பக்கம் பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf/220

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

எல்லாவற்றிற்கும் மேலாக முப்பத்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் கடைகோடியில் வாழும் மக்களுக்குப்போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தீண்டாமையை உயர் சாதியினர்தான் நீக்கவேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கொள்கை, காரணம் ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் தங்களுடைய உரிமைகளுக்குத் தாங்களே போராடினால் அது ஒரு விதமான காழ்ப்பாக உருமாற்றம் பெறும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கருத்து. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களை உயர்த்துவதும் உயர் குடியினர் செய்யவேண்டிய பணியென்று வலியுறுத்தினார். ஆனால், அண்மைக் காலமாக நம்முடைய நாட்டின் நடைமுறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்களுக்காகத் தாங்களே போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டனர். இஃதொரு பெரிய தீமை.