பல்லவர் வரலாறு/15. நந்திவர்மன் - (கி.பி. 775-825)

விக்கிமூலம் இலிருந்து

15. தந்திவர்மன்
(கி.பி. 775-825)

பிறப்பும் ஆட்சிக் காலமும்

தந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் மகன். இவன் இராட்டிரகூடப் பெண்மணியான ரேவா[1]வுக்குப் பிறந்தவன். இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் (வைரமேகன்) மகள் வயிற்றுப் பெயரன் ஆதலின், இவன் தந்திவர்மன் எனப்பட்டான். இவன் அப் பாட்டனைப் போலவே, ‘வைர மேகன் என்னும் பெயரும் பெற்றிருந்தான். இவன் பட்டயங்களும் கல்வெட்டுகளும் திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலிருந்து வடக்கே திருச்சானுர் வரை பரவியுள்ளன; இறுதியிற் கிடைத்த கல்வெட்டு இவனது 51ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பதால், இவன் குறைந்தது 51ஆண்டுகள் அரசாண்டான் என்று ஆராய்ச்சியாளர் கொண்டனர்.

சிறப்பும் மணமும்

இவன் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரமானவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவை. இவன், கதம்பர் மரபுக்கே சிரோமனியாக விளங்கிய அரசனின் மகளான அக்களநிம்மதி என்பவனை மணந்து கொண்டான் என்று பட்டயங்கள் பகர்கின்றன.

இரட்ட அரசர்: கிருஷ்ணன் 1 (கி.பி. 780-794)

தந்திதுர்க்கன் இறந்தபிறகு, அவன் மாமனான கிருஷ்ணன் அரசன் ஆனான். இவன் சாளுக்கியர் மரபை அழித்தான் எலாபுரம் (எல்லோரா) கூற்றத்தில் உள்ள ஒரு மலையில் மிகவும் பாராட்டத்தக்க கயிலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தான். இவன் கி.பி.772இல் இறந்தான்.

துருவன்-கோவிந்தன் போராட்டம்

கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான். இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்; பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான். இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர். துருவன் சிறந்த அரசியல் நிபுணன். அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான். உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்; ஆயின், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.

போர்

உடனே துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு தமையனை வெல்ல முற்பட்டான். கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத்தனக்கு துணையாகக்கொண்டான். நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான். போர் கடுமையாக நடந்தது. துருவனே வெற்றி பெற்றான். அவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.

பல்லவர்-இரட்டர் போர் 1

துருவன் அரசனானவுடன். பெரும் படையொடு புறப்பட்டுத்தன் தமையனுக்கு உதவி புரிந்தோரை வெல்ல விழைந்தான் முதலில் கங்கபாடி அரசனான சிவமாறனை வென்று, தன் முதல் மகனான கம்பரசனைக் கங்கபாடியை ஆளுமாறு விடுத்துக் காஞ்சியை அடைந்தான் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்பொழுது நடந்த போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண்புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயங்கள் குறிக்கின்றன.

துருவன், இங்ஙனம் அடைக்கலம் புக்க தந்திவர்மனைத் தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுமாறு செய்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 2 (கி.பி. 803)

கோவிந்தன் 3: கங்கபாடி, வேங்கி இவற்றைத் தன் பேரரசுடன் சேர்த்த பேரரசனானதுருவன் கி.பி.794இல் இறந்தான். இவன் இறக்கு முன்பே தன் மக்களான கம்பரசன், கர்க்கா சுவர்ணவர்ஷன், கோவிந்தன். இந்திரன்முதலியோருள்கோவிந்தன் என்றதன் மூன்றாம் மகனுக்கே முடிசூட்டினான். அதனால் பெருவெளி படைத்த (மூன்றாம்) கோவிந்தன் கி.பி.794இல் பேரரசன் ஆனான்.[2]

இதனால் முதல் மகனான கம்பரசன் மனம் புழுங்கினான். அவனுடன் சிற்றரசர் பல சேர்ந்தனர். இவர்கள் சூழ்ச்சியை அறிந்த் கோவிந்தன் தன் தமையனாள கம்பரசனையும் அவனுடன் சேர்ந்திருந்த சிற்றரசர் பன்னிருவரையும் போரில் வென்றான். பிறகு குழப்பம் இல்லை.

