பக்கம்:Siva Temple Architecture etc..pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மேற்குறித்த பல்லவ சிவாலயங்களின் காலம் சுமார் கி. பி. 600 முதல் கி. பி. 900 வரையிலாம். இவைகளில் :-

கி.பி. 600 முதல் 640 வரை ஆண்ட மஹேந்திரவர்மன் காலத்தியவை, முக்கியமாகக் குகைக் கோயில்களேயாம். இவைகளில் திரண்ட வடிவுடைய லிங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன ; துவாரபாலகர்களுக்கு இரண்டே கைகள்; இவர்கள் நேர்முகமான பார்வை உடையவர்கள். 'திருவாட்சி' அல்லது 'தோரணங்கள்' இரட்டைச் சுருள் உடையவை, தூண்கள் சதுர வடிவமான நானகு பக்கங்கள் உடையவைகளா யிருக்கும். குகைக் கோயில்களில் முதலில் சோமாஸ்கந்த முகூர்த்தம் நிர்மாணிக்கப்பட்டது; பிறகுதான் லிங்கங்கள் நடுவில் வைக்க பட்டன. (இது என் அபிப்பிராயம், இவ்விஷயம் இன்னும் ஆராயத் தக்கது) இதற்கு உதாரணமாக மஹாபலி புரத்திலிருக்கும் சில குகைக் கோயில்களைக் கூறலாம்.

கி. பி. 640 முதல் 674 வரையில் ஆண்ட மஹாமல்லன் காலத்தியவை;- கர்ப்பக்கிரஹத்தின், உட்புறச் சுவரில் சோமாஸ்கந்தர்; துவாரபாலகர்களுக்கு இரண்டே கைகள், துவாரபாலகர்கள் நேர்முகமானவர்கள் ; உட்கார்ந்த சிங்கங்களின்மீது தூண்கள் ; குகைக் கோயில்களும், ஒரே கல்லில் வெட்டப்பட்ட கோயில்களும் :- உதாரணமாக மஹாபலிபுரத்து ரதக் கோயில்களைக் கூறலாம்.

கி. பி. 674 முதல் 800 வரை- ராஜசிம்மன் முதலியவர்கள் காலத்தியவை:-கைகளைத் தூக்கி, பின்னங்கால்களால் நிற்கும் சிங்கங்கள் ; சோமாஸ்கந்தரின் முன்பாக பலபட்டைகள் தீர்த்தலிங்க மூர்த்திகள் ; ஒரே வளைவினையுடைய திருவாட்சி ; வெட்டப்பட்ட கற்பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் :- உதாரணமாக ஸ்ரீ காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் மஹாபலிபுரம் கடற்கரைக்கோயில்களைக் கூறலாம்.

கி.பி. 800 முதல் 900 வரை அபராஜிதன் முதலிய அரசர்கள் காலத்தியவை:- திரண்ட வடிவுள்ள (Cylindrical) லிங்கமூர்த்திகள் ; பின்பக்கம் சோமாஸ்கந்தர் கிடையாது ; துவாரபாலகர்களுக்கு நான்கு கைகள்; இவர்கள் பக்கப் பார்வை யுடையவர்கள்; சிங்கமுகங்களையுடைய 'கூடு'கள் ; தூண்களின் கீழ்ப்பக்கம் சிங்கங்கள் கிடையா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/25&oldid=1293923" இலிருந்து மீள்விக்கப்பட்டது