உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய திரிபுரங்கள்/006

விக்கிமூலம் இலிருந்து

காம்பவுண்ட் சுவருக்கு அருகே, பூவரசு மரக்கட்டையை பொன்னையா கோடரியால் விறகுகளாகக் கீறிக் கொண்டிருந்தார். முந்தாநாள் நடந்த அம்மன் ‘குடையில்’ சுடலை மாடசாமியாக, சல்லடங்குல்லாய் தரித்து, வெட்டரிவாளை வைத்துக்கொண்டு, முறுக்குத் தடியைப் பிடித்துக்கொண்டு, வேட்டைக்குப் புறப்பட்டபோது, அதோ அந்த முகப்பறையில் கூடியிருக்கும் பிரமுகர்கள் அனைவரும் இவரை விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கினார்கள். இப்போதோ இவர் விழுந்து விழுந்து வெட்டுவதைப் பார்த்து, தத்தம் முகங்களை அலட்சியமாக வெட்டிக்கொள்வதுபோல் தோன்றியது.

இந்தச் சாமியாடிக்கும் ஊர்ப்பிரமுகர்கள் தன்னைக் கும்பிட்டதுதான் ஞாபகம் வருகிறதே தவிர, இதர ஏழை பாழைகள் கும்பிட்டது, நினைத்துப் பார்த்தால்கூட வராது போலிருக்கிறது. அன்று ‘வந்த ஜனம் மெச்ச’ ஆடியவர் இப்போது வயிறு மெச்சுவதற்காக கோடரியை வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக ஆடுகிறார்—கிட்டத்தட்ட கோவிலில் ஆடியது மாதிரியே. அன்றைக்காவது, வாழைப்பழம், புண்ணாக்கு முதலியவற்றை சாமியின் பெயரில் சாப்பிட முடிந்தது. இன்றைக்கு அதுவும் இல்லை. “அண்ணாச்சி... இன்னைக்கி ஒரு முக்கியமான விஷயம் நடக்கப் போவுது. கொஞ்சம்... கொஞ்ச நேரந்தான் விறகு கீறணும்? வருவியளா...” என்று வீட்டுக்காரி ராசம்மா சொன்னபோதே பொன்னையா புரிந்துகொண்டார். கூலி கிடையாது. போனஸ் வெட்டு. தொலைவில் ஒரு மூட்டைக் கோதுமை மாவை கொட்டிவிட்டு, அதைக் கையால் தளம் முழுக்கப் பரப்பிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, “கொஞ்சம் தண்ணி கொண்டு வான்னு எத்தன தடவழா சொல்றது? எருது நோவு காக்கைக்கு தெரியாததுமாதுரி, என் தாகம் ஒனக்குத் தெரியல பாரு” என்று பொன்னையா சீறினார். அவளும் பதிலுக்குச் சீறியிருப்பாள். ‘காலங் காத்தாலயே தலமறவா போயிடுமுன்னு சொன்னேனே, கேட்டீரா... நல்லா படும். ஒம்மா புத்திதான ஒமக்கும் இருக்கும்’ என்று நெஞ்சுக்குள் இருந்ததை வாய்க்குக் கொண்டு வரத்தான் போனாள்... ஆனால் பிரமுகர்களைப் பார்த்ததும், சொல்ல வந்ததை விழுங்கிக்கொண்டாள். ‘வீட்டுக்கு வரட்டும்...’

வீட்டுக்கு மூத்த ‘பிள்ளையான’ தங்கப்பாண்டி சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த தேக்குக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, தொங்கப் போட்டிருந்த கால்களை ஆட்டிக்கொண்டு, கட்டில் காலின் உருண்டு திரண்ட மேல் பாதியை, வலது கையால் தேங்காயை திருவுவது மாதிரி திருவிக் கொண்டிருந்தார். நாற்பத்தெட்டு வயதிருக்கும். கழுத்தில் ‘எட்டு பவுன்’ தங்கச் செயின் தொங்கியது. புலி நகம் போட்ட செயின். மேஜை இல்லாமலே, ஒரு நோட்டுப் புத்தகத்தை வசதியாக வைத்து எழுதுமளவிற்கு, வயிறு பருத்தும் பெருத்தும் வசதியாக இருந்தது. அவருடன் கிராம முன்ஸீப் மாடக்கண்ணு நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே, தங்கப்பாண்டிக்குப் பெண் கொடுத்த மாமனாரான எழுபது வயதுக் கிழவர் ஆறுமுகம், ஜரிகை வேஷ்டி கட்டி, கழுத்தில் ‘மேரியல்’ போட்டு, சாவும்போது வசதியுள்ளவர்களை சிங்காரிப்பார்களே, அப்படிப்பட்ட சிங்காரத்தில் இருந்தார். அவரையடுத்து, சில பண்ணையார்கள் குறுக்கும் நெடுக்குமாக உட்கார்ந்திருந்தார்கள். கட்டிலுக்கு எதிர்த்தாற்போல் போட்டிருந்த நாற்காலிகளில் முதல் நாற்காலியில் இளைய ‘பிள்ளை’ ராஜலிங்கம் பேண்ட் சிலாக்கோடு உட்கார்ந்திருந்தார். போன தடவை ஊருக்கு வந்திருக்கும்போது, வெள்ளவெளேரென்று தெரிந்த தலைப்பகுதி, இப்போது ‘கரு கருப்பாய்’ இருப்பதற்கான காரணம் புரியாமல் பல கிழவர்கள் மயங்கினார்கள். ஒரு சிலருக்கு தங்களுக்கு ‘கண் கெட்டுப் போயிருக்குமோ’ என்று சந்தேகம். இன்னும் ஒரு சிலருக்கு ‘கண்ணாடி’ போட்டதால், தங்களின் ‘வெள்ளெழுத்து’ நோய் போய்விட்ட திருப்தி. ராஜலிங்கத்திற்கு அருகே, கர்ணம், மளிகைக் கடையில் கருப்பட்டியைச் சுற்றிக் கொடுக்க வைத்திருக்கும் அசிங்கமான தாள்கள் மாதிரி, ஒரு கட்டுக் குப்பைக் காகிதங்களை கசக்கிப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். அடிக்கடி, அதைப் பிரித்துப் பிரித்துப் படித்துக்கொண்டார். ‘அடங்கல் பட்டாவாம்’. இங்கேயும் கர்ணம் முன்ஸீப்புக்கு எதிரேதான் இருந்தார். அவரையடுத்து, ராஜலிங்கத்தின் மாமனார் சுருட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி நாற்காலிச் சட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தார். அவரையடுத்து, ‘மற்றும் பலர்’.

