திருவள்ளுவர் திருக்குறள்
முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.
உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால - வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா
ரெப்பா வலரினு மில்.
இ-ள். வள்ளுவனார் முப் பாலின் மிக்க மொழி உண்டு எனப் பகர்வார் எப் பாவலரினும் இல் - திருவள்ளுவரது திருக்குறளின் மேற்பட்ட நூலொன்று உளதென்று சொல்ல வல்லவர் எவ்வகைப்பட்ட புலவருள்ளும் இல்லை; செயற்பால உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத் தெள்ளுதல் அன்றே - ஆதலால், நாம் இந் நூலைக் குறித்துச் செயக் கடவன ராம் இதன் பொருளைச் சிந்தித்துக் கொள்ளுதலும், சிந்தித்துப் பிறர்க்கு அதனைச் சொல்லுதலும், பிறராலே சொல்லப்பட்ட அதனைத் தெளிதலும் அன்றே!
'மொழி' ஆகு பெயர். ஒப்பது வடமொழி வேத மிருத்தலின் மிக்க மொழி யென்றும், தமிழின் மாத்திரமன்றி வடமொழி முதலியவற்றி னுள்ள புலவரையும் தழுவுதற்கு எப் பாவலரினுமென்றும் அறிவொப்புக் காண்டற்கு உரைத்ததனைத் தெள்ளுதலென்றும், கூறினார். உள்ளுத லெனவே கேட்டலும், தெளிதலெனவே அவ்வா றொழுகலும் அடங்கின. இது பயிற்சி செய்தொழுகுமாறு சொல்லியபடி. (௰௭)
ஆசிரியர் நல்லந்துவனார்.
சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்- தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.
24