கோவிந்தன்-தந்திவர்மன் போர்: கோவிந்தன்தன்தமையனுடன் சேர்ந்திருந்த சிற்றரசரைத் தனித்தனியே வென்று, அவர் உரிமைகளைப் பறிமுதல் செய்தான். அங்ஙனம் செய்து கொண்டு

வந்தவன். காஞ்சி அரசனான தந்திவர்மனைத் தாக்கினான். தந்திவர்மன் கோவிந்தனுக்குத் திறை கட்டாதிருந்தனனோ-அல்லது அவற்கு மாறகக் கம்பரசனுடன் சேர்ந்திருந்தனனோ - இரண்டும் இன்றி அவன் வெறுக்கத்தக்க வேறு முறைகளில் நடந்து கொண்டனனோ தெரியவில்லை. தந்திவர்மன் ஏறத்தாழக் கி.பி. 803 இல் தோல்வியுற்றான். தோற்ற தந்திவர்மன் அவனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்தான் போலும்! கோவிந்தன் இங்கு நின்றும் இராமேச்சுரம் வரை சென்று, அங்கு கி.பி. 804 இல் பட்டயம் ஒன்றை (பிரிட்டிஷ் காட்சிச்சாலை பட்டயம் EP.Ind Vol.II.P 126) விடுத்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 3 (கி.பி.808-810)

மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அந்தச் சமயத்தில் கங்கபாடி அரசன். தந்திவர்மன், சேர, சோழ, பாண்டியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவோ அல்லது அவனது நாட்டின்மீது படையெடுக்கவோ சூழ்ச்சி செய்தனர் என்று ‘சஞ்சன்’ பட்டயம் செப்புகிறது. பெருவீரனான கோவிந்தன் கடுஞ்சீற்றம் கொண்டு பெரும் படையுடன் புறப்பட்டான். தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ பாண்டியர் நாடுகளை இராட்டிரகூடவீரர் அளந்து திரிந்தனர். இதனை அறிந்த இலங்கை அரசன் அஞ்சிஅவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.290

தந்திவர்மன் இந்தப் போர் முடிவிலும் வழக்கம்போலக் கோவிந்தனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்திருக்கலாம். என்னை? இப் போருக்குப் பின்னரும் தந்திவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்து பல்லவர் நாட்டை அரசாண்டு வந்தமையால் என்க. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் சொல்லும் தகையவோ?

பல்லவர் - பாண்டியர் போர் (கி.பி. 806 - 817)

வரகுண பாண்டியன் மாறன் இராசசிம்மன் மகன். இவன் காலம் ஏறக்குறையக் கி.பி. 800 - 830 என்னலாம். இவன் கடிலன் பராந்தகன், மாறஞ்சடையன். நெடுஞ்சடையன் எனப் பல பெயர்களைக் கொண்டவன். இவன் தகடூர் அதிகனை எதிர்த்தபொழுது, தந்திவர்மன் அதிகனை ஆதரித்தான்; சேரனும் அதிகனை ஆதிரித்தான். வரகுணன் இவர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்தான். வரகுணன் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் காணப்படுகின்றன. இவன் தனது 16ஆம் ஆட்சி ஆண்டில் தொண்டை நாட்டில் பெண்ணை யாற்றங்கரையில் உள்ள அரைசூரில் இருந்தபொழுது (போர்ப் பாசறையில்) அம்பா சமுத்திரம் பட்டயம் அளித்துள்ளான். இதனால் வரகுணபாண்டியன் பல்லவர் பெருநாட்டைச் சேர்ந்த சோழ நாடு முழுவதையும் கைப்பற்றியதோடு நில்லாமல், தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள நாட்டையும் பிடித்துக் கொண்டான் என்பதை நன்குணலாம்.[3] சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மலைக் கோவில், திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்), திருவிசலூர் என்னும் இடங்களில் வரகுணன் பட்டயங்கள் காண்கின்றன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும் தெற்கே பாண்டியர் படையெடுப்பும் உண்டாகிப் பல்லவன் தத்தளித்தான். தான் இராட்டிரகூடர்க்கு அடங்கிவிட்டமையாலும் வெளி அரசர் உதவி இன்மையாலும் தந்திவர்மன் தக்க உணர்ச்சியோடு பாண்டியனை எதிர்க்க முடியவில்லை.

