பல்லவர் வரலாறு/10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668)

விக்கிமூலம் இலிருந்து

10. நரசிம்மவர்மன்
(கி.பி. 630 - 668)[1]

மகேந்திரவர்மனைப் போன்ற பெருவீரனாகவே அவன் மகனான நரசிம்மவர்மன் விளங்கினான். இவனது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றதாகும். இவன் காலத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை: (1) வாதாபியைக் கைப்பற்றினமை, (2) இலங்கைப் படையெடுப்பு (3) கோவில்களும் கோட்டைகளும் அமைத்தமை. (4) சீனச்செலவினன் காஞ்சிக்கு வந்தமை, (5) தமிழ் நாட்டுச் சைவநிலை முதலியன.

பல்லவர்-சாளுக்கியர் போர்

(1) பட்டயக் கூற்று:- மகேந்திரவர்மனிடம் படுதோல்வியுற்ற இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். முன் போலவே புலிகேசி காஞ்சியை அண்மினான். காஞ்சிக்கு அருகில் உள்ள மணிமங்கலம் முதலிய இடங்களில் கடும்போர் நடந்தது. இப் போரைப் பற்றியும் இதன் பின்விளைவுகளைப் பற்றியும் பல்லவர் பட்டயங்களையே விரிவாகக் கூறுகின்றன. சாளுக்கியர் பட்டயங்களில் இவை ஒருவாறு குறிப்பிடப் பட்டுள்ளனவே அன்றித் தெளிவாக இல்லை.

(2) கூரம் பட்டயங்கள் கூறுவது-கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல இப் பல்லவர் மரபில் வந்தவனும் - வணங்காமுடி மன்னர்தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும் - தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்ற வனும்-நரசிங்கப்பெருமாளே தோன்றினாற்போல வந்தவனும்-சேர. சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவனும்-பல நூறு போர்கள் புரிந்தவனும்-பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களிற் புலிகேசி தோற்று ஓடியபொழுது ‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்.......”[2] என்பது.

(3) உதயசந்திரமங்கலப்பட்டயங்கள் கூறுவது:'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[3] என்பது.

(4) வேலூர் பாளையப் பட்டயங்கள் கூறுவது: “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்”[4] என்பது.

பல போர்கள்

முதல் இரண்டு பட்டயங்களிலும் போர் நடந்த இடங்கள் முறைப்படி குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கப்பால் வேறு இடங்களிலும் போர் நடந்துள்ளது. எனினும், முதல் மூன்றே குறிப்பிடத்தக்கவை. இம்மூன்று இடங்களில் மணிமங்கலம் ஒன்றே இன்னும் அப் பெயருடன் இருக்கிறது.அது காஞ்சிக்கு இருபது கல் தொலைவில் உள்ளது. பிற இடங்கள் இன்னவை எனக்குறிக்கக்கூட வில்லை. வைப்புமுறையை நோக்கின், காஞ்சியிலிருந்து செல்லும் ஒருவன் பரியலம். மணிமங்கலம் சூரமாரம் என்னும் ஊர்களை முறையே கடக்க வேண்டியவன் என்பது புலனாகிறது. புலிகேசி முதல் படையெடுப்பிலும்காஞ்சிவரை எதிர்ப்பின்றி வந்துவிட்டான் என்பதையும் இம் முறையும் எதிர்ப்பின்றிக் காஞ்சிவரை வந்தனன் என்பதையும் நோக்க-எதிரியைத் தம் நாட்டிற்குள் நன்கு இழுத்துப் பிறர் உதவியை அவன் பெறாதுவாறு செய்து, அவனை வளைத்து முறியடித்தலையே மகேந்திரவர்மனும் அவன் மகனான நரசிம்மவர்மனும் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது நன்கு விளங்குகிறது. சாளுக்கியசேனை நெடுந்துரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே.அந்நிலையில் புதிய பல்லவர்சேனை அவர்களை எதிர்த்து வளைத்து அழித்தலும் தோற்றோடச் செய்தலும் எளிதான செயலே ஆகும். இந் நோக்கம் கொண்டே பல்லவர் இச் சூழ்ச்சி முறையைக் கையாண்டனர் போலும் மேலும், பல்லவர் தம் நாட்டு இடங்களை நன்கறிவர். எந்த இடுக்கான இடத்தில் பகைவரை மடக்கி அடிக்கலாம் என்பதைத்தம் நாட்டிற்றான்.அவர்கள் நன்கறிதல் கூடும்.

முதலாம் விக்கிரமாதித்தன் (சாளுக்கியன்) விடுத்த கல்நூல் பட்டயங்களில், ‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப் பட்டான்’ என்பது காணப்படுகிறது. இச் செய்திக்குச் சான்று என்னை? மூவருள் ஒருவன் நரசிம்மவர்மன், மற்ற இருவரும் யாவர்? வேண்டுமாயின் அவருள் ஒருவனாகச் சிம்மவிஷ்ணு இளவலான இரண்யவர்மன் மரபினருள் ஒருவனைக் கொள்ளலாம்; அவர்கள் தெலுங்கு நாட்டில் பல்லவர் மாகாணத் தலைவராக இருந்தனராதலின்[5] என்க. மூன்றாம்.அரசன் யாவன்? இதற்கு விடை இலங்கை வரலாறு இயம்புதல் காண்க; ‘மானவன்மன்’ என்னும் இலங்கை அரசன் பகைவனால் பட்டம் இழந்து நரசிம்மனிடம் அடைக்கலம் புகுந்தான். இருவரும் மனம் ஒத்த நண்பர் ஆயினர். மானவன்மன் காஞ்சியில் இருக்கையில், புலிகேசி காஞ்சிமீது படையெடுத்தான். உடனே நரசிம்மவர்மன் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போர்க்களம் சென்றான் ஆயினும், தன்னைக் காத்துவரும் பேரரசன் தனியே போர்க்களம் சென்று போர்புரிதலைக் காணப்பெறாத மானவன்மன். பெரும்படையுட்ன் சென்று நரசிம்மனோடு சேர்ந்து புலிகேசியைத் தாக்கினாள்; அவனைத் தோற்கடிப்பதில் பல்லவனுக்குப் பேருதவி புரிந்தான்.”[6]