தங்கப்பாண்டியின் மனைவி ராசம்மா, அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். ராஜலிங்கத்தின் மனைவி மேரி புஷ்பம், ஒரு பொய்க் கொண்டையில் இலைதழையோடு கூடிய ஏதோ ஒருவித பூ மொந்தையை வைத்துக்கொண்டு, நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசல்படியில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள். இந்த ராஜலிங்கம் திருநெல்வேலியில் கலெக்டர் ஆபீஸில் சேர்ந்தவுடனேயே அந்தக் காலத்தில் ‘பத்திரகாளியம்மனாக’ சாமியாடிய தாத்தாவின் சம்மதத்துடனேயே, ‘ஜோசப் டேவிட்டாக’ மாறி, குலதெய்வமான சுடலை மாடசாமி கோவிலில் மணமகள் வீட்டாருக்குத் தெரியாமலே பூஜையும் போட்டுவிட்டு, அப்புறம் பணக்கார வம்சத்தைச் சேர்ந்த மேரி புஷ்பத்தை சர்ச்சில் பிடித்தார். முதல் பிள்ளை நான்கு வயதில் சற்று இழுத்து இழுத்து நடந்ததால், சுடலை மாடசாமியின் ‘கோபத்தைத்’ தணிக்கும் வகையில் ‘கொடைக்கு’ ‘வரி’ கொடுத்ததோடு, சாமிக்கு வேட்டிகூட எடுத்துக் கட்டினார். சர்ச்சுக்குப் போவதைக் குறைத்தார். என்றாலும், இரண்டாவதாகப் பிறந்த பெண்ணும் மூளைக்கோளாறு உள்ளவள்போல் தோன்றியதும், பாதிரியாரிடம் போய் ‘பாவமன்னிப்பு’ப் பெற்றார். அப்படியும் மூன்றாவது பிறந்த பையன் ஒரு வருடத்திற்குள் ‘துள்ளத் துடிக்சு’ இறந்ததும் மீண்டும் சுடலை மாடசாமியிடம் வந்தார். இப்போது சர்ச்சுக்கு ஜோஸப் டேவிட்டாகவும், சுடலைமாடனுக்கு ராஜலிங்கமாகவும் அவரால் நடமாட முடிகிறது.

பேச்சை எப்படித் துவக்குவது என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, மேரி புஷ்பம் தன் எட்டு வயதுப் பையன் ஜாய்ஸ்லினைப் பார்த்து, “இவங்களுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டுடா” என்றாள். அந்த எட்டு வயதுப் பொடியன் “டிவிங்கில்... டிவிங்கில் லிட்டில் ஸ்டார்” என்று சொல்லிக்கொண்டு கைகளை மேல் நோக்கிக் குவித்து, கால்களை ஆட்டினான். உடனே தரையில் பால் டப்பாவை எடுத்து வைத்துக்கொண்டு ‘மேளம்’ அடித்துக் கொண்டிருந்த தன் பெரிய மைத்துனர் தங்கப்பாண்டியின் மகன் குமாரை, ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே “ஜாய்ஸ்லின், இந்த குமாருக்கு ஒரு மாசந்தான் சின்னவன். ஒரு மாசமா... ரெண்டு மாசமா... ஆமாம்... ஒரு மாசந்தான். இவன் ஜூன். அவன் ஜூலை...” என்றாள் மேரி புஷ்பம்.

ஒரு மாதம் முன்னால் பிறந்த குமாரால், இப்படிப் பாட முடியுமா என்பதுபோல் அவன் முகத்தை ‘பாவமாக’ வைத்துக் கொண்டபோது, பொன்னையாவிடம் ‘அந்தா கிடக்கே... வாதமசக்கி... ஆயும்... கொஞ்சம் கீறுனா போதும்’, என்று சொல்வதற்காக படியிறங்கிய ராசம்மா, அங்கேயே நின்றாள். அவளையும் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. குமார் பயலோ, எதுவும் நடக்காததுபோல் பல்லைக் கடித்துக்கொண்டே டின்னை அடித்தான்.

‘டிவிங்கிலை’ முடித்துவிட்ட ஜாய்ஸிலின், அம்மாக்காரி மேரி புஷ்பத்தைப் பார்த்தான். உடனே அவள் “டிராட்... டிராட், பாடு” என்றாள். ‘பேபி கோஸ் டு ஸ்கூல்... டிராட்... டிராட்’ என்று துவங்கும் ஆங்கிலப் பாடலை கிட்டாம்பட்டி ‘ஆக்ஸன்னோடு’ பையன் பாடிக் கொண்டிருந்தாள். அவன் கையை ஆட்டிய விதமும், காலைத் துக்கிய லாகவமும், கவர்ச்சியாகத்தான் இருந்தது பிரமுகர்கள் மகிழ்ந்து போனார்கள்.

“பலே... நீதாண்டா ஒங்க தாத்தா பேர எடுத்தால் எடுக்கணும்” என்றார் முன்ஸீப். அப்போது ராஜலிங்கமும், தங்கப்பாண்டியும், அவரைப் பார்த்து லேசாக முறைத்தார்கள்.

“அவரு இவனுக்கு எம்மாத்திரம்வே? நம்ம முன்ஸீப்புக்கு இக்கன்னா போடத்தான் தெரியும்... யார் யார் எப்படின்னு சொல்லத் தெரியாது... நம்ம குமார் கலெக்டரா வரப்போறான் பாருங்க...” என்றார் கர்ணம், கையில் இருந்த அடங்கல் பட்டாவை ஆட்டிக்கொண்டே !

“எல்லாம் வளப்புல இருக்குவே... இவன் மேரி புஷ்பத்தோட மகனாச்சே...” என்றார் இன்னொரு கிழவர்.

