பாஞ்சாலி சபதம்/24. தருமபுத்திரன் முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து
24. தருமபுத்திரன் முடிவுரை

வேறு
வீமன் உரைத்தது போலவே-உளம்
வெம்பி நெடுவில் விசயனும் அங்கு
காமனும் சாமனும் ஒப்பவே-நின்ற
காளை இளைஞர் இருவரும்-செய்ய
தாமரைக் கண்ணன் யுதிட்டிரன்-சொல்லைத்
தட்டிப் பணிவொடு பேசினார்;-தவ
நேமத் தவறலும் உண்டுகாண்,-நரர்
நெஞ்சம் கொதித்திடு போழ்திலே. 136

அன்பும் பணிவும் உருக்கொண்டோர்-அணு
வாயினும் தன்சொல் வழாதவர்-அங்கு
வன்பு மொழிசொலக் கேட்டனன்;-அற
மன்னவன் புன்னகை பூத்தனன்;-'அட!
முன்பு சுயோதனன் செய்ததும்-இன்று
மூண்டிருக்குங் கொடுங் கோலமும்-இதன்
பின்பு விளைவதும் தேர்ந்துளேன்-என்னைப்
பித்தனென் றெண்ணி உரைத்திட்டீர்! 137

'கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்
கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்-அது
தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்
தன்மை அதற்குள தாகுமோ?-இதை
ஒப்பிட லாகும் புவியின்மேல்-என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற்கே,-ஒரு
செப்பிடு வித்தையைப் போலவே-புவிச்
செய்திகள் தோன்றிடு மாயினும். 138

'இங்கிவை யாவுந் தவறிலா-விதி
ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
சங்கிலி யக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
மங்கியர் நாளில் அழிவதாம்-நங்கள்
வாழ்க்கை இதனைக் கடந்ததோ? 139

'தோன்றி அழிவது வாழ்க்கைதான்-இங்குத்
துன்பத்தொ டின்பம் வெறுமையாம்-இவை
மூன்றில் எதுவரு மாயினும்,-களி
மூழ்கி நடத்தல் முறைகண்டீர்?-நெஞ்சில்
ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
போன்று நடக்கும் உலகென்றே-கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர். 140

'சேற்றில் உழலும் புழுவிற்கும்,-புவிச்
செல்வ முடைய அரசர்க்கும்-பிச்சை
ஏற்றுடல் காத்திடும் ஏழைக்கும்,-உயிர்
எத்தனை உண்டவை யாவிற்கும்,-நித்தம்
ஆற்றுதற் குள்ள கடமைதான்-முன்வந்து
அவ்வக் கணந்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதிற் புரிகுவார்-பல
சூழ்ந்து கடமை அழிப்பரோ? 141

'யாவருக் கும்பொது வாயினும்-சிறப்
பென்பர் அரசர் குலத்திற்கே-உயர்
தேவரை யப்ப முன்னோர் தமைத்-தங்கள்
சிந்தையிற் கொண்டு பணிகுதல்;-தந்தை
ஏவலை மைந்தர் புரிதற்கே-வில்
இராமன் கதையையும் காட்டினேன்:-புவிக்
காவலர் தம்மிற் சிறந்தநீர்-இன்று
கர்மம் பிழைத்திடு வீர்கொலோ?' 142