சாளுக்கியன் ஒட்டம்

“புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுதல் கவனிக்கத்தக்கது. “பல்லவர் படைக்கு முன் நிற்க முடியாமல் புலிகேசி முதுகு காட்டி ஓடினான்” என்பதே இதன் பொருள். முதற்போர் பரியலம் என்னும் இடத்தில் நடந்தது. புலிகேசி பின்வாங்கினான்; பிறகு இரண்டாம் போர் மணிமங்கலம் என்னும் இடத்தில் நடந்தது; புலிகேசி மேலும் பின்வாங்கினான் இறுதிப் போர் சூரமாரத்தில் நடந்தது; பின் சாளுக்கியன் ஆற்றானாய் ஒடலானான். பல்லவன் அவனை விடாது துரத்திச் சென்றான். அப்போது வழியில் பல இடங்களில் சிறு போர்கள் நடந்தன: பின்னர்ச் சாளுக்கியன் திரும்பிப்பாராது ஓடியதால் பல்லவர்சேனை அவன் படையைத்துரத்திச்சென்றே, சாளுக்கியவன் தலைநகரமான வாதாபியுள் நுழைந்து விட்டது.

வாதாபி கொண்டது

வாதாபி நகரம் நரசிம்மவர்மன் கைப்பட்டது. வாதாபி என்னும் நகரத்தை அழித்த காரணம் பற்றியே நரசிம்மவர்மன் ‘வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர் போன்றவன்’ என்று கூறப்பட்டான். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன் அவனது தலைநகரை அழித்துத் தீர்த்துக் கொண்டான் என்பது தெரிகிறது. நகரத்தின் பல இடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் வருவாய் இன்றித் தத்தளித்தன; பல அழகிய பழைய கட்டடங்கள் இன்று இருத்தலால், நகரம் முழுவதும் ,ாழாக்கப்படவில்லை என்பது தெளிவு. பல்லவன் வாதாபி கொண்ட காலம் கி.பி. 642 என்பர் ஆராய்ச்சியாளர். அந் நகரம் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பல்லவர்கையில் இருந்ததென்னலாம் (கி.பி. 642-655).[7] வாதாபியில் தக்கிண-ஈரப்பன் கோவிலுக்கருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அது சிதைந்து இருத்தலால், வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்னும் சொல்லுமே படிக்கக் கூடியனவாக உள்ளன. நரசிம்மவர்மன்தன் வெற்றியை அத்துண்மீது பொறித்தனன் போலும்![8]

சேனைத் தலைவர் - பரஞ்சோதியார்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனது உயர் அலுவலாளராக இருந்த சேக்கிழார் பெருமான். இவ்வாதாபி கொண்ட செய்தியைத் தாம் கேட்டு அறிந்தவரை கூறியுள்ளது காண்க:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”[9]

இதனால், (1) நரசிம்மவர்மனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான, சிறுத்தொண்டர் என்ற பரஞ்சோதியார் என்பதும், (2) அவரே வாதாபியுள் நுழைந்து சாளுக்கியருடைய நகரைச் சூறை ஆடி யானைகளைச் செலுத்தி நகரைப் பாழாக்கி, சாளுக்கியருடைய கரிகளையும் பரிகளையும் செல்வத்தையும் கவர்ந்து சென்று நரசிம்மவர்மன் முன் வைத்தார் என்பதும் தெளிவாதல் காண்க. இச் செய்தியால், நரசிம்மவர்மன் மணிமங்கலம் முதலிய இடங்களில் சாளுக்கியனை வென்ற பிறகு காஞ்சிக்குத் திரும்பிவிட்டான் என்பது தெளிவாகிறது.அவன் சென்ற பிறகு, பரஞ்சோதியார் பல்லவ சேனையுடன் புலிகேசியின் படையைத் தொடர்ந்துசென்று, ஆங்காங்கு நடந்த சிறியபோர்களில் தோற்கடித்து, இறுதியில் வாதாபியுள் நுழைந்தார்; பல்லவன் ஆணைப்படி, கற்கம்பத்தில் அவனது பெருவெற்றியைக் குறித்து மீண்டார் என்பனவற்றை நன்குணரலாம்.

சாளுக்கியர் பட்டயச்சான்று

இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனது கர்நூல் பட்டயம், “இரண்டாம் புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான். வாதாபியில் இருந்த கோவில்கள் வருவாயின்றித் தவித்தன.....” என்று கூறுகின்றது. இந்த விக்கிரமாதித்தன் மகனான விநயாதித்தனது சோரப்-பட்டயம், “சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்,”[10] என்று முறையிடு கின்றது. இவ்விரண்டு பட்டயங்களாலும், வாதாபி கொண்ட செயல் பிற்பட்ட சாளுக்கியரை எந்த அளவு வருந்தச்செய்துள்ளது என்பதை நன்குணரலாம். -

வாதாபி கொண்டவன்

புலிகேசி, வாதாபி படையெடுப்புக்குப்பின் என்ன ஆயினன் என்பது தெரியவில்லை. அவனைப்பற்றிய பிற்செய்தி ஒன்றுமே தெரிய வழி இல்லை ஆதலின், அவன் போரில் இறந்தனனோ என்பது நினைக்கவேண்டுவதாக இருக்கிறது. இங்ஙனம் சாளுக்கியர் தலைநகரம் நாசமுற-சாளுக்கியர் பிற்காலத்திலும் தன் செயலை எண்ணி எண்ணி வருந்தச்செய்த தனது வீரச் செயலை நினைத்து, நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டவன்’[11] என்று அழைத்துக் கொண்டான்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ்நாட்டில் தம்மாட்சியோடு இருந்தவர் பாண்டியரே ஆவர்; அவருள் நான்காம் அரசனான அரிகேசரி பரங்குசன் என்ற நெடுமாறன் கி.பி. 640 முதல் 680 வரை ஆண்டுவந்தான். இவன் சோரையும் பிற தென்னாட்டுக் குறுநில மன்னரையும் அடக்கித் தெற்கே பேரரசனாக இருந்தவன். இவன் சோழனிடம் பெண்கொண்டிருந்தான்; கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் இவனுக்கு உட்பட்டிருந்தனர். சுருங்கக் கூறின், இவன் தெற்கே சேர,சோழ, பாண்டியர், களப்பிரர் தலைவன் எனக் கூறலாம்.