ஜாய்ஸ்லின் பயலுக்கு எப்படியோ, மேரி புஷ்பத்திற்கு பெருமை பிடிப்படவில்லை. “ஜாய்ஸ்... ஓல்ட் விச் ஸ்டோரியச் சொல்லு பார்க்கலாம்” என்றாள். அந்தப் பயல் இப்போது ‘ஓல்ட் விச்’ கதையைச் சொல்லாமல், இன்னமும் ‘மேளம்’ அடித்துக் கொண்டிருந்த பெரியப்பா மகன் குமாரைப் பார்த்து “காலையில் உதச்சியே, இப்போ பைட்டுக்கு வாரீயாடா... பேஸ்டர்ட் தேவடியா பிள்ளா” என்று சவாலிட்டு குமாரின் கையைப் பிடிக்கப் போனதுடன், பிரபல பத்திரிகைகளில் கூடப் பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளை, மேற்கொண்டும் பேசிக்கொண்டே போனான்.

எல்லோரும் அசந்துவிட்டார்கள். ‘எல்லாம் வளப்புல இருக்குவே’ என்று சொன்ன அதே கிழவர், மேரி புஷ்பத்தை வேறு விதமாக வெறித்துப் பார்த்தார். இன்னும் படியிலேயே நின்ற ராசம்மா மேரிபுஷ்பத்தை நோட்டம் விட்டுக்கொண்டே “ஏய்!... குமார்... ‘நீராருங் கடலுடுத்த’ பாடிக் காட்டுடா... இவனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தாலும் வராது” என்றாள், அவற்றைச் சொல்லிக் கொடுத்துத் தோற்றவள்போல.

மேரி புஷ்பமும் போரில் தோற்ற ராவணன் ‘ஜானகி நகுவாள்’ என்று வருத்தப்பட்டதுபோல், பிரமுகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ‘ராசம்மா பாடுவாள்’ என்று நாணினாள். இருந்தாலும், தேக்குத் தூண் அருகே, ஒரு நீளமான குச்சியில், அதைவிட சின்னக் குச்சியை குறுக்காக வைத்து, மத்தியில் ஒரு நூலை வைத்துக் கட்டிக்கொண்டிருந்த ஏழுவயது மகள் ஜெய்ஸியைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டே “ஜாய்ஸ்லின் சில சமயம் இப்படித்தான் லூசாயிடுவான்... ஆனால் அவள் அப்படி இல்ல... ரொம்ப ரிலிஜியஸ் இப்பக்கூட சிலுவை செய்யுறத பாருங்க...” என்றாள். எல்லோரும் ஜெய்ஸியைப் பார்த்தபோது, அந்தச் சிறுமியோ “இது ஒண்ணும் சிலுவை இல்ல ஏரோப்பிளேன்” என்றாள் வெடுக்கென்று.

சுவரில் மாட்டியிருந்த ரிவெக்ஸ் கடிகாரம் பன்னிரெண்டு தடவை அடித்தது. உடனே கர்ணம் “சரி, மணியடிக்குது. நல்ல நேரம் பேச்ச ஆரம்பிப்போமா?” என்றார்.

“ஏன்வே பட்டையில் போட்ட நண்டு மாதுரி பறக்கியரு...?” என்றார் முன்ஸீப்.

“இது நீரு பிரிச்ச வரியை கஜானாவுல கட்டாதது மாதிரி நிதானமாக நடக்கிற விவகாரம் இல்ல. இப்பவே முடியப் போறது... என்ன சின்னையா... நான் சொல்லுறது...” என்றார் கர்ணம்.

முன்ஸீப்பிற்கு சின்னையாவான கந்தசாமிக் கிழவர் “இதுல என்னப்பா சொல்றதுக்கு இருக்கு? ராமன், லட்சுமணன் மாதிரி இருக்கிறவங்க... சும்மா... நாம பேச வேண்டியது உலக முறைக்கித்தான். சரி. சத்திரப்பட்டை பாசனத்துல எவ்வளவு இருக்கு...? நாலரைக் கோட்டை விதப்பாடா?” என்றார்.

கர்ணம் இடைமறித்தார். “நாலரைக் கோட்டையும் ஒருவர்பேர்ல இல்ல. சர்க்கார்ல இந்தக் கூறுகெட்ட குப்பங்க நிலச் சீர்திருத்தமுன்னு கொண்டுவரும்போது இவங்கய்யா என் காத கடிச்சாரு. இப்போ, பலர் பேர்ல பட்டா இருக்கு.”

முன்ஸீப் பதிலளித்தார். “என்னவே, ஜமாபந்தில உளறுறது மாதிரியே உளறுறியரு? பட்டாவா இப்ப முக்கியம்? அதத்தான் எப்படி வேணும்னாலும் பண்ணிக்கலாமே. மொதல்ல நிலத்தப் பிரிச்சிப் பாப்போம்...”

கந்தசாமிக் கிழவர் தலையிட்டார். “சரி, ஒங்க சண்டய கச்சேரில வச்சுக்கங்க. எப்பா, ராஜலிங்கம்! தங்கப்பாண்டி! சத்திரப்பட்டை குளத்துல நாலரைக் கோட்டையும், சீமப்பேரில இருக்கிற மூணு கோட்டையும், சரியா இருக்கும் ஏன்னா சீமப்பேரிலே... எல்லாப் பயிரும் போடலாம் பாரு... யார் யாரு, எத எத எடுத்துக்கிடுறீய? சீக்கிரமாச் சொல்லுங்க, நாழியாவுது...!”

ராஜலிங்கம் குழைந்தார்... “அண்ணன் எத வேணுமுன்னாலும் எடுக்கட்டும். அவன் எடுத்ததுபோக மிச்சம் இருந்தால் தரட்டும்...”

தங்கப்பாண்டி, தம்பியை பாசத்தோடு பார்த்துச் சொன்னார். “அதெப்படிடா... நீ வெளியூர்ல இருக்கவன் நானாவது இங்க இருந்து எல்லாத்தையும் கவனிக்கிறவன். அதனால ஒனக்குப் பிடிச்சத எடுத்துக்கிட்டு பிடிக்காதத தா. வாங்கிக்கிறேன்...”

“எங்க இருந்தாலும் நீதான் என் வயலையும் கவனிக்கப்போற! ஒன் இஷ்டம் எத வேணுமுன்னாலும் தாங்க”

“சரி மாமா... தம்பிக்கு சீமப்பேரி பாசனத்தை கொடுத்திடுங்க. சத்திரப்பட்டையில சில சமயம் ‘கமலை’ அடிக்கணும். அது இவனுக்கு தோதுப்படாது.”

முன்ஸீப், கையாட்டிக்கொண்டே பேசினார் “அப்டி பங்கு வைக்கது தப்பு. ஒவ்வொரு பாசனத்தையும் ரெண்டு ரெண்டா போடணும். அப்பத்தான் ஒருவன் வயல இன்னொருவன் பார்த்துக்கலாம்.”

கர்ணம் விடுவாரா? அதுவும் முன்ஸீப் பேசும்போது. “வே... பேசத் தெரிஞ்சா பேசும்... இல்லன்னா சும்மாக் கெடயும். போனவாரம் இப்படித்தான தாசில்தார்கிட்ட எடக்குமடக்கா பேசி மாட்டிக்கிட்டியரு... ஒரு பாசனத்த ரெண்டா பிரிச்சா... பம்பு ஸெட்ட எப்படிவே பிரிப்பியரு? டிராக்டர் எப்படிவே பிரிப்பியரு? பிரிவினன்னு வந்த பிறவு அவன் பாப்பான் இவன் பாப்பான்னு சொல்லுததுல அர்த்தம் இருக்காவே? படுகளத்துல ஒப்பாரிவச்சு என்னவே அர்த்தம்...”

கந்தசாமிக் கிழவர், அவர்களை கையமர்த்திவிட்டுப் பேசினார். “சரிப்பா, சத்திரப்பட்ட பாசனம் மூத்தவனுக்கு! சீவலப்பேரி இளையவனுக்கு! அப்புறம் கடையம் பாசனத்துவ இருக்கிற மூணு கோட்ட விதப்பாட்ட எப்படிப் பிரிக்கிறது...?”

“தம்பிக்கிட்ட கொடுத்திடலாம்... அவன் திருநெல்வேலியில் இருந்து பஸ்ல வந்து நிலத்தைப் பார்த்துட்டுப் போவ வசதியா இருக்கும். நான் அதுக்குப் பதிலா பேச்சியம்மன் குளத்துல மூணு கோட்டை புஞ்சைய எடுத்துக்கிடுறேன்...”

“நீ ரொம்ப விட்டுக் கொடுக்க அண்ணாச்சி... புஞ்சையும் நஞ்சையும் ஒண்ணாகுமா? அதோட அந்த நிலத்துக்கு அப்பாவுக்குத் தெரியாமலே அட்வான்ஸ் கொடுத்தது நீதான்... நான் மட்டும் வச்சிக்கிட்டா நியாயம் இல்ல...”

முன்ஸீப் கர்ணத்தைப் பார்த்து கண்ணடித்துப் பேசினார்: “பாத்தியராவே... அண்ணன் தம்பின்னா இப்டில்லா இருக்கணும்... நீரு ஒம்ம தம்பிகிட்ட இப்டி நடந்திருந்தா இப்போ கோர்ட்டுக்கு அலைய வேண்டியது மிச்சமில்லா...”

கர்ணம் தோற்றதற்கு அடையாளமாகக் கோபப்பட்டார். “வே... நான் அப்புறம் கிளறுனேமுன்னா, நீரு அசல் குப்பையா ஆயிடுவீரு....”

சுந்தசாமிக் கிழவர் மீண்டும் அவர்களை கையமர்த்தவில்லை. “சரி... கடையம் வயல பாதிப் பாதியா பிரிச்சுடலாம். அண்ணன் தம்பிங்க எங்கயாவது ஒரு இடத்துல சந்திக்கணுமில்லியா... அப்புறம் வீட்டுக்கு வருவோமா...” என்று சொல்லிக்கொண்டே, கிராம முன்ஸீப்பையும் கர்ணத்தையும் அலட்சியப்படுத்தினார். இதற்குள் பள்ளி ஆசிரியை சரஸ்வதி காபி டம்ளர்கள் கொண்ட ஒரு தட்டோடு தோன்றினாள். வீட்டுக்குள்ளே இன்னொரு ஆசிரியை பார்வதி, அடுப்பிற்கு மேலிருந்த வாணலியில், கடலைமாவை, உருட்டி உருட்டிப் போட்டுக்கொண்டிருந்தாள். வாணலியில் இருந்து ‘ஷ்...ஷ்...’ என்று கிளம்பியன் ஓசை இனிமேல் விவகாரமே இல்லை என்பது போலவும், இனிமேல்தான் இருக்கிறது என்பது போலவும் சொல்லாமல் சொன்னது. இதற்குள் தலைமை ஆசிரியர் தங்கசாமி வெளியே இருந்து ஒரு ‘சிவப்பு’ வெற்றிலைக் கட்டுடன் உள்ளே வந்தார்.

பிரமுகர்கள், காபியை குடித்துக்கொண்டே. பிரிவினையை ஏறக்குறைய தீர்த்துவிட்டார்கள். அண்ணன் தம்பி இருவரும், யார் கர்ணன் என்பதை தெளிவாக்குவதற்காக ‘விடு’ என்று சொல்லுமுன்னாலேயே விட்டுக் கொடுத்ததால், சில பிரமுகர்களுக்குக் குறிப்பாக கந்தசாமிக் கிழவருக்கு, ஏன் வந்தோம் என்பது போலிருந்தது. மாந்தோப்பு பெரியவருக்கும், தென்னந்தோப்பு சின்னவருக்கும் கொடுக்கப்பட்டன. டிராக்டர், பெரியவர்க்கு... அதற்குப் பிரதியாக திருநெல்வேலியில் ஓடும் ‘டாக்ஸி’ சின்னவருக்கு... ஊருக்குச் சற்று ஒதுங்கிய இடத்தில் ‘வந்த விலைக்கு’ வாங்கிப் போட்டிருந்த ஒரு சின்ன வீடே தனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார் சின்னவர். “நீ அதிகாரியாய் இருக்கறவன். நாலுபேர கூட்டிக்கிட்டு வாரவன். ஒனக்கு இந்த வீடுதாண்டா லாயக்கு. நான் வாத்தியார். எதுல வேணுமுன்னாலும் இருந்துக்குவேன்!” என்று மூத்தவர் சொன்னபோது, இளையவர், தன் மனைவியை தெரியாத்தனமாக எதிர்த்துப் பேசிவிட்டவர்போல் பதை பதைத்து, “இல்ல அண்ணாச்சி... நான் எப்பவாவது எட்டிப் பாத்துட்டு வந்த வேகத்துலேயே ஓடிப் போறவன்... நீ பிள்ள குட்டிக்காரன். ஒனக்குத்தான் இந்த வீடு...” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார்.

