பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௪௰

தொல்காப்பியம் - இளம்பூரணம்

இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க. இனி ஒரு கூட்ட[மு]ம் நிகழாது ஆண்டு வந்தடைவேட்கை இருவர்க்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினான் இக்களவொழுக்கம் மூவகைப்படும்.

இனி இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், காமப்புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் நுதலிற்று.

இன்பமும் பொருளு... காணுங் காலை என்பது—இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்டு, அன்பொடு புணர்ந்த நடுவ ணைந்திணையிடத்து நிகழும் காமக்கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு.

அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனால் கைக்கிளை பெருந்திணையை ஒழித்து நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்தவாறு என்னை யெனின், கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பினராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப வாகலானும், அவை நிகழுங்கால் அத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும், இவை அன்பொடு புணர்ந்தன என்க. அஃதேல், ஐந்திணைப் புறத்த வாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், அவை அன்புடையார் பலர்கூடி நிகழ்த்துபவை யாகலின், அன்பொடு புணர்ந்தனவாம்.

“அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை” [குறள்-76]

என்பதனானும் கொள்க.

இனி இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமு மாயினவாறு என்னையெனின், புணர்தல் முதலாகிய ஐந்துபொருளும் இன்பந்தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி வஞ்சி உழிஞை தும்பை எ[ன்ப]னவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும், புணர்தன் முதலாகிய உரிப்பொருளான் வருவதோர் கேடின்மையானும், பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின்வழி நிகழ்தலானும், பாலையாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலானும், இவை அறமாயின. அஃதேல், கைக்கிளை பெருந்திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அறமுதலாகிய மூன்றுமன்றி அன்பொடு புணர்தல் வேண்டு மெனின், காஞ்சி அன்பொடு புணராமையும் பாடாண்பாட்டு அன்பொடு புணர்தல் ஒருதலையன்மையும் அவ்வோத்தினுள் கண்டு கொள்க. ஏனையிரண்டும் அன்பொடு புணராமை மேற் சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா. அஃதேல், அறனும் பொருளும் ஆகாமையும் வேண்டுமெனின், குலனும் குணனுங் கல்வியு முடையராகிய அந்தணர் என விசேடித்தவழி ஏனையோர்க்கு இம்மூன்று பொருளு மியைதல் வேண்டுமென்னும் நியம மின்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும்.

இனி ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும், அந்நிலமும் காலமும் கருப்பொருளும், களவினும் கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப்படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக்கூட்டம் எனக்கொள்க.

இன்னும் அன்பொடுபுணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்றதனால் எல்லாநிலத்தினும் காமக்கூட்டம் நிகழப்பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுலகத்துக் காண்க.

மறையோர் தேஎத்...யோரியல்பே என்பது—மறையோரிடத் தோதப்பட்ட