பட்டயங்கள்

இவன் ‘சங்கரமங்கை’ என்ற இடத்தில் பல்லவனைப் புறங்கண்டான்’ என்று சின்னமனூர்ப் பட்டயம் கூறுகின்றது. ‘நரசிம்மவர்மன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான்’ என்று கூரம் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டு கூற்றுக்களையும் நோக்க நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர் - பாண்டியர் போர் நடந்ததென்றே கருதுதல் வேண்டும்.

போர் நடத்த காலம்

ஆயின், இப்போர் எப்பொழுது நடைபெற்றது? பல்லவன் இரண்டாம் புலிகேசியைப் போரிட்டுத் துரத்திச் சென்ற காலத்திற் நான் இது நடைபெற்றதாகல் வேண்டும். என்னை? புலிகேசி தனது முதற் படையெடுப்பில், ‘காவிரிக்கரையை அடைந்து தமிழரசர் மன மகிழப் பல்லவனைப் புறங்கண்டான்’ எனச்சாளுக்கியர் பட்டயம் கூறலால் என்க. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டில் நுழைந்த வுடன், அவனை எதிர்த்துத் துரத்தலே பல்லவனது பெருவேலை ஆயிற்று. அவன் தனது முழுவன்மையும் சேர்த்துப் புலிகேசியைத் தாக்கிப் பல இடங்களிற் புறங்கண்டு இறுதியில் வாதாபியையும் அழித்தான் அன்றோ? அந்தச் சமயமே, சேர, சோழ, களப்பிரரைச் சேர்த்துக்கொண்டு பாண்டியன் தெற்கே இருந்து பல்லவநாட்டைத் தாக்க வசதியானது.

முடிவு

இதனை உணர்ந்துதான் போலும், நரசிம்மவர்மன் வாதாபிப் படையெடுப்பைத் தன் தானைத் தலைவரான பரஞ் சோதியாரிடம் ஒப்படைத்துத்தான் தெற்கே நோக்கிச் சென்று,தமிழரசரை வென்று துரத்தினான். முதலில் நரசிம்மவர்மனது எல்லைப்புறப் படை சங்கரமங்கையில்தோல்வியுற்றிருத்தல்வேண்டும்;பிறகுநரசிம்மன் பெரும்படை வந்தவுடன் போர் பல்லவர்க்குச் சாதகமாக மாறியிருத்தல் வேண்டும். இங்ஙனம் விளக்கமாகக் கொள்ளின் பல்லவர்-பாண்டியர் பட்டயக்கூற்றுகள் பொருத்தமாதல் உணரலாம்.

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம் புலிகேசிக்குப்பிறகுகி.பி. 642 முதல் கி.பி. 654 வரை சாளுக்கிய நாடு குழப்பத்தில் இருந்தது. இரண்டாம் புலிகேசியின் மக்கள் மூவர். அவர் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன் என்பவர். சந்திராதித்தன் இறந்தபிறகு, பின் இருவர்க்கும் அரியணை பற்றிய பூசல் உண்டாயிற்று. ஆதித்தவர்மன் நரசிம்மவர்மன் துணையை வேண்டினான். விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப் பாட்டனான துர்விநித கங்கன் துணையை நாடினான். துர்வி நீதற்கு நரசிம்மன்மேல் தீராப் பகைமை உண்டு. என்னை? நரசிம்மன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் துர்விநீதனுடைய ஒன்றுவிட்ட தம்பியை அதற்கு அரசனாக்கி வைத்திருந்தமையால் என்க. துர்விநீதன் தன் படையுடன் விக்கிரமாதித்தற்கு உதவி செய்தான். நரசிம்மன் ஆதித்தவர்மற்குப் படை உதவினன்போலும்! ‘துர்விநீதன், இராவணன் என்று அனைவரும் அஞ்சத்தக்க காஞ்சிநகரக் காடுவெட்டியை வென்ற பிறகு, தன் மகள் மகனைச் சயசிம்ம வல்லபனது நாட்டிற்கு அரசன்

ஆக்கினான் என்று ‘நகர்’ - கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், துர்விநீதன் நரசிம்மவர்மனை வென்று, தன் பெயரனான விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான் என்பது தெரிகிறது.

உண்மை என்ன?

விக்கிரமாதித்தன் தன் பாட்டன் உதவியை நாடினான். அதை அறிந்த ஆதித்தவர்மன் வேறு வழியின்றி நரசிம்மவர்மனது துணையை நாடி இருக்கலாம். நரசிம்மன் சாளுக்கியர் அரசியலில் விசேடக் கவனம் செலுத்தாமல், வந்தவனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி இருக்கலாம். அப்படையைத் துர்விநீதன் முறியடித்து வெற்றிபெற்றிருக்கலாம், நரசிம்மனால் அனுப்பப்பட்ட படையை வென்றமையால், பாவம்! துர்விநீதன் பேரரசனான நரசிம்மவர்மனையே நேரில் வென்றதாகக் கருதி மகிழ்ந்து, தன் மகிழ்ச்சியைக் கல்வெட்டிலும் காட்டிவிட்டான் என்று கோடலே ஈண்டைக்குப் பொருத்தமாகும். ஏனென்றால், நரசிம்மனையே பெரும் போரில் வென்றவனாயின், துர்விநீதன் அதன் பயனாகக் கொங்கு நாட்டைக் கைப்பற்றி இருத்தல் வேண்டும்; அவன் தான் அங்ஙனம் செய்ததாகக் குறிக்கவில்லை. துர்விநீதன் வெற்றியால் பல்லவர்க்கு எந்தவிதமான குறைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; பல்லவர் பட்டயங்களில் இவனைப் பற்றிய பேச்சே இல்லை.

இலங்கைப் போர் 1

நரசிம்மவர்மன் காலத்தில் இலங்கைப் பட்டத்திற்கு உரிய மானவன்மன் என்னும் இளவரசன் காஞ்சிக்கு வந்தான். அவன் அட்டதத்தன் என்பவனால் துரத்தியடிக்கப்பட்டவன். அட்டதத்தன் மானவன்மனது அரசைக் கவர்ந்தவன். செயலற்ற மாணவன்மன் நரசிம்மனை அடைக்கலம் அடைந்தான்; அவனுடன் இருந்து பணிவுடன் எல்லா வேலைகளையும் செய்து பல்லவன் நன்மதிப்பைப் பெற்றான். அதனாற்றான் மாணவன்மனைக் காஞ்சியில் விட்டு நரசிம்மவர்மன் புலிகேசியை எதிர்க்கச் சென்றான். அப் பேரரசனுக்கு இடர்வராமற் காக்க மாணவன்மன், பிறகு பெருஞ் சேனையுடன் சென்று போரிற் கலந்துகொண்டு பல்லவன் வெற்றிக்குத் துணைசெய்தான். இச்செயலால் மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட நரசிம்மவர்மன் மானவன்மனுக்கு மாப்படை, மக்கட்படை, மரக்கலப்படை இவற்றை உதவி இலங்கைக்கு அனுப்பினான். படை உதவி பெற்ற மாணவன்மன், இலங்கையில் இறங்கி முதலில் நடந்தபோரில் வெற்றிபெற்றான்.ஆயினும் அடுத்த போரில் தோல்வியுற்றான். அவன் உடன்சென்ற சேனை அவனைக் கைவிட்டது. அதனால் மானவன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர்-2

அவனது துயரைக்கண்டு மனம் பொறாத பல்லவப்பேரரசன், தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மானவன்மனிடம் ஒப்புவித்துத் தானும் மாமல்லபுரம் என்ற துறைமுகத்திற்குச் சென்றான். பல்லவன்தானும் கப்பலில் ஏறுவதாகத்தன் படைவீரரை நம்புமாறு செய்தான்; அதனால் மகிழ்ந்த வீரர் இலங்கை நோக்கிச் சென்றனர். கடும்போர் செய்தனர். மானவன்மன் வெற்றி பெற்று இலங்கை அரியணை ஏறினான்.[12] இங்ஙனம் இலங்கை இளவலுக்குப் பல்லவப் பேரரசன் செய்ததுணிச்சலான உதவியைப் பாராட்டிப் பேசிய காசக்குடிப் பட்டயம், ‘நரசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி இராமன் இலங்கையில் பெற்ற வெற்றி போன்றது’ என்பதைக் குறிப்பிட்டுள்ளது.[13]

சீன வழிப்போக்கன்

ஹர்ஷனது பேரரசையும் இரண்டாம் புலிகேசியினதுசாளுக்கியப் பேரரசையும் பார்வையிட்டுப் பெளத்த இடங்களைக் கண்டு போகவந்த சீன வழிப்போக்கனான இயூன்சங் என்பவன் காஞ்சிக்கு வந்தான். அவன் ஏறக்குறையை கி.பி. 642இல் வந்தான். அவன்

காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டைத் திராவிடம் என்று குறிப்பிட் டுள்ளான். “நிலம் செழிப்புள்ளது. நல்ல விளைவு தருவது; நாடு வெப்பமானது. மக்கள் அஞ்சா நெஞ்சினர்; உண்மைக்கு உறைவிட மானவர் கற்றவரையும் உயர்ந்த கொள்கைகளையும் மதிப்பவர். இந்நாட்டில் 100 சங்கிராமங்கள்[14] இருக்கின்றன; பதினாயிரம் பெளத்தத் துறவிகள் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணக் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருக்கின்றனர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கியதாக இந்நாட்டில் கூறப்படுகிறது.அசோகன்திராவிட நாட்டில் பல தூபிகளை அமைத்தான். அவற்றுள் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிப்பதியினர் என்னும் செய்தி இங்குக் கூறப்படுகிறது. “நான் பாண்டிய நாட்டையும் சென்று கண்டேன்.[15] அங்குச் சிலரே உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடு பட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பெளத்தம் அழிநிலையில் உள்ளது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக் குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.” என்று அந்த வழிப்போக்கன் தன் குறிப்புப் புத்தகத்தில் வரைந்துள்ளான். மேலும் அவ்வறிஞன், “காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரைநோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் ஆகும். இங்கிருந்து பல கப்பல்கள் இலங்கைக்குப் போகின்றன.” என்று கடல் வாணிபச் சிறப்பையும் விளக்கி யுள்ளான்.[16]

குகைக் கோவில்கள்

நரசிம்மவர்மன் தன் தாதையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். இவன் முதலில் மகேந்திரவர்மனைப் பின்பற்றிக் குகைக் கோவில்களையே அமைத்தான். இவன் அமைத்த கோவில்களைக் கண்டறிதல் எங்ஙனம்? இவன் அமைத்த குகைக் கோவில்களில் இவனுடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஓவிய வேலை மிகுதியாக இருக்கும். குகைக்கோவிலின் முன்மண்டபச் சுவர்களில் மிக்க அழகிய சிலைகளும் அணி அணியாய் அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் வெட்டுவித்திருக்கும். மகேந்திரன் அமைத்த கோவில் தூண்கள் சதுரமாயும் கனமாயும் இருக்கும். ஆனால், நரசிம்மவர்மன் எடுத்த கோவில் தூண்களின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ்த்துணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடியில் ஏறக்குறைய இரண்டு முழ அகலமும் இரண்டு முழு உயரமும் கொண்டு திறந்த வாயுடன் இருக்கும். சிங்கங்கள் தூண்களைத் தம் தலைமீது தாங்கி இருத்தல் போன்ற வேலைப்பாடு காணப்படும். இவற்றைநோக்க, இம் மன்னர் மன்னன் தன் பெயரைக் குறிக்கவே இச் சிங்கத்தூண்களை அமைத்தனனோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது.[17]

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமான் குகைக்கோவில் இம் மன்னன் காலத்தது. அதன் சுவர்களில் புராணக் கதைகள் சிற்ப வேலையில் விளக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக் கோவில் இவன் காலத்தது. இதன் கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும் மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பட்டுள்ளன. இவ்விரண்டு கோவில்களுக்கும் இடையில் உள்ள பெரிய மண்டபச் சுவர் மீது, சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி ஆகியவர் உருவங்கள் செவ்வையாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மரவிட்டங்கள் போலக்கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு இன்புறத்தக்கது. இக் கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட குபேரன் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே உள்ள திருவெள்ளறையில் மலை மீது பழைய பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. அம் மலையினடியில் பெரிய குகைக் கோவில் குடையத் தொடங்கி வேலை முடியாமல் நிறுத்தப்பட்டது. குடைந்த அளவு காணப்படும் வேலைப்பாடு நரசிம்மன் காலத்ததென்று கூறலாம். புதுக்கோட்டை யைச்சார்ந்த குடுமியா மலையில் மகேந்திரனது இசையைக் குறிக்கும் கல்வெட்டிற்கு அண்மையில் உள்ள குகைக்கோவில் நரசிம்மவர்மன் காலத்தது. அதன் அமைப்பு மேற்சொன்ன திருச்சிராப்பள்ளிக்குகைக் கோவில் அமைப்புப் போன்றே இருக்கின்றது. புதுக்கோட்டையைச் சேர்ந்ததிருமய்யத்தில் மகேந்திரவன் அமைத்த சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வைணவக் குகைக் கோவிலும் நரசிம்மன் அமைத்ததே ஆகும்.[18]

மகாபலிபுரமும் நரசிம்மவர்மனும்

மகாபலிபுரத்தில் மகேந்திரவர்மன் தொடங்கிவிட்ட வேலையை சிற்ப ஓவியக் கலைகளை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்திப் பெருவெற்றி பெற்றான். இவனது வெற்றிக்கு, இவன் கி.பி. 642இல் பெற்ற வாதாபி வெற்றியே சிறந்த காரணம் ஆகும். வாதாபியில் இரண்டர்ம் புலிகேசியின் சிற்றப்பன் ஆன மங்களேசன் அழகுற அமைத்த குகைக் கோவில்கள் பல உண்டு. அவை வேலைப்பாடு கொண்டவை. அவ் வேலைப்பாடு கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. அவற்றைக் கூர்ந்து பார்வையிட்ட நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் அவைபோல அமைத்துள்ளான் என்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நன்கு விளங்குகிறது. இப் பேரரசன் சாளுக்கியர் வளர்த்தகலைகளை நன்குஅறிந்து சிலவற்றை மாதிரிக்கு எடுத்துச் சென்றேனும் அல்லது அவற்றை அமைத்த வல்லுநரை அழைத்துச் சென்றேனும் கோவில்களை அமைத்தான் போலும் என்று எண்ணத்தக்க விதமாக ஒருமைப்பாடு காணப்படுகிறது.

நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் மூவகை வேலைப்பாடுகளைக் காட்டியுள்ளான். அவை (1) குகைக் கோவில்கள், (2) தேவர்கள் (3) கற்சிலைகள் என்பன.

(1) குகைக் கோவில்கள்

மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய இம் மூன்றும் நரசிம்மன் அமைத்த குகைக் கோவில்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இம் மண்டபத் தூண்களில் காணப்படும்வேலைப்பாடும் சிறப்பாகவராக மண்டபத்தூண்களில் காணப்படும் சிறந்த வேலைப்பாடும், வாதாபியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாட்டையே ஒத்துள்ளன. இவ் வேலைப்பாடு கி.பி. 642இல் வாதாபியில் இருந்து மகாபலிபுரம் வந்து, பிறகு தென் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. தூண்களின் மேலிருந்து கூரை வரையுள்ள வேலைப்பாடு, பிற்காலச் சோழர் கோவில்களில் காணப்படுதல் காண்க.

(1) குகைக்கோவிற் சிற்பங்கள்:- வாதாபி-குகைக்கோவிற் சுவர்களில் சிற்ப வேலை மிகுதியாக உண்டு. அவ்வேலை நரசிம்மன் அமைத்த குகைக்கோவிற் சுவர்களிலும் காணலாம். இவ் வேலைப்பாடு, சுவர்களை அணி செய்வதோடு. அவையுள்ள இடம் சுவர் என்னும் எண்ணத்தையே மறக்கச் செய்வது கவனிக்கத்தக்கது. வாதாபி-குகைக்கோவில் சுவர்களில் உள்ள புராணச் செய்திகளைக் குறிக்கும் ஓவியங்கள் பல மகாபலிபுரத்திலும் காணப்படல் கவனித்தற்குரியது. வராக அவதாரம, வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்துக் குகைக் கோவில்களிலும் இருத்தல் காண்க. கஜலக்குமி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் ஈரிடத்துக் குகைக்கோவில்களிலும் இருக்கின்றன. மகிடாசுர மண்டபச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பாம்பனைப்பள்ளி (அநந்த சயனம்) உண்டவல்லி குகைக் கோவில் சுவரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. மற்ற உருவங்களும் இரண்டிடத்தும் ஒத்திருக்கின்றன. ஆயின், மகிடாசூரனை வெல்லுதலைக் குறிக்கும் சிற்பவேலை பல்லவர்க்கே உரியது என்னலாம். அஃது எங்கும் அக் காலத்தில் காணப்படாததாகும். துர்க்கை தன் ஊர்தியான சிங்கத்தின் மீது இவர்ந்து எருமைத் தலைகொண்ட அசுருன் மீது அம்புகளைப் பொழிகின்றான். அவளைச்சுற்றிலும் அவள் படைகள் இருக்கின்றன. அசுரனைக் சுற்றிலும் அவன் படைகள் இருக்கின்றன. இப் படைகளைப் பொறித்ததால், இக் காட்சி சிறப்படைந்துள்ளது. இக் காட்சியை அமைத்த சிற்பிகள் சிறந்த அறிஞர் ஆவர். இத்தகைய சிறந்த காட்சிகாணல் அருமையே ஆகும். இது பல்லவர்க்குரிய தனிச் சிறப்பு என்றே கூறலாம்.[19]

(2) மண்டபங்கள் - கோவில்களே:- மகாபலிபுரத்தில் ‘மண்டபங்கள்’ என்று கூறப்படுபவை மண்டபங்கள் அல்ல. அவை கோவில்களே ஆகும். ஒவ்வொன்றிலும் இறை உள்ளிடம் (மூலத்தானம்) இருக்கின்றது. அந்த இடங்களில் சிவலிங்கம் இருந்ததாம். இப்பொழுது வேலைப்பாடு கொண்டு காணப்படும் மண்டபம், உள்ளிடத்திற்கு ‘வெளி மண்டபம்’ ஆகும். எனவே, மண்டபங்கள் எனப்படுபவை அனைத்தும் கோவில்களே என்பதில் ஐயமில்லை. இதனை அறியாத பாமர மக்கள் ‘மண்டபம்’ என்றும், அங்குள்ள சிற்பங்கள் நோக்கி, இது ‘மகிடாசுர மண்டபம்’, ‘இதுவராக மண்டபம்’, ‘இது திரிமூர்த்தி மண்டபம்’ என்றும் பெயர் இட்டனர். இவற்றையே ஆராய்ச்சியாளரும் குறித்தனர். ஆதலின், இப்பெயர்கள் இன்றளவும் தவறாகவே வழங்குகின்றன.