கர்ணத்தால் மேலும் பேசாமல் இருக்க முடியவில்லை. “எதுக்கும் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் போட்டுடுவோம். அப்படியே திருஷ்டி சுத்திப் போடுங்க. இந்த மாதுரி சுமுகமா, எந்த வீட்லயும் பாகம் பிரிச்சது கிடையாது” என்றார்.

மேரி புஷ்பம், படிதாண்டி வெளியே வந்து, கந்தசாமிக் கிழவரைப் பார்த்துக் கேட்டாள். “அப்புறம், ஸ்கூல் யாருக்குன்னு பேசிட்டியளா... இனிமேல்தான் பேசணுமா...?”

கர்ணம் எழுதப் போவதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த தங்கப்பாண்டி திடுக்கிட்டார். கண்டுக்காததுமாதிரி “உம்... சீக்கிரமா எழுதும்...” என்று சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் தம்பியின் மனைவியைப் பார்த்தார். அவள் மீண்டும் கேட்டாள்: “ஸ்கூல் எங்களுக்குத் தானே?”

தங்கப்பாண்டி, கர்ணத்தோடு சேர்ந்து தலை நிமிர்ந்தார். தம்பி, ‘அமுக்கடி கள்ளன்’ மாதிரி மேலே ஓடிய மின்விசிறியைப் பார்த்தபோது. அவர் கந்தசாமிக் கிழவரைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார். கிழவரும் தன் ‘தங்கச்சி மகன்’ விஷயத்தை நினைத்துக் கொண்டும். ரெண்டுபடப் போகும் வீட்டில் தனக்கு ‘தொக்கு’ கிடைத்த திருப்தியிலும் அமைதியாகப் பேசினார். “இருபது இருபத்திரண்டு வருஷமா, அவன்தான் ஸ்கூல கட்டி அழுவுறான்... வச்சிட்டுப் போறான்...”

மேரிபுஷ்பம் அனாவசியமாகப் பதிலளித்தாள்: “அதனாலதான் கேக்கோம்... அவரு இருபத்திரண்டு வருஷமா அனுபவிச்சுட்டாரு... நாங்களும் கொஞ்ச காலத்துக்கு வச்சிட்டுப் போறோம்!”

கந்தசாமிக் கிழவர் அதட்டினார். “நீ சும்மா இரு அம்மாளு. பள்ளிக்கூடம்—பொல்லாத பள்ளிககூடம்... இன்னைக்கோ நாளைக்கோன்னு சுவருவ நிக்குது. இருக்கதுல்லாம் ஓட்டப் பெஞ்சு... கட்டடம் ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பொறாது. இது வந்துதானா ஒனக்கு நிறையப் போவுது? கணக்கப்பிள்ள... நீ ஏய்யா எழுதாம முழிக்கே... எழுது. ஸ்கூலு தங்கப்பாண்டிக்குன்னு ஒரு வரி எழுதிடு...”

மேரி புஷ்பம், ரோஷத்தோடு பேசினாள்: “கர்ணம் கொஞ்ச நேரம் சும்மா இரும்... சித்தப்பா, நீங்க இப்படி பேசுறது தப்பு. ஒரு கண்ணுல சுண்ணாம்பும் இன்னொரு கண்ணுல வெண்ணெயும் வைக்கது தப்பு. ஓரம் சாய்ந்து வழக்குப் பேசுறவரோட குடி ஒரேயடியாய் போயிடும். ஒங்களுக்கு ரெண்டுபேரும் ஒரேமாதிரி தெரியணும் என்கிறது தெரியல...”

சுந்தசாமிக் கிழவரின் உதடுகள் துடித்தன: “அப்படின்னா... நாங்க ஓரம் சாஞ்சி பேசறோமுன்னு சொல்றியா? என் குடி கெட்டுப் போகுமுன்னு சாபம் போடுறியா? நீ மவராசியா ஒன் மச்சானோட பேசி முடிச்சுக்க. வாங்கடா நாம போவலாம். இனும நமக்கு இங்க வேல இல்ல... எந்திரிங்கப்பா...”

‘இனுமதான் வேலை இருக்கு’ என்பதுபோல் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்து நின்ற கந்தசாமியை, ராஜலிங்கத்தின் மாமனார் ‘உட்காரும்வே’ என்று ஒப்புக்கு கையைப் பிடித்தபோது, அந்தக் கிழவரும் ‘டங்கென்று’ ஒரேயடியாய் உட்காருபவர்போல் உட்கார்ந்தார். இதற்குள் ராசம்மாவும் அங்கே வந்து கொண்டிருந்தாள். வந்துகொண்டே பேசினாள்: “தலயே போனாலுஞ் சரி... பள்ளிக்கூடத்த குடுக்க முடியாது...”

“அப்டிப் பேசாதக்கா... பள்ளிக்கூடம் ஒப்பா வீட்ல இருந்து நீ கொண்டு வரல.”

“ஆமா... நீதான் ஒய்யா வீட்ல இருந்து இவ்வளவு பெரிய பள்ளிக்கூடத்த கொண்டு வந்தியாக்கும்...”

தடித்த அந்த இரண்டு பெண்களின் வார்த்தைகளும் இப்போது தடிப்பதுபோல் தெரிந்ததால், தங்கப்பாண்டி, தம்பியை நேராகப் பார்த்துக் கேட்டார்: “ஒன் பெண்டாட்டி பேசுறதுல, ஒனக்கு சம்மதமாடா?”

“சம்மதமில்லாட்டா இந்நேரம் அவள தடுத்திருப்பேனே... எனக்கும் இந்த ஊர்ல ஒரு பிடிப்பு இருக்கண்டாமா? நிலத்தை குத்தகைக்கு அடச்சிடலாம். ஊருக்கு வராமலே நெல்ல வாங்கிக்கலாம். ஸ்கூல் எனக்குன்னா நான் அடிக்கடி வரலாம். பிறந்த மண்ண மறக்க மாட்டேன்.”

“ஒனக்கு, ஒன்கூட பிறந்தவனவிட, மண்ணு பெரிசாயிட்டு?”

“ஒனக்கு, நான் இந்த ஊருக்கு வரப்படாதுன்னு ஒரு எண்ணம் வந்துட்டு.”

“ஏய்... பள்ளிக்கூடம் யார் பேருக்கு இருந்தா என்னடா?”

“அப்படீன்னா, என் பேருக்கே இருக்கட்டுமே.”

இதுவரை பேசாமல், சும்மா வெறும் வாயை மென்று கொண்டிருந்த கீழத்தெரு மணிமுத்து ஆவேசமாய் பேசினார். அவருடைய அய்யாகூடப் பிறந்த அத்தையைத்தான் பள்ளிக்கூடத்தை ஏற்படுத்திய சுடலைமாடனுக்கு கொடுத்திருந்தது. அத்தைக்காரியை, மாடன் அப்புறம் தள்ளிவைத்து விட்டாலும். மணிமுத்து, தன்னை அந்த வீட்டுக்குள் அடிக்கடி தள்ளிக்கொண்டு வருபவர், உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார். இவ்வளவுக்கும் அண்ணன்—தம்பி இருவரும் சுடலைமாடனின் ‘இளையோடியாள்’ பிள்ளைகள். அவர் அத்தை பிள்ளை பெறுவதற்கு, சுடலைமாடன் வாய்ப்பே கொடுக்காமல் தள்ளி வைத்து விட்டார்.

“பூனைங்க ரொட்டிக்கு சண்டைபோட்டு, குரங்குகிட்ட போன கதை மாதுரி பண்ணிப்படாதிங்கடா... எங்க அத்த புருஷன் அஞ்சி படிச்சிட்டு, அப்புறம் எதையோ ஒன்னப் படிச்சிட்டு, திண்ணயில பள்ளிக்கூடம் ஆரம்பிச்சது இன்னும் ஞாபகமா நெஞ்சில இருக்குடா... அவரு, ‘காலேரைக்கால் துட்டுக்கு நாலேரைக்கா வாழைக்காய், நாலேரைக்கா துட்டுக்கு எத்தன வாழைக்கா’ன்னு இப்பதான் கேக்கறதுமாதிரி இருக்கு மாகாணி வாய்ப்பாட்டச் சொல்லலன்னு என் முதுகில் அடிச்சத நினைச்சா இப்பகூட வலிக்குது. தழும்புகூட இன்னும் மறையல... வீடு வீடா போயி, நாய் மாதுரி காத்துக் கிடந்து, பிள்ளியளக் கொண்டு வந்து ஆரம்பிச்ச பள்ளிக்கூடண்டா இது... இப்ப எட்டாப்பு வரைக்கும் வந்து, இன்னும் பத்தாப்பு வரைக்கும் வரவேண்டிய பள்ளிக்கூடண்டா இது... வெண்ண திரளும்போது தாழிய உடைச்சிடாதியடா. இந்தப் பள்ளிக்கூடம் வந்த பிறவுதான், இந்த வீட்ட கட்டுனாரு. இது வந்த பிறவுதான் சத்திரப்பட்டையில் நாலரைக் கோட்ட நிலமும் கடயத்துல மூணு கோட்ட நிலமும் வாங்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால, எங்க மாமன் வெறும் ஓட்டாண்டிதான். என் நிலமயிலதான் இருந்தாரு. அப்படி கட்டிக் காப்பாத்துன பள்ளிக்கூடத்த ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிப்பிடாதிங்கடா. இது கற்பகத்தருடா... ஒங்களுக்கு வீடுவாசலையும் பால் பவுடரையும் கொடுத்த காமதேனுப் பசுடா.”

தங்கப்பாண்டி அவரை நீதிபதியாக நினைத்து வாதாடினார். “இந்தப் பள்ளிக்கூடத்து கட்டிக் காப்பாத்த என்ன பாடுபட்டேன்னு ஒமக்கே தெரியும். கவாலிப் பயலுவ என்ன கேள்வில்லாம் கேட்டாங்க... வாத்தியாருங்ககூட பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால எப்டி ‘செட்டு’ சேர்ந்தாங்க.. ‘வடக்கூர்ல’ வேதப் பள்ளிக்கூடம் போட்டியா வந்தபொறவு, பிள்ளிங்க எண்ணிக்கை குறைஞ்சுது... நான் நம்ம ஊர் ஆளுங்க காலுல கையில விழுந்து எப்படிச் சேர்த்தேன். நாயே பேயேன்னு பேசுன டி.இ.ஓ.கிட்ட கூடல்லாம் எப்டி எப்டி குழஞ்சேன்... இன்னையோடு அந்தப் பள்ளிக்கூடத்துல என் கால்பட்டு இருபத்தோறு வருஷம் ஆவுது தம்பி... அந்தக் காலை ஒதைக்கப் பார்க்கது நியாயமா? பள்ளிக்கூடமே பழின்னு கிடக்கிற என்கிட்ட இருந்து அத பிடுங்கினால் நான் இருக்கதுல அர்த்தமில்ல. இந்த சனியன் பிடிச்ச பள்ளிக்கூடத்துக்காவ என்ன பாடெல்லாம் பட்டிருக்கேன்.”

மேரி புஷ்பம், கணவனைப் பார்த்துக் கேட்டாள்: “ஏன் பேசாமல் இருக்கீங்க? நீங்க மட்டும் கலெக்டர் ஆபிஸ்ல இல்லாட்டா, இவரு டெப்டி இன்ஸ்பெக்டர அடிச்சதுக்கு... ஜெயிலுக்கு போகாம இருக்க முடியுமா? வாத்தியாருங்க கொடுத்த மனுவால குளோஸாகப் போன பள்ளிக்கூடத்த, நீங்க மட்டும் இல்லாட்டா திறந்திருக்க முடியுமா? பணம் வாங்கிக்கிட்டு மத்தியானச் சாப்பாடு போடாததுக்கு, பீ.டி.ஓ. ரிப்போர்ட் பண்ணினார். நீங்க அவருகிட்ட போய் பேசாட்டா பள்ளிக்கூடம் இருந்திருக்குமா? வாத்தியாருங்க எழுதிப் போட்ட மொட்ட மனுக்காக டி.இ.ஓ. ஆபிஸ்ல போய்ப் பார்த்து, அந்த மனுக்களயே இவருகிட்ட கொண்டுவந்து காட்டாட்டா... இவருதான் ‘மொட்ட மனு’ வாத்தியாருங்கள, அடையாளம் கண்டு அவங்கள நீக்கி இருக்க முடியுமா? அவங்கதான் அடங்கியிருப்பாங்களா? இதுக்காக ஒங்க கைல இருந்து எவ்வளவு காசு செலவாகி இருக்கும்? சொல்லுங்க”

ராசம்மா வாயைத் திறந்தபோதே, ‘ஆவி’ லெளியேறியது. “சும்மா அப்பாவி வாத்தியானை ஏமாத்திப்பிடலாமுன்னு பாக்கியளோ... அதுதான் நடக்காது... எதக் கொடுத்தாலும் கொடுப்போம்... பள்ளிக்கூடத்த மட்டும் கொடுக்க முடியாது...”

“ஒனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பாடஞ் சொல்லிக் கொடுக்க வேண்டிய வாத்திமார்களை வீட்டு வேலைக்கு ஏவ முடியாது பாரு... கோதுமையைக் காயப்போட முடியாது பாரு... எண்ணை டின்கள, அடுக்கடுக்கா அடுக்க முடியாது பாரு... இதுக்குமேல வளையல் பண்ண முடியாது பாரு... கஷ்டமாத்தான் இருக்கும். ஒன் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு. ஒரு நல்ல சாப்பாடு உண்டா? நேத்து வச்ச குழம்ப இன்னைக்கு ஊத்துற. பள்ளிக்கூடத்துக்கு வார கோதுமையில் ஒரு படியாவது கொடுத்திருக்கியா? பள்ளிக்கூடம் எங்களுக்குத்தான் வேணும்.”

கர்ணம் வாயைத் திறந்தார்: “நான் ஒண்ணு சொல்றேன். நடக்க முடியுறதத்தான் சொல்லப் போறேன்!”

“நீரு திருஷ்டி சுத்தணுமுன்னு சொன்னவுடனேயே எல்லாம் நடந்தாச்சு. இனும் என்னத்தலே பேசறதுக்கு இருக்கு?” என்றார் சமயம் பார்த்திருந்த முன்சீப்.

கர்ணம், அழுத்தந் திருத்தமாகப் பேசினார்: “எதுக்கு வீணா அடிச்சிக்கிடுறிய. பேசாம மேனேஜ்மெண்ட் கமிட்டி போட்டுறலாம். இவங்க ரெண்டுபேரோட நான், நம்ம முன்சீப்பு, இவரு கந்தசாமி மச்சான், இன்னும் ரெண்டுபேர்னு போட்டுட்டா வம்பில்ல. அதோட பள்ளிக்கூட இடம் பட்டா நிலம் இல்ல. நத்தம் புறம் போக்குத்தான்.”

கிராம முன்சீப், கர்ணத்தை முதல் தடவையாக குளிர்ச்சியாகப் பார்த்தபோது, ராஜலிங்கத்தின் மாமனார், மருமகன் சார்பில் “எவ்வளவு மொய் வேணுமுன்னாலும் வாங்கிக்கட்டும். பள்ளிக்கூடத்த தந்திடணும்” என்றார்.

உடனே தங்கப்பாண்டியின் மாமனார், “நான் இப்பவே இந்த இடத்துலயே ரூபாய் தாரேன். பஞ்சாயத்துல எவ்வளவு சொல்றாவுளோ, அவ்வளவையும் தாரேன். ஆனால் பள்ளிக்கூடம் இவருக்குத்தான்” என்றார்.

“ஒருக்காலும் தரமுடியாது. நீங்க தலைகீழ நின்னாலும் தரமுடியாது” என்றார் தங்கப்பாண்டி. ராஜலிங்கத்திற்கும் கோபம் வந்தது. ‘உடன் பிறப்பை’ உற்றுப் பார்ததார்.

“அந்தக் காலத்துலயே, நான் காலேஜ் படிக்கையில், எங்கண்ணன் ‘இவனை எப்படிப் படிக்க வைக்கலாம். என்னை எஸ். எஸ். எல்.சில விட்டுட்டு இவனுக்கு மட்டும் காலேஜா’ன்னு கேட்டவன். அப்போ இருந்த பொறாமப் புத்தி இன்னும் போகல! இவன் வாத்தியானுக்கு மானேஜர் அந்தஸ்து வேணுமுன்னு நினைச்சால், நான் ஆபிஸர் கேட்கறதுல என்ன தப்பு?”

கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட சாபமிட்டார். தங்கச்சி மகன் விவகாரம், சாபத்தின் குரலை வலுவாக்கியது.

“ஏ ராஜலிங்கம்! காலேஜ்ல பணம் கட்ட, வாத்தியாருங்க வாயில் அடிச்சு, அந்தப் பணத்த, காலேஜுக்குக் கொண்டுக்கிட்டு வந்தவண்டா ஒங்கண்ணன்! அப்படிப்பட்ட உத்தமனை பொறாமைக்காரன்னு வாய்க்கு வந்தபடி பேசாதடா. சொந்த அண்ணண்டா. வச்சிட்டுப் போட்டுண்டா...”

‘பூனைக்கதை’ சொன்ன மணிமுத்து மீண்டும் பேசினார். “எங்க அத்தய தள்ளிவச்ச பாபம், இப்படி வந்து நிக்குதுன்னு நெனக்கேன். ஏய் சொல்றதக் கேளுங்கடா. திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கலாம்.”

“அதெல்லாம் முடியாது. என்னைக் கொன்னுட்டு வேணுமுன்னா அவன் ஸ்கூல எடுத்துக்கட்டும்.”

மணிமுத்து இறுதியாகப் பேசினார். “சரி... இதுக்கு ஒரே வழிதான். பேசாம ஏலம் போடறேன். ஏலுறவன் எடுத்துக்கட்டும்.”

“சீச்சீ... ஏலமா?”

“இதுல என்ன முன்சீப் தப்பு? குளத்துல இருக்கிற விறால் மீனை ஏலம் போடுறோம். கோயிலுல போட்ட பந்தல் ‘கம்பு கணியள’ ஏலம் போடுறோம். மானத்த தவிர எத வேணுமுன்னாலும் ஏலம் போடலாம். சரியப்பா கேளுங்க...”

மணிமுத்து மார்பை நிமிர்த்திக் கொண்டார்.

“ஐயாயிரம் ரூபாய்” என்றார் தங்கப்பாண்டியின் மாமனார்.

“பத்தாயிரம்” என்றார் ராஜலிங்கம் மாமனார்.

“பதினையாயிரம்.”

