பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்/கம்ப ராமாயணம் : வினா-விடை

விக்கிமூலம் இலிருந்து

கம்பராமாயணம் - வினா விடை

1. பெண்ணைப் போற்றிய இராமன், தன் அருமருந்தன்ன மனைவியைப் பார்த்து,

... ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மாநகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு? எனை விரும்பும் என்பதோ?

என நாக் கூசாமல் கூறியது அவரது பண்புக்கு மாசு உண்டாக்கியது ஆகாதா?

இந்த வினாவை எழுப்புவதற்கு முன்னர் இது தோன்றிய நிலைக்களத்தைச் சிந்திக்க வேண்டும். ஒரு மாபெரும் தவறு செய்துவிட்டாள் பிராட்டி. மானின் பின்னே இராகவன் சென்ற பிறகு லட்சுமணா என்ற குரல் கேட்டு, இராகவனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று நினைக்கிறாள். இலக்குவனைப் போகுமாறு பணிக்கிறாள்.

கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர்?

என இளையபெருமாள் எடுத்துக்கூறியும்,

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும்
நீ வெருவலை நின்றனை

என்று கடுஞ்சொல் பேசிவிடுகிறாள். இந்த அவசர புத்தி பின்னர் அவளுக்குப் பெரும் இடைஞ்சலை உண்டாக்குகிறது. அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும்போது,

என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தைகேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ

என அச்சப்படுகிறாள். ஆக, இளையபெருமாளுக்குத் தான் செய்த இந்த மாபெரும் தீங்கு இராகவன் தன்னை ஒதுக்குவதற்குக் காரணமாகிவிட்டதோ என்று அஞ்சுகிறாள். இந்த நிலையில் அவள் மனத்திலே ஒரு குற்ற உணர்வு (guilt complex) ஏற்படுகிறது. இதை அறிந்துகொண்டான் இராகவன். இனி, பிராட்டியும், இலக்குவனும் அயோத்தியில் போய் நீண்ட காலம் ஒன்றாக இருக்க வேண்டியவர்கள். இந்தச் சூழ்நிலையில் இந்தக் குற்ற உணர்வோடு பிராட்டி இருப்பாளேயானால் இலக்குவனது முகத்தைப் பார்க்குந்தோறும், பார்க்குந் தோறும் மனத்தில் ஒரு நெருடல் உண்டாகும்.

இதைப் போக்க வேண்டுமென்று நினைக்கிறான் பெருமான். குற்ற உணர்வு உடையவர்கள் அதைப் போக்க வேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்பது மன இயலாருடைய கூற்று. அந்த நிலையிலே இலக்குவனுக்குத் தீங்கு செய்தவள் இலக்குவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு என்ன வழி? இப்படிப் பேசினால் தான் அவள் தீப் புகுகின்றேன் என்று கிளம்புவாள். அதுவே அவன் நினைத்தபடி நடந்தது. தீப் புக வேண்டும் என்று இலங்கையிலே நினைக்கிற பிராட்டி இலங்கைக்குரியவனாகிய விபீஷணனைப் பார்த்து நீ தீ அமைத்துக் கொடு என்று சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு இலங்கைக்குப் புதிதாக வந்த இலக்குவனைப் பார்த்து, 'நீ தீ அமைத்துக் கொடு' என்று ஏன் கேட்கிறாள் என்றால், இலக்குவன் கையால் தீ அமைத்து அதில் தான்புகுவதுதான் அவனுக்குச் செய்த தீங்குக்கு உரிய தண்டனை என்று நினைக்கிறாள். இராகவனும் அதைக் கண்சாடை மூலம் ஒத்துக் கொள்கிறான். எனவே, இலக்குவன் தீ அமைத்துக் கொடுக்கிறான்.

இது ஒரு நாடகம். பிராட்டியினுடைய மனத்திலே ஒரு நெருடல் தோன்றி, அது வாழ்நாள் முழுவதும் அவளைத் துன்புறுத்தாமல் இருக்க இராகவன் செய்த மாபெரும் நாடகம். இதில் அதைப்பற்றித் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

2. கம்பர் மகாபாரத -கதை- கிளைக்கதை போன்று காப்பியம் இயற்றியிருந்தால் என்னவாயிருக்கும்?

கம்பனுடைய எண்ணம் என்ன என்பதை முதல் பாடலிலேயே நாம் தெரிந்துகொள்கிறோம். 9ஆம் நூற்றாண்டிலே பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்த நிலையிலே இன்ப வேட்டையிலே மக்கள் புