பூநாகம்/002
கூடு விட்டுக் கூடு...
அதுவரை மேல்வரிசை பற்களையும், கீழ்வரிசைப் பற்களையும் ஒரே வரிசை பற்களாக்கி, அவற்றுக்கு மேல் படிந்த இரு உதடுகளையும் ஒரே உதடாய் ஒட்ட வைத்து, தனக்குத்தானே, வலுக்கட்டாயமாக தாக்குப் பிடித்துக்கொண்டிருந்த கதிர்மணி, இப்போது முன்னெச்சரிக்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, அழுத்தம் திருத்தமாக அவர்களை பார்த்துக் கேட்டான்.
“பத்து மணிக்கு செய்தியாளர் கூட்டமுன்னு பேரு... இப்போ பதினொன்று பத்து.... இதுக்கு மேலயும் நாம காத்திருந்தா நமக்குப் பேரு ப்ரஸ்டு மேன் இல்ல. பிரஸ்சுடு மேன்... லெட் அஸ் கோ.... வாங்க போகலாம்!”
அந்த செவ்வக அறைக்குள் வியாபித்திருந்த முட்டை வடிவ மேஜையை சுற்றி போடப்பட்ட முதல்வரிசை மெத்தை நாற்காலிகளில் அந்த காலத்து ஜமீன்தார்கள் மாதிரி சாய்ந்து கிடந்தவர்கள், கத்தியவனை கண்களால் ஒரு குத்து குத்திவிட்டு, மீண்டும் தமக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அதே சமயம், இரண்டாவது வரிசை பிரம்பு நாற்காலிக்காரர்கள் எழுந்திருக்கப் போவதைப் போல் உடம்பை நெளித்தார்கள்.
அந்த முதல் வரிசை நிருபர்கள், இந்த இரண்டாவது வரிசைக்காரர்களுடன் இந்த அறையை நோக்கி வரும்போது ஆரம்பத்தில் நாசூக்காய் நடந்து, அப்புறம் முண்டியத்தும் பிறகு வெட்கத்தை விட்டுக் கொடுத்தும் முதல் வரிசையை பிடித்துக் கொண்டார்கள். இப்படி பிடித்துக்கொண்டு தங்களை பிரபலப்படுத்துபவர்கள் என்பது அல்லாமல் பிரபல பத்திரிகைகளை சேர்ந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஏறுக்குமாறு... முன்னூறு பிரதிகளை மட்டுமே அச்சிட்டு அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விநியோகிக்கும் ‘தினக்குத்து’ பத்திரிகையாளன் மோகனன் முதல் வரிசையில் முதல் நாற்காலியில் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தான்.
நாலு பேருக்குத் தெரியக்கூடாது என்ற வைராக்கியத்தில் பத்திரிகையை ‘ரகசியமாக’ அச்சடித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கும், செய்தி பத்திரிகை ஆணையாளருக்கும், வாரத்தில் ஒரு கட்டாக அனுப்பும் ‘தினக்கன்’ பத்திரிகை நிருபன் அடுத்த நாற்காலியை ஆக்கிரமத்திருந்தான். ஆக மொத்தத்தில் தத்தம் பத்திரிகைப் பெயர்களையே மறந்து போகும் பல செய்தியாளர்கள்; காதில் நுழையாத பெயரை வாய் வழியாக விடும் நிருபர்கள் முதல் வரிசைக்காரர்களானார்கள். பின் வரிசை பிரம்பு நாற்காலிகளில் பிரபல பத்திரிகை நிருபர்களும், ஏஜன்சி செய்தியாளர்களும் இடது கையில் ஒரு குறிப்பேட்டுடனும், வலது கையில் ஒரு பேனாடனும் ஆயத்த நிலையில் இருந்தார்கள்.