“இருபதாயிரம்!”

“இருபத்தையாயிரம்!”

“இருபத்தையாயிரம் ஒரு தரம்! இருபத்தையாயிரம் ரெண்டு தரம்! இருபத்தையாயிரம்...”

“இருபத்தெட்டு!”

“இருபத்தெட்டு!... ஒரு தரம் இருபத்தெட்டு!... தங்கப்பாண்டி கேக்கணுமுன்னா கேளு... அப்புறம் வருத்தப்படப்படாது... இருபத்தெட்டு...!”

“முப்பாதாயிரம்!”

“முப்பதாயிரம்... ஒரு தரம் முப்பதாயிரம்... ராஜலிங்கம்... கேக்கணுமுன்னா கேளு! ஒரு தரம் முப்பதாயிரம்... ரெண்டாந்தரம் முப்பதாயிரம்...”

ராஜலிங்கம் மேற்கொண்டு கேட்கப் போனார். உடனே மேரி புஷ்பம் அவரது வாயை பகிரங்கமாகப் பொத்திக் கொண்டாள். குசேலர் அவலை, கிருஷ்ணன் தின்னும்போது, ருக்மணியோ, லட்சுமியோ தலையிட்டது போல...

“விட்டுடுங்க... அவரு மவராசனா வச்சுக்கட்டும்...”

ராசம்மா பதிலளித்தாள். “மவராசனா வச்சிக்கல... முப்பதாயிரம் ரூபா பேசி வச்சிக்கிடுறோம்!”

ராஜலிங்கம் மனைவியின் கையை வாயிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிக் கொண்டு மேற்கொண்டு கேட்கப் போனார். அங்குமிங்குமாக முண்டினார். ஆனால் அவள் கை அவர் வாயிலிருந்து அகலவில்லை.

மணிமுத்து “மூணாந்தரம்! பள்ளிக்கூடம் தங்கப்பாண்டிக்கு” என்று முடித்தார்.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதப்பட்டது, மானேஜ்மெண்ட் ஏலத்தை எழுதினால் தப்பு வரும் என்பதால், மொட்டையாக மானேஜ்மெண்ட்டும் அது சம்பந்தமான சொத்தும் இப்போது இருப்பது போலவே தங்கப்பாண்டியிடம் இருக்கும் என்று எழுதப்பட்டது தங்கப்பாண்டி வீட்டுக்குள்ளும் வெளியேயும் போய், அரைமணி நேரங்கழித்து வந்து, தம்பியிடம் பத்தாயிரம் ரூபாயை நீட்டினார். “மீதிய அப்புறமா தாரேன். நம்பிக்கை இருக்கா இல்லியா...?” என்று அவர் கேட்டபோது, மேரி புஷ்பம் “இன்னையோட உறவு முறிக்கதுக்கு நீங்கதான் பாக்கிங்க. நாங்க அப்படி நினைக்கல...” என்றாள். எல்லாம் முடிந்தது. சில இனிப்பு வகையறாக்களையும், கார வகையறாக்களையும் சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் போய்விட்டார்கள்.

சிறிது நேரத்தில், தென்காசிக்கு வாடகைக்குப் போயிருந்த டாக்சி வந்தது. ராஜலிங்கம், மனைவி மக்களோடும், மாமனாரோடும் காரில் ஏறிக் கொண்டார். ராசம்மா எட்டிப் பார்க்கவில்லை. தங்கபாண்டி வந்தார். அவரும் ஒப்புக்கு வந்தவர்போல் அவர்களைப் பார்க்காமல், தொலைவில் தெரிந்த பள்ளிக்கூடத்தைப் பார்த்தார்—ஏலத்தில் கேட்ட பணத்தை அங்கே புதைத்து வைத்திருப்பவர்போல.

கார் போய்விட்டது. அதன் சத்தம் சன்னமாகி, பிறகு அடியோடு இல்லாமல் போனபிறகு. ராசம்மா அடியெடுத்து வந்தாள். தங்கப்பாண்டி கன்னத்தைக் கைகளால் பிதுக்கிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவரருகே ராசம்மா வந்து “முப்பதாயிரம் ரூபா... எப்படிச் சரிக்கட்டவோ...” என்று சொன்னாள். தங்கப்பாண்டி பதிலே பேசவில்லை.

ராசம்மா, காம்பவுண்ட் சுவர்க்கருகே வந்தாள். ஆசிரியை சரஸ்வதி, இன்னும் விறகு கீறிக்கொண்டிருந்த தன் தந்தை பொன்னையாவுக்கு காபி டம்ளரை நீட்டிக் கொண்டிருந்தாள் ராசம்மாவைப் பார்த்ததும் “தாகமா இருக்குதுன்னார். அதனால்தான்...” என்று குற்றவுணர்வில் இழுத்ததை, ராசம்மா கவனிக்காமல், இன்னொரு மரத்துண்டு கிடப்பதையும் கவனித்தாள். வாகை மரத்தின் ‘தூர்’. மணி பகல் இரண்டு, பொன்னையா காபி குடிப்பது வரைக்கும் காத்திருந்தாள். அது அவர் தொண்டைக்குள் போனதும், தனது தொண்டையைக் கனைத்துக்கொண்டே “அண்ணாச்சி... இந்தத் துண்டயும் ரெண்டு கீறு கீறுங்க... ரெண்டே ரெண்டு கீறு கீறினா போதும்...” என்றாள்.

பொன்னையா, மூன்று ரூபாய் கூலி போய்விட்டதே என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், கோடாரியைத் தூக்கியபோது, ராசம்மா, முப்பதாயிரம் ரூபாயை நினைத்தபடி வீட்டுக்குள் போனாள். சரஸ்வதியும் இன்னொரு ஆசிரியையான பார்வதியும் வெற்றிலைக் கட்டோடு வந்து வெறும் வயிற்றோடு நின்ற தலைமை ஆசிரியர் தங்கச்சாமியும் பள்ளிக்கூடத்தைப் பார்த்துப் போனார்கள்! சரஸ்வதி மட்டும், கலையரங்கம் போலிருந்த அந்த வீட்டின் முகப்பறையை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போனாள். அங்கே ‘சீன்ஸெட்’ இல்லாமலே ஒரு நாடகம் நடந்து முடிந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=புதிய_திரிபுரங்கள்/006&oldid=1867960" இலிருந்து மீள்விக்கப்பட்டது