(2) ஒற்றைக்கல் கோவில்கள்

மகேந்திரன் குகைக் கோவில்களை அமைத்தான். அவனைப் பின்பற்றிய நரசிம்மவர்மன் தன் பெயரை நிலைநாட்ட, ஒரு கல்லையே கோவிலாக அமைக்கும் புதிய வேலையில் இறங்கிப் பெருவெற்றி பெற்றான். இவை கோவில்கள் என்பதை அறியாத பாமர மக்கள், தேர்கள் என்றும். ஐந்து கோவில்கள் ஒரே வரிசையில் இருத்தல் கண்டு. பாண்டவர் தேர்கள் என்றும் பெயரிட்டனர். அவர்கள் இட்ட பெயர்களையே இன்றளவும் அறிஞர் எழுதி வருகின்றனர். எனவே, அம்முறைப்படியே நாமும் குறிப்போம். இந்த ஐந்து தேர்களும் வேறு வேறு அமைப்புடையவை. இவை தமிழகத்தில் மண், செங்கல், மாம் இவற்றில் ஆகி அந்நாள் இருந்த பழைய கோவில்களை நமக்கு நினைப்பூட்ட அமைத்தவை ஆகும். இந்த ஐந்தும் இராவிடில், பழங்காலக் கோவில்களைப் பற்றிய எண்ணமே நமக்கு இராது போயிருக்கும்.[20] மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கோவில்களில் பல் வேலைப்பாடுகள் இருந்தன. அவை இக் கற்கோவில்களில் அப்படியே காணப்படுகின்றன. மரவேலைகள் எல்லாம் கல்லிற் செதுக்கிக் காணப்பட்டன. திருச்சிராப்பள்ளியில் மகேந்திரவர்மன் குகைக்கோவில்கள், மரத்தால் எளிதிற் கட்டும் வேலி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது காண்க. நாமக்கல் கோவிலில் வளைந்த மூங்கில்களை வைத்து இறக்கப்பெற்ற தாழ்வாரம் போன்ற அமைப்பை மலையில் குடைந்துள்ளமை காண்க. திருச்சிராப்பள்ளியில் உள்ள கீழ்க் குகைக்கோவிலில் மரவிட்டம் போலக் கல் நீட்டிக்கொண்டிருத்தல் காணத்தக்கது.[21]

(1) தருமராசன் தேர்:- இது சிவன்கோவில், இது மூன்று தட்டுக்களைக் கொண்ட மேற்பாகத்தை (விமானத்தை) உடையது இரண்டாம் தட்டின் நடுவில் உள்ளிடம் வெட்டப் பட்டுள்ளது. அது மாடப்புரைபோலச் சிறியது. அதன் அடியில் சோமாஸ் கந்தச் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்ப (விமான) வளர்ச்சியே காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பம் ஆகும். அதன் வளர்ச்சியே தஞ்சைப் பெரியகோவில் கும்பமாகும். இம் மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் இவ்வுண்மையை நன்கு உணரலாம்.

(2) பீமசேனன்தேர்:- இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் காஞ்சியில் உள்ள அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே, இக் கோவில் அக்காலத்தில் பெளத்த சமயக் கலைவளர்ச்சி தென்னாட்டில் பரவி இருந்ததை மெய்ப்பிக்கிறது என்னலாம். விமானத்தைச்சுற்றிலும் வழிவிடப் பட்டுள்ளது. மேலிடம் 45 அடி நீளம், 25 அடி அகலம், 26 அடி உயரம் உள்ளது. அஃது அறச்சாலை அல்லது பொது இடம் போல இருக்கிறது. அதன் தூண்கள் அடியிற் சிங்கங்களை உடையன. இக் கோவில் அமைப்பை, மிகப் பிற்பட்ட காலத்ததான சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தின் அமைப்பிற் காணலாம்.

(3) அர்ச்சுனன் தேர்:- இது தருமராசர் தேரைப் போன்றதே இதுவும் சிவன் கோவில் ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பை உடையது. இது 11 சதுர அடி அமைப்புடையது. விமானம் நான்கு நிலைகளை உடையது.

(4) திரெளபதி தேர்:- இது போன்ற கோவில் காணக் கிடைத்தல் அருமை. இது தமிழ்நாட்டில் ஊர்த் தேவதைகட்கு இருக்கும் சிறு கோவில்போல அமைந்துள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி; உயரம் 18 அடி இதில் உள்ள துர்க்கையின் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு பல்லவர் சிற்ப அறிவை நன்கு விளக்குவதாகும். இங்குள்ள கல்யானை, கற்சிங்கம், நந்தி என்பன காணத் தக்கவை. இக்கோவில் தமிழகத்தின் பண்டைச் சிறு கோவிலை நினைப்பூட்டுவதாகும்.[22]

(5) சகாதேவன் தேர்:- இது பண்டைப் பெளத்தர் தைத்தீயத்தை ஒத்துக் காணப்படுகிறது. இதுபோன்ற பெரியதுர்க்கையின் கோவில் ஒன்று சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹோனே’ என்னும் இடத்தில் இருக்கின்றது. அதனைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் கட்டினான். இங்ஙனம் பல்லவர். சாளுக்கிய வேலையைப் பாராட்டிக் கொண்டாற்போலவே, சாளுக்கியரும் பல்லவர் வேலையைப் பாராட்டிக்கொண்டர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் காட்டலாம். சகாதேவன் தேர் போன்ற அமைப்புடைய விமானங்கள் பல தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று திருத்தணிகையில் உள்ளது.[23]

இந்தக் கோவில்களின் முன்புறம், இவற்றில் உறைந்த தெய்வங்கட்குரிய ஊர்திகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன.அவை நந்தி, சிங்கம், யானை என்பன. அவை முறையே சிவபெருமான், துர்க்கை, இந்திரன்[24] இவர்தம் ஊர்திகள் ஆகும்.

(3) கற்சிற்பங்கள்

பாறைகள் மீது புராணக் கதைகளைப் பாடல்கள் வாயிலாக விளங்கும் முறையில் நரசிம்மவர்மன் பெயர் பெற்றவன். இதற்கு மகிடாசுர மண்டபச் சுவரில் உள்ள சிற்பங்களே போதியவை. எனினும், அவற்றை விடப் பெரிய பாறைகள் மீது செதுக்கியுள்ள கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்றல், கங்கைக் காட்சி ஆகிய இரண்டுமே கண்கொண்டு பார்க்கத்தக்கவை.

