பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௱௩௮

தொல்காப்பியம் இளம்பூரணம்

அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையையுணர்த்தச் சென்று கூடுதல். தோழியிற்கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல், இவை நான்கும் இம்முறையே நிகழும் என்று கொள்க. இனி இம்முறை நிகழாது இடையீடு பட்டு(ம்) வரும். அஃதாமாறு, தலைமகள் எதிர்ப்பட்டுழி அன்புடையா ரெல்லார்க்கும் இயற்கைப் புணர்ச்சி முட்டின்றிக் கூடுதல் உலகிய லன்மையான் தலைமகளை யாதானும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன் அவள் காதற்குறிப்புணர்ந்து நின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும் ஆண்டுச் சென்ற வேட்கை தணியாது நின்று, முன்னை ஞான்று கண்டாற்போலப் பிற்றை ஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச் சேறலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டுவருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத்தாரானாதல் பிறரானாதல் இடையீடு பட்டுழித் தன்வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி அவன் தலைமகள் நின்றுழி யறிந்து கூற ஆண்டுச்சென்று புணரும். அவ்விடத்தும் இடையீடு பட்டுழித் தோழிவாயிலாக முயன்றெய்தும். இவ்வாறும், ஒரோவொன்று. இடையீடுபட்டு வருதலும் உளவாம். அவ்வாறாயின் இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுழி வரைந்தெய்தல் தக்கதன்றோ எனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப. இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுட்களும் இவ்வாறு பொருள்கொள்ள ஏற்பன உள, அவையாவன:–

“மருந்திற் றீரா மண்ணி னாகா
 தருந்தவ முயற்சியி னகத்தலு மரிதே
 தான்செய் நோய்க்குத் தான் மருந் தாகிய
 தேனிமிர் நறவின் றேறல் போல
 நீதர வந்த நிறையருந் துயரநின்
 னாடுகொடி மருங்கி னருளி னல்லது
 பிறிதிற் றீரா தென்பது பின்னின்
 றறியக் கூறுது மெழுமோ நெஞ்சே
 நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்த
 னாடுமழைத் தடக்கை யறுத்து முறை செய்த
 பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
 கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
 விளங்குமுத் துறைக்கும் வெண்பற்
 பன் மாண் சாயற் பரதவர் மகட்கே”

இதனுள் “ஆடுகொடி மருங்கி னருளி னல்லது பிறிதிற் றீராது” என்பதனான் இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுப் புணர்ச்சிகருதிக் கூறியவாறு காண்க.

“மயில்கொன் மடவாள் கொன் மாநீர்த் திரையுட்
 பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர்– குயில்பயிலும்
 கன்னி யிளஞாழற் பூம்பொழிலி னோக்கிய
 கண்ணின் வருந்துமென் னெஞ்சு.” [திணைமொழி-ச௬).

இதனுள் ஐயநிலையைப் பாக்கற் குரைத்தலின் புணர்ச்சியின்றாயிற்று.

“கொண்டன் மாமழை[1] குடக்கேர்பு குழைத்த
சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம்
வகைசே ரைம்பா றகை பெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்


  1. 1. 'கடைக கொபுரதது குழைத்த' எனப் பிரதியில் உள்ளது.