கதிர்மணி, நெளிந்து கொண்டிருந்த தனது சகாக்கள் மீண்டும் நிலைகொண்டதைப் பார்த்துவிட்டு, மீண்டும் கத்தினான். ஓங்கிக் கத்தினால், அந்தச் சத்தத்திலேயே கீழே விழுவது மாதிரியான பூஞ்சையான உடம்பு. மூக்குக் கண்ணாடி மட்டும் இல்லையென்றால் அவன் முகத்தில் இருக்கும் கண்களை பார்க்க முடியாது. ஆனால், அவன் உடம்பே ஒரு ஏ.கே. 47 போல் துள்ளியது.
“நாம என்ன ஐ.ஏ.எஸ்., அதிகாரியா? காத்துக்கிடக்கறதுக்கு—நாம அவுங்கள மாதிரி அடிவருடிகளும் இல்ல—ஆணவக்காரர்களும் அல்ல – நெய்தர் சைக்கோபான்ட் நார் அரகண்ட்... லெட் அஸ் கோ... திஸ் ஈஸ் டூ மச்!”
கதிர்மணி, கைக்கெடிகாரத்தைப் பார்த்தபடியே வாசலோரம் வந்தபோது பல செய்தியாளர்கள் எழுந்துவிட்டார்கள். இதுவரை அவனை ‘கண்டுக்காமல்’ இருந்த பி.ஆர்.ஓ., பதறிப் போனார். மாண்புமிகு அமைச்சர் வருகை புரிவதற்கு திட்டமிட்ட பத்து மணியில் நிற்காமல், பதினோரு மணியைத் தாண்டிய தனது ‘இன்சபாடினேட்’ கடிகாரத்திடம் விளக்கம் கேட்பது போல் அதைத் தட்டினார். இதற்குள் அமைச்சர் அந்தப் பக்கமும், செய்தியாளர்கள் இந்தப் பக்கமும் நடுச்சந்தியில் சந்திக்கும் நிலைமை ஏற்படப்போனது.
பி.ஆர்.ஓ., செய்தியாளர்களின் மோவாய்களை ஆட்டி, உடம்பை மூன்றடியாய் குழைத்து, அவர்களை வாசலுக்கு சிறிது வன்முறையோடு தள்ளிவிட்டு, அமைச்சர் வரும் திக்கை நோக்கினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அண்டர், அசிஸ்டென்ட், டெபுடி, ஜாயிண்ட், அடிஷனல் செகரட்டரிகளோடும், மேலும் ஒரு முழு செகரட்ரியோடும் சாவகாசமாக வந்தார். இரு பக்கமும் புடைசூழ்ந்த சின்னச் சின்ன அதிகாரிகள். ஒரு கையால் தத்தம் வாயில் பாதியை அடைத்து அதன் மேல் பகுதியை ‘பட்டையிலிருந்து பதனி குடிப்பது’ போல் வைத்துக்கொண்டு, மீதி வாயால், அமைச்சரிடம் எதையோ சொல்லிக் கொண்டும், சொல்லிக் கொடுத்துக் கொண்டும் கூடவே வந்தார்கள். பி.ஆர்.ஓ., அமைச்சரைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடும், செகரட்டரியை பார்த்து ஒரு சுமார் கும்பிடும், அடிஷனலைப் பார்த்து சின்ன கும்பிடும் போட்டார். கும்பிடுகளிலேயே டிகிரி கணக்கைப் பார்ப்பவர்.
மாண்புமிகு அமைச்சர், முட்டை மேஜையின் முன்பக்கம் கிடந்த மூன்று ‘ராஜா நாற்காலிகளில்’ நடு நாற்காலியில் உட்கார்ந்தார். முழு செகரட்டரியும், அடிஷனல் செகரட்டரியும் இரு பக்கமும் உட்கார்ந்தபோது, ஒவ்வொரு செய்தியாளர் முன்பும் முந்திரிக்கொட்டைகளையும், லட்டையும், மெதுபக்கோடாவையும் சுமக்கும் தட்டுக்கள் தோன்றின. பெரும்பாலானோர் அமைச்சரைப் பார்க்காமலே அவற்றை அசைபோட்டபோது, கதிர்மணி ஒருவிதமான இடிப்புக் குரலில் கேட்டான்.