(1) கோவர்த்தன மலையைப் பிடித்துள்ள கண்ணனும் அவன் அருகில் உள்ள பலராமனும் பெரியவராகத் தெய்வத் தன்மையுடன் காணப்படுகின்றனர். ஏனையோர் சிறியவர்களாகக் காண்கின்றனர். அம்-மக்களது கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவடைந்த மன நிலையும் சிலைகளில் நன்கு உணர்த்தப்ப்ட்டுள்ளன. இவர்கட்கு இடையே இடையர் வாழ்க்கையைக் குறிக்கும் சில காட்சிகளைச் சிற்பிகள் மலையடியில்காட்டியிருத்தல் போற்றத்தக்கது. அக் காலச் சிற்பிகளது கூர்த்த அறிவு வியத்தற்குரியதே ஆகும்.அக்காட்சிகளில் வியக்கத்தக்கது. கறவையின் காட்சி. ஒருவன் பால் கறக்கிறான். பசு தன் கன்றை நக்குகிறது. இந்த வேலைப்பாடு தெளிவானதும் அழகானதுமாகும்.

(2) கங்கைக்கரைக் காட்சி-இதனை ‘அர்ச்சுனன் தவம் எனப் பலர் கூறுவர்.[25] ஆனால், இங்குள்ள காட்சிகள் அதற்கு மாறாகவே இருக் கின்றன. ஆறு - (மலைமீதிருந்த தண்ணி விழுந்து கொண்டிருக்கப் பழைய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இன்னும் காணப்படுகின்றன. அதன் நடுவில் நாகர் மகிழ்ச்சியோடு நீராடல் -பிராமணன் ஒருவன் தண்ணிக் குடத்தைத் தோள் மீது சுமந்துபோதல் - நீர் அருந்த ஆற்றண்டை மான் ஒன்று வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு அன்னப் பறவைகள் ஆற்றில் வீழ்ந்து நீராட் நிற்றல் - கீழ்ப்புறம் ஒரு சிறிய பெருமாள் கோவிலைச் சுற்றிலும் முனிவர்பலர் இருந்து தவம் செய்தல் - இவர்களைப் பார்த்துப் பூனை ஒன்று பின்னங் கால்கள் மீது நின்று முன்னங் கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் இருத்தல்-அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி அன்பு கொண்டு அதனைப் பணிதல்-ஆகிய இக்காட்சிகள் அனைத்தும் இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரைக் காட்சிகளையே ஒத்துள்ளன. இச் செய்திகள் அனைத்தும் மகாபாரதம்உத்தியோக பருவத்துள் கூறப்பட்டுள்ளவையே ஆகும்.[26] இவற்றைச் செலுத்திய சிற்பிகளின் திறனை என்னென்பது பூனை தவம் செய்வதையும் காட்டி நகைச்சுவை ஊட்டும் அப் பேரறிஞர் கலை உணர்வே உணர்வு![27]

(3) மகா மல்லபுரம்: நரசிம்மவர்மன் கொண்ட பல பெயர்களுள் மகா மல்லன் என்பது சிறந்தது. அவன் மகாபலிபுரத்தைச் சிறந்த கடற்கரைப்பட்டினமாக்க முயன்றான்; மலைமீது கோட்டை ஒன்றை அமைக்க முயன்ற அடையாளம் காணப்படுகிறது. அவன் காலத்தில் மகாபலிபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. எனவே, பல கட்டிடங்கள் அங்கு இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அந்நகரத்தைப் பெரிதாக்கிய இப் பேரரசன் அதற்குத் தன் பெயரை இட்டு ‘மகாமல்லபுரம்’ என்று வழங்கினான். ஆனால், நாளடைவில் அப் பெயர் மாறி ‘மகாபலிபுரம்’ என்று வழங்கலாயிற்று. இம் மகாமல்லபுரம், கரிகாற் சோழன், தொண்டைமான் இளந்திரையன் முதலிய சோழ மன்னர் காலத்தில் சிறந்த கடற்றுரைப் பட்டினமாக இருந்தது என்பதைப் பத்துப் பாட்டால் அறியலாம்.

கோட்டைகள் கட்டிய கொற்றவன்

நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான் என்பர் சிலர். ஆனால், அக்கோட்டை இவன் தந்தை காலத்திலே இருந்தது என்பது சாளுக்கியர் பட்டயத்தால் வெளியாவதால், இவன் அப்பழைய கோட்டையைப் புதுப்பித்தான் என்று கோடலே பொருத்தமுடையது. திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பல்லவரம் (பல்லவபுரம்) என்னும் சிற்றுர் உள்ளது. அதனில் நரசிம்மவர்மன் காலத்துக் கோட்டை ஒன்று பாறைமீது அமைந்து இருந்தது. அக் கோட்டை முழுவதும் அழிந்துவிட்டது. ஆயினும் அதன் அடிப்படையை இன்றும் காணலாம். அங்குப் பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்னும் கிடைக்கின்றன. அவ்வூருக்கு அருகில் பல்லவர்க்கும் சாளுக்கியவர்க்கும், பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர்கள் நடந்துள்ளன. ஆதலின், அப் பல்லவபுரம் பழைய காலத்தில் பல்லவர் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரமாக இருந்தது போலும்! அப் பல்லவபுரப் பாறைமீது ஒரு கல்வெட்டு அழிந்து கிடக்கிறது.[28]

பட்டப் பெயர்கள்

நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில ‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,’ என்பன.