தந்திவர்மன் அரசியல்

தந்திவர்மன், திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் ஆலம்பாக்கம் என்னும் சிற்றூர்க்கு அண்மையில் தனது பட்டப் பெயரான ‘மாற்பிடுகு’ என்பதை வைத்து ‘மாற்பிடுகு ஏரி’ ஒன்றை வெட்டுவித்தான். இவனது 5ஆம் ஆட்சி ஆண்டில் புதுக்கோட்டைச்சீமையில் ‘வாலிஏரி’ ஒன்றை இவனுடைய சிற்றரசானன-வாலிவடுகள்-கலிமூர்க்க ‘இள அரையன்’ என்பவன் வெட்டுவித்தான். திருவெள்ளரை என்னும் சிற்றுாரில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ ஒன்றைக் கம்பன் அரையன் என்பவன் வெட்டுவித்தான்[4] திருச்சிராப்பளிக்கு அடுத்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு, அவ்வூருக்கு அண்மையில் உள்ள வாய்க்காலை ‘வைரமேகன் வாய்க்கால்’ என்கிறது. ‘வைரமேகன்’ என்பது ‘தந்திவர்மன்’ பெயர்களில் ஒன்று அன்றோ? எனவே, அவ் வாய்க்கால் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டதே என்னல் பொருந்தும். இவன் காலத்தில் திருவிப்பிரம்பேட்டு ஏரி முதலிய பல ஏரிகள் தூய்மை செய்யப்பட்டன. தந்திவர்மன் ஆட்சியில் நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் நன்கு புலனாகின்றது. இவனது காலத்தில் தனிப்பட்ட செல்வர் ஆங்காங்குக்கேணியும் குளமும் எடுத்துள்ளனர்; ஏரிகளைத் தூய்மை செய்துள்ளனர். இஃது உண்மையில் பாராட்டத்தக்க சிறந்த அரசியற் பண்பாகும் அன்றோ?

சில பட்டயங்கள்

இவன் காலத்துக் கல்வெட்டுகள். (1) செஞ்சிக் கோட்டைக்கு அருகில் உள்ள தொந்தூர், (2) உத்தரமல்லூர், (3) திருவல்லிக்கேணி. (4) கூரம். (5) மலையடிப்பட்டு, (6) திருவெள்ளரை, (7) ஆலம்பாக்கம் (8) குடிமல்லம் முதலிய ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றுள் திருவல்லிக்கேணிக் கல்வெட்டைக் காண்க. அது ‘குலங்கிழார்’ (கோவில் அதிகாரி) கோவில் நிலத்தில் ஒரு பகுதியை ஒற்றிவைத்து, அதன் வருமானத்தில் 45 காடி நெல் குறைந்து போனதால், அதற்குப் பதிலாக 30 காடி நெல்லும் 5 கழஞ்சு பொன்னும் புகழ்த்துணை விசையரசன் தானம் செய்தான். இதற்கு நாள் ஒன்றுக்கு 5 நாழி நெல் வட்டியாகும். அதை அரிசியாக்கி நாள்தோறும் திருவமுது படைப்பாராக. என்பது. இந்த வட்டிக் கணக்கு என்ன? 45 காடி நெல்லுக்கு ஆண்டொன்றுக்கு 183/4 கலம் நெல் வட்டி ஆயிற்று.[5]

கோவில்கள்

மலையடிப்பட்டியில் உள்ள மலையைத் தனியாகக் குடைந்து அமைத்தவன் முத்தரையனான குவாவன் சாத்தன் என்பவன். இவ் வேலை தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் முற்றுப் பெற்றதாகும். பல்லவ அரசன், திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்குத் ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றைக் கட்டினான். இவன் வைணவன்[6] ஆயினும், சைவ - வைணவக் கோவில்கட்கு நிரம்பப் பொருள் அளித்தான். திருமங்கை ஆழ்வார் இவன் காலத்திலும் இருந்தனர் என்று சிலர் கூறுவர்.[7]

‘தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் குவிலஞ் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன் திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான்’ என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.[8] தந்திவர்மன் காஞ்சிப் பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ளான்.[9]

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசர் இரண்டாம் சிவமாறன் (கி.பி. 788-812) முதலாம் இராசமல்லன் (கி.பி. 817-853) என்போர் ஆவர்; இரட்ட அரசர் இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 722-780). துருவன் (கி.பி. 780-794), மூன்றாம் கோவிந்தன் (கி.பி.794-814) என்பவர்; பாண்டிய மன்னர் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி.765-790), இரண்டாம் இராசசிம்மன் (கி.பி.790-800), வரகுணமகாராசன் (கி.பி. 800-830) என்பவர்.


  1. ரேவா என்பது நறுமதை யாற்றின் பெயர்.
  2. Altekar’s Rashtrakutas and their Times, pp.50, 55
  3. K.A.N. Sastry’s “Pandian Kingdom’ pp.62-63.
  4. இவை இந்நூலின் பிற்பகுதியில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
  5. Ep. Indica, Vol.VIII.p.291 & P.T.S. Iyengar’s “pallavas part III, p.46.
  6. S.I.I. Vol. II, p.515.
  7. M. Ragava Iyangar’s “Alwargal Kala Nilai’, pp. 109-112.
  8. “Chronological list of Inscriptions of the Pudukkotta State p.2.
  9. S.I.I. Vol. VI, No.34.