“மணி இப்போ பதினொன்னு இருபது.”
மாண்புமிகு அமைச்சர் கழுத்தில் போட்டிருந்த மஸ்ட்டர் கலர் துண்டை தலைக்கு மேல் கொண்டு போய் ‘எட்டு வீடு கட்டும்’ சிலம்பு போல் ஆட்டிக் கொண்டே, இருபுறமும் இருந்த உயர் அதிகாரிகளைப் பார்த்துவிட்டு, பின்பு கதிர்மணியை நோக்கி புன்னகையோடு பதிலளித்தார்.
“எஸ்.... நீங்க சொன்னது போல மணி பதினொன்னு இருபதுதான். யு ஆர் கரெக்ட்.”
செய்தியாளர்கள் சிரித்தார்கள். மாண்புமிகு அமைச்சரும் தன்னையறியாமலே அவர்களோடு சேர்ந்து சிரித்தார். பிறகு, பி.ஆர்.ஓ., அவர் அருகே போய், காதைக் கடித்த பிறகுதான், அவருக்கு தான் சிரித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. ‘என்னடா நினைச்சே’, என்று கோபமாக வந்த வார்த்தையை ‘சாரி லேட்டாயிட்டு.... உள்ளபடியே வருந்துகிறோம்’, என்று மேக்கப் போட்டு வெளிப்படுத்தினார். இதற்குள், அமைச்சரின் அறிக்கை நகல்களை பி.ஆர்.ஓ., செய்தியாளர்களிடம் விநியோகித்தார். அதைப் படிக்காமலே ஒரு நிருபர் கருத்து சொன்னார்.“மாண்புமிகு அமைச்சர் பதவியேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனைகளை புரிந்திருக்கிறார். நிருபர்கள் சார்பில் என் வாழ்த்துக்கள்!”
கதிர்மணி பல்லை கடித்தபோது இன்னொரு விளம்பரப் பிரியன் (அதாவது தனது பத்திரிகைக்கு) ஓடிபோய் அவரது கையை குலுக்கினான். ‘தினக்கன்’ மோகனன் ஒரு கேள்வி கேட்டான்.
“அமைச்சரான பிறகு ஒருத்தருக்கு அடி வயிறு பெருக்கும். கன்னங்கள் கண்களை மறைக்கும். ஆனால், நீங்க என்னடான்னா துரும்பா இளைச்சிட்டீங்களே.... இதுக்கு என்ன காரணம்?”
மாண்புமிகு அமைச்சர் பெருத்திருந்த தனது அடி வயிற்றை முட்டை மேஜைக்குள் மறைத்துக் கொண்டு, சுகப் பிரசவமாய் சிரித்துக் கொண்டு பதிலளித்தார்.
“என்ன பண்றது.... இரவெல்லாம் மக்களுக்கு எப்படி சேவை செய்யணும் என்கிற சிந்தனை. பகலெல்லாம் அந்த சிந்தனையை செயல்படுத்த டிஸ்கஷன், செமினார், சிம்போசியம், கருத்தரங்கு, உரை கோவை... அப்பப்பா எவ்வளவு வேலை...”
“அப்போ ஆக்ஷன் இனிமேல் தான்.”
மாண்புமிகு அமைச்சர், சாதாரணமாய் சொல்வது போல் குத்தலாய் கேட்ட கதிர்மணியை, நோக்கி கோபச் சிரிப்பை உதிர்த்தபோது, ஒரு நிருபர் ஏற்கனவே சொல்லிக்கொடுத்தது போன்ற ‘ஒரு பிளாண்டட்’ கேள்வியை கேட்டார்.
“உங்களுக்கு முன்னால் பதவி வகித்த மாற்றுக் கட்சி அமைச்சர் காளமேகம் மீது ஊழல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வரும் என்றும் அறிக்கை விட்டீங்க. இப்போ அது எந்த கட்டத்துல இருக்குது?”
