பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

தன்மைய ரென்பதும், ஒவ்வொருவரும் தாம் தாம் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்குத் தக்கவாறு உயர்வையும் தாழ்வையும் அடைவரென்பதும், அறிவுடையோர் பலரும் கொண்ட கொள்கை. ஆதலால், இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கு உயர்ந்ததாயுள்ள நிலைக்குரிய ஒழுக்கங்களைக் கைக்கொண்டு அவ்வுயர்ந்த நிலையை அடைந்து அவ்வாறே ஒவ்வோர் உயர்ந்த நிலையையும் அடைந்து மேம்படுவார்களாக.

இந்நூற்குச் சிறப்புப் பாயிரம் தந்தவர்கள் கல்வி கேள்வி ஒழுக்கங்களால் நிறைந்து மெய்யந்தணராய் விளங்காநின்ற ஸ்ரீ. சகஜாநந்த சுவாமியவர்கள். இந்நூலின் முதற்பதிப்பையும், எனது மற்றைய நூல்களிற் சிலவற்றையும், இந்நூலின் இப்பதிப்பையும் அச்சிட்டு வெளிப்படுத்துவதற்குப் பொருளுதவி செய்தவர்கள், தென் ஆபிரிக்காவில் வியாபாரம் செய்து பொருளீட்டித் தக்க பரோபகாரம் செய்துகொண்டிருக்கிற ஸ்ரீமான். த. வேதியப்பிள்ளை யவர்களும், ஆங்கு "விவேகபாநு" என்னும் அரிய தமிழ்ப்பத்திரிகையை நடாத்தி ஆங்குள்ள நம் தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு நன்மை புரிந்துவரும் ஸ்ரீமான். சொ. விருத்தாசலம் பிள்ளையவர்களுமே. அவர்களுக்கு யான் செய்யும் கைம்மாறு, அவர்கள் அவ்வாறே பிறர்க்கும் உதவி புரிந்துவர வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை யான் பிரார்த்திப்பதே.

பிரம்பூர், சென்னை.
பிங்கள ௵ ஆவணி ௴ .5௳
'வ.உ.சிதம்பரம் பிள்ளை.