பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf/87

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

கண்ணப்பர் வரலாற்றில் சிவபெருமானே வலியுறுத்திக் காட்டிய “எல்லாரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை”யைப் பெற்றோமில்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவனெனவே தேறி உயிர்ப்புடன் வழிபடும் உணர்வும் வளரவில்லை. அங்ஙனம் வளர்ந்திருப்பின் இன்று திருவுருவச் சிலைகள் திருடு போகா. வருவாய் தரும் திருக் கோயில்களின் திருவுருச் சிலைகளைப்போன்று வருவாய் இல்லாத திருக்கோயில்களின் திருவுருவச் சிலைகளைக் கவனிப்பதில்லை. அங்கு அர்ச்சகர்களும் பணியாற்ற வேண்டிப் போட்டிபோட மறுக்கின்றனர். ஆதலால் உண்மையில் அவரவர் ஆவல்கள் தொழப்படுகின்றனவே தவிர ஆண்டவன் தொழப்படவில்லை; அகநிலை அன்பிலும் வளரவில்லை.