மாண்புமிகு அமைச்சர் புளகாங்கிதப்பட்டார் கையாளாக எவருக்கு வேலை செய்தாரோ, அவரது கழுத்தையே இப்போது தனது கையில் பிடித்திருப்பது போல் மேஜையை அங்குமிங்கும் குத்தினார். பேப்பர் வெயிட்டை வைத்து மேஜையில் கோலியாடினார். பிறகு ஆனந்தமாகவும், அப்புறம் அந்த ஆனந்தமே ஆவேசமாகவும் பேச்சைத் துவக்கி அதைக் கத்தலாக நிறைவு செய்தார்.
“எனக்கு முன்னால் பணியாற்றிய, இல்ல இல்ல... பிணியாற்றிய திருவாளர் காளமேகம் அசல் குடிலர். எங்க அமைச்சக கஜானாவை அந்தப் பெட்டியோடு சூரையாடிய கொள்ளையர். தோல் இருக்க சுளை விழுங்கி.... முழுப்பாய் சுருட்டி என்பது உள்ளங்கை நெல்லுக்கனி.”
ஒரு ஏஜன்சி நிருபர் திடுக்கிடக் கேட்டார்.
“புதுக்கவிதை பாணியில் பதில் வேண்டாம் சார். ஆதாரங்களை அடுக்குங்க.”
“ஒன்றா, இரண்டா... விரல் விட்டுச் சொன்னாலும் பத்து கைகள் பத்தாது.”
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி மாதிரி சொல்லுங்களேன்.”
“இது சோறு அல்ல சேறு.”
“சரி... சேற்றை வாரித்தான் இறையுங்களேன்!”
“ஒரு சைக்கிள் கடையில் பம்ப் அடித்துக்கொண்டிருந்த காளமேகத்திற்கு இப்போது மகாபலிபுரம் அருகே மனைவி பெயரில் இரண்டு நட்சத்திர ஓட்டல் எப்படி வந்தது? தியாகராய நகரில் ஒரு அடுக்கு மாடி வீடு எப்படி கிடைத்தது? ஏழெட்டு அம்பாசிடர்கள் எப்படி வந்தன? இப்போகூட சென்னையில் கேந்திரமான ஒரு இடத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு ஏர்கண்டிஷன் சினிமா தியேட்டர் அவரோட பினாமி சொத்து. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை கிடைக்கும். அப்போது காளமேகத்தின் தகிடுதத்தங்கள் அரங்கேற்றமாகும். சரி, லஞ்சுக்கு நேரமாயிட்டுது. இந்தாப்பா பி.ஆர்.ஓ., லஞ்சுக்கு எங்க ஏற்பாடு? சோழாவா இல்ல... சவேராவா?”
“எல்லாரும் எழுந்திருக்கப் போனார்கள். கதிர்மணிதான் அவர்களை கையமர்த்திவிட்டு, “ஒன் மினிட் சார்,” என்றான். எழுந்த அமைச்சர் இருக்க மனமில்லாமல் நின்றபடியே அவனை பார்த்தார்.”
கதிர்மணி ஒரு வேட்டு போட்டான். “போன வாரம் உங்க வீட்டில் இன்கம் டாக்ஸ் ரெய்டு நடந்து கணக்கில் வராத பங்கு பத்திரங்களும், ஐம்பது லட்ச ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாய் அதே காளமேகம் அறிக்கை விட்டிருக்கார். இதுபற்றி உங்க கருத்து என்ன சார்....?”
“சந்திரனை பார்த்து நாய் குலைக்கிறது மாதிரி இது.”
“அப்படிச் சொல்றது சரிப்படாது சார். ஏன்னா, நீங்க சாட்டுற குற்றச்சாட்டுக்கு காளமேகமும் இதே பாணியில் பதில் அளிக்கலாம் பாருங்க....”
“ஏதேது... நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே... ஒங்க பேரு என்னங்க...”
“கதிர்மணி, தினத் தகவலின் மூத்த செய்தியாளர்...”“இந்தா பாருங்க கதிர்.... அந்த காளமேகம் வசமா சிக்கிக்கிட்டார். தன்னோட ஊழலை மறைக்க இப்படியொரு பழியை போடுகிறார்.”
“அவர் போட்டது பழியோ அல்லது உங்களுக்கு வெட்டின குழியோ எங்களுக்கு தெரிய வேண்டியது உங்க வீட்டுல இன்கம்டாக்ஸ் சோதனை நடந்ததா.... நடக்கலையா...?”
மாண்புமிகு அமைச்சர், மெத்தை நாற்காலியில் விழுந்து அதற்கு வலியை ஏற்படுத்தினார். கதிர்மணியை கண்டிப்பாக பார்த்தபடியே பதிலளித்தார்.
“எனக்குத் தெரிந்து நடக்கலை.”
“அதாவது உங்க வீட்ல ஐ.டி., ரெய்ட் நடக்கலைன்னு சொல்றீங்க...”
“அப்படியே வெச்சுக்குங்க... புறப்படலாமா?”
“இன்னும் ஒரே நிமிஷம் சார்... மாற்றுக்கட்சி காளமேகம் உங்க வீட்டுல ரெய்ட் நடந்ததா மட்டும் அறிக்கை விடல... பால் விற்றுக் கொண்டிருந்த உங்களுக்கு இவ்வளவு குறுகிய காலத்திலேயே ஐம்பது லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் எப்படி கிடைத்ததுன்னு மட்டும் கேட்கல—இந்தக் குற்றச்சாட்டை அவதூறாக கருதி தன் மீது வழக்கு போடும் துணிச்சல் உங்களுக்கு இருக்குதா என்று சீண்டியிருக்கிறார். அதனால அவர் மேல நீங்க அவதூறு வழக்கு போடலாமே....”
“யோசிக்க வேண்டிய விஷயம்....”
“இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்குன்னே எனக்குத் தெரியல...”மாண்புமிகு அமைச்சர் மடார் என்று எழுந்தார். அவருடன் அதிகாரிகள் மட்டுமல்ல, பல முதல் வரிசை செய்தியாளர்களும் எழுந்து விட்டார்கள். பி.ஆர்.ஓ., அறிவித்தார்: “மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரால லஞ்சத்துக்கு... மன்னிக்கணும் லஞ்சுக்கு வரமுடியல. அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கச் சொன்னார். வாங்க போகலாம், ஒரு வேனும், நாலு அம்பாசிடர் காரும் ரெடி.”
மாண்புமிகு அமைச்சர், தன்னால் லஞ்சுக்கு வரமுடியாது என்று பி.ஆர்.ஓ.,விடம் தனிப்பட்ட முறையில் இரண்டு வார்த்தைகளில் சொன்னதை, அந்த பி.ஆர்.ஓ., பத்து வார்த்தைகளாக்கிச் சொல்லி விட்டானே என்று ஆத்திரப்பட்டார். ஆனால், அந்தச் சமயத்தில் அதை காட்டிக்கொள்ள முடியாது என்பதால், உண்மையிலேயே நோய்வாய் பட்டவர் போல் இருமிக்கொண்டும், முன் நெற்றியை அழுத்திக்கொண்டும் எழுந்தார். சில நிருபர்கள், “சீக்கிரம் உங்களுக்கு குணமாகட்டும் சார்,” என்றார்கள்.
மாண்புமிகு அமைச்சர் தனது அறைக்குள் வந்தார். அவரை அங்கே எதிர்நோக்கிக் காத்திருந்த ‘உதி...கள்’ போட்ட வணக்கங்களை ஏற்றுக் கொள்ளாமலே அதிகாரிகளுடன் தமது அறைக்குள் நுழைந்தார். அவருடன் ஒப்புக்கு பேசிய உயர் அதிகாரிகளுக்கு, தத்தம் வீடுகளில் ஐ.டிக்காரன், ஈட்டிக்காரன் மாதிரி ஆயுதபாணியாக வருவானா என்ற பயம்; நழுவி விட்டார்கள். அமைச்சர் டெலிகாமில் பி.ஏ.,விடம் கத்தினார்.
“முந்தா நாள் என்னைப் பார்க்க வந்தானே, அவன் தினத்தகவல் உரிமையாளன்தானே... லைன் போட்டுக் கொடு...”அமைச்சர் அந்த டெலிபோனால் முதலாளியை அடிக்கப் போவது போல் கத்தினார்.
“அலோ... வணக்கம்.... வணக்கம்... நான் அமைச்சரோட பி.ஏ., இல்ல. அமைச்சரேதான். என்ன தம்பி இது, நீங்க புதுசா பத்திரிகை ஆரம்பிச்சிருக்கிறதாயும் அது நடுநிலை பத்திரிகைன்னும் என்கிட்ட சொன்னீங்க. இப்போதைக்கு பிரபல பத்திரிகைகளோட போட்டி போடணுமுன்னா, அரசு விளம்பரம் வேணுமுன்னும் கெஞ்சினீங்க, நானும் பச்சாதாபப்பட்டு, உங்களுக்கு விளம்பரம் கொடுக்கும்படி சி.எம்.,க்கு நோட் போட்டிருக்கேன். யாருக்கு வேணும் உங்க தேங்க்ஸ்.... சொல்றதக் கேளுங்க, உங்க நிருபர் கதிர்மணியோ, பதர்மணியோ... இன்றைய பிரஸ் கான்பிரன்ஸ்ல என்னைப் பார்த்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்டுட்டான். வேட்டிய உருவாத கததான். என் வீட்டுல ரெய்ட் நடந்தா இவனுக்கு என்னய்யா, என்ன, ஒங்களுக்கு அவனைப் பற்றி இது மாதிரி பல கம்ப்ளையன்ட் வந்திருக்குதா... அப்போ ஏன் அவன வெச்சிருக்கீங்க; டிஸ்மிஸ் ஆனது மாதிரிதானா, ரெய்ட் நியூஸ் வராம பார்த்துக்குங்க. நானிருக்க விளம்பரத்திற்கு பயம் ஏன்?”
மாண்புமிகு அமைச்சர் மறுநாள் அந்த பத்திரிகையில் ரெய்ட் செய்தி வராததில் திருப்திப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இரண்டு செய்தியாளர்கள் கூட்டத்தில கதிர்மணியை காணாததில் கம்பீரப்பட்டார். இதற்குள் காளமேகத்தின் மீது ஊழல் விசாரணை முடிந்து சி.ஐ.டி.யின் அறிக்கை அரசுக்கு கிடைத்தது. அதன் விவரங்களை வெளிப்படுத்துவதற்காக அதே முட்டை மேஜையில் ஒரு செய்தியாளர் கூட்டம். போலீஸ் அறிக்கை நகல்கள் அனைத்து செய்தியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏதாவது கேள்வி இருக்கிறதா என்று மாண்புமிகு அமைச்சர் அதிகார தோரணையில் கேட்டார். ஒரு கேள்வி வந்தது.“என் பெயர் கதிர்மணி. ‘டே டுடே’ என்கிற வடநாட்டு இங்கிலீஷ் பத்திரிகையின் தமிழ்நாட்டு கரஸ்பாண்டென்ட். உங்க வீட்டுல இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடந்ததா தான் அம்பலப்படுத்தியதாலதான் நீங்க காவல்துறை மூலம் ஒரு பொய்யான அறிக்கையை தயார் பண்ணியிருக்கிறதா காளமேகம் இன்னிக்கு காலையில ஒரு அறிக்கை விட்டிருக்கார். ஐம்பது லட்ச ரூபாய் கணக்கில் வராத பணத்துக்கு ஐ.டி. டிபார்ட்மென்ட் கொடுத்த ஒப்புதல் நகல் நம்பரையும் சுட்டிக்காட்டியிருக்கார். இதுபற்றி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் அளிப்பாரா...?”
★★★