அக்கால அரசர்

(1) சாளுக்கியர்: விந்தமலைக்குத் தென்பாற்பட்ட இடத்தில் இரண்டு பேரரசுகளே நிலைபெற்று இருந்தன. ஒன்று சாளுக்கியர் பேரரசு மற்றொன்று பல்லவர் பேரரசு, சாளுக்கியர் வடக்குத் தெற்காக விந்தமலை முதல் துங்கபத்திரை வரை, கிழக்கே கிருஷ்ணை கோதாவரி யாறுகட்கிடைக்கப்பட்ட நிலம் வரை தங்கள் பேரரசை நிலைப்படுத்தி இருந்தனர். இச்சாளுக்கியப் பேரரசை நிலை நாட்டியவன் இரண்டாம் புலிகேசியை ஆவன். அவன் முதலில் மகேந்திரவர்மனாலும் பின்னர் நரசிம்மவர்மனாலும் தோற்கடிக்கப் பட்டுத் தலைநகரையும் இழந்த செய்தி முன்னரே விளக்கமாகக் கூறப்பட்டதன்றோ? அவனுக்குப் பின் அவன் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆண்டான் எனினும், வாதாபி வெற்றிக்குப் பின் பல்லவ அரசன், பகைவர் பயமின்றி நாட்டை அமைதியாக ஆண்டு வந்தான்; தந்தை விட்டுச்சென்ற கோவிற் பணிகளைக் குறைவறச் செய்தான்.

(2) கங்கர் கிருஷ்ணையாறு முதல் காவிரியாறு வரை பல்லவப் பேரரசு நிலைத்திருத்தது. அதற்குமேற்கே முற்சொன்ன பூவிக்கிரமன் கங்க நாட்டை (கி.பி.608-670) ஆண்டு வந்தான்.

(3) சேரர்: கங்க நாட்டுக்குத் தெற்கே சேரர் சிறப்பின்றிப் பாண்டியர்க்கு அடங்கிப் பெயரளவில் அரசராக இருந்து ஆண்டு வந்தனர்.

(4) களப்பிரர் சோழநாட்டின் பெரும் பகுதி (காவிரியாறு வரை) பல்லவப் பேரரசில் கலந்து விட்டமையால், சிம்மவிஷ்ணு காலத்திருந்தே களப்பிரர் வலிகுன்றிச் சிற்றரசர் ஆகிவிட்டனர். அவர்கள் தஞ்சாவூர், கொடும்பாளுர் முதலிய இடங்களில் முறையே பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராகவும் பாண்டியர்க்கு அடங்கிய சிற்றராசராகவும் இருந்து வந்தனர்.

(5) சோழர்: சோழர் சிற்றரசராக இருந்து திருவாரூர், உறையூர் உள்ளிட்ட பகுதியை ஆண்டு வந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்தும் அவரிடமிருந்து பெண் பெற்றும் உறவு கொண்டாடி வந்தனர்.

ஏறத்தாழக் கி.பி. 575இல் கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டுப் பாண்டிய ஆட்சியை நிலைநிறுத்தினான். அப் பாண்டியர் பட்டியலைக் கானின், நரசிம்மவர்மன் காலத்துப் பாண்டியன், நாம் முன்சொன்ன நெடுமாறன் என்பது விளங்கும்.

பாண்டியர் பட்டியல்

1. கடுங்கோன் (கி.பி. 575-500)

2. மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625)

3. சேந்தன் - சயந்தவர்மன் (கி.பி.625-640)

4. அரிகேசரி மாறவர்மன் - பராங்குசன் (நின்ற சீர் நெடுமாற நாயனார்) (கி.பி. 640-680)

நெடுமாறன் தென்பாண்டி நாட்டில் தனக்கு அடங்காதிருந்த பரவரை வென்று அடக்கினான்: செழித்த குறுநாட்டை அழித்தான்; பிறகு பலமுறை சேரனை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் அவனைக் கைப்பிடியாகப் பிடித்தான். அவன் உற்றார் உறவினரையும் படைகளையும் சிறைப்பிடித்தான்; இங்ஙனம் தனது நாட்டை முதலில் பலப்படுத்திப் பிறகு மேற்கில் இருந்த சேரனை வென்று, பேரரசை நிலைநிறுத்தினான். இவன் காலத்திற்றான் பல்லவர் - பாண்டியர் போர் தொடக்கமானது.[29]


  1. Dr N.Venkataramanyya’s article on “Durvinita and Vikramaditya’ (triveni) p. 116
  2. S.II. Vol. I p. 152.
  3. Indian Antiquary, Vol. VIII, p.227.
  4. S.I.I. Vol.II p.508.
  5. Indian Antiquary, Vol. X, p.134.
  6. Mahavamsa, Part II, p.35 (Colombo, 1909)
  7. Dr. S.K. Aiyangar’s int. to the “Pallavas of Kanchi, p.27.
  8. Indian Antiquary,Vol IX. p. 100
  9. சிறுத்தொண்டர் புராணம், செ.6.
  10. Indian Antiquary, Vol.XIX, pp.151, 152.
  11. Ibdi. Vol. X, P.100.
  12. Mahavamsa (Toumour’s translation) Ch.7
  13. S.I.I. Vol. ii p.343.
  14. சங்கிராமம் - பெளத்த மடங்கள்.
  15. இவன் பாண்டியநாடு சென்றபோது நெடுமாறன் அரசு கட்டில் ஏறினான் & Vide TVS Pandarathar’s Pandyas p.14.
  16. Beal, Records Vol.II p.118.
  17. Archaeological Report for 1918-1919, pp. 16-30. இத்தகைய தூண்கள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலுக்குள் இருக்கின்றன.
  18. P.T.S Iyengar’s “Pallavas’, Part II, pp. 38-40.
  19. Heras’s “Studies in Pallava History’ pp.86-87.
  20. Heras’s “Studies in Pallava History,” p.89 188.
  21. P.T.S. Iyengar’s “pallavas’ part II, pp.41-43.
  22. A.V.T. lyer’s “Indian Architecture’. Bk.II p.225.
  23. Hears’s “Studies in Pallava History’ pp.89-90.
  24. இந்திரன் கோவிலா, ஐராவதேசுவரர் (சிவனார்) கோவிலா என்பது புரியவில்லை. சிலப்பதிகார காலத்தில் ஐராவதத்திற்குக் கோவில் இருந்தமை தெளிவு. இஃது ஆய்வுக்குரியது.
  25. A.W.T. Iyer’s S. Indian Architecture Vol.Il-B.p.227.
  26. Heras’s “Studies in Pallavas History,’ pp.91, 92.
  27. இஃது அர்ச்சுனன் தவத்தையோ, கங்கைக் கரைக் காட்சியையோ குறிப்பதன்று; இது ‘சமணர் தொடர்புடைய ஒரு காட்சி’ என்பர். திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.
  28. P.T.S. Iyengar’s Pallavas, Part II pp.43-44.
  29. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’, pp.51-53