்மிக்
கின்புறவே யென்றும் இசைந்திருந்த தன்மையையும்
அன்புடனே கூறிடுவேன் யான். ௱௨

பத்தாவே தெய்வமவன் பால்செயுமன் பேபத்தி
யுத்தாரம் மீறாமை யோர்விரதம்—முத்தும்
அவன்பணியே மெய்திகழும் அன்பருளத் தேகும்
சிவன்பணியாம் என்றுசெய்வாள் தேர்ந்து. ௱௪

சீர்பரவும் தொல்கேள்விச் செம்மலது சந்நிதியில்
ஏர்பரவும் மங்கைமகிழ்ந் தின்புறுவாள்—பார்பரவும்
ஒண்கதிரோன் முன்புமலர் வுற்று விளங்குகின்ற
தண்கமலம் போன்று தழைத்து. ௱௫

மையுற்ற கண்ணாளின் மாண்பமைந்த செங்கமலக்
கையுற்றால் தித்திப்பாம் கைப்புவர்ப்பு—நொய்திற்றான்
விஞ்சையினால் செய்பவள்போல் மெல்லடிசில் பல்சுவையோ
டெஞ்சலிலா தாக்கும் இனிது. ௱௬

கற்றுணர் நுண் கேள்விக் கணவன் உறுபசியை
உற்றிடுமுன் அன்னம் உணச்செய்வாள்—பொற்றொடியாள்
அன்பாற் சிறுமகவுக் கன்னைமுகம் நோக்கித்
தன்பால் அருத்துதல்போல் தந்து. ௱௭

அன்பன் விருப்போ டருந்தும் உணவெல்லாம்
தன்பதுமக் கையால் சமைத்திடுவாள்—இன்போ
டவனருந்தி மீந்த தருந்துவாள் நாளும்
தவமலிந்த பண்பெலாம் சார்ந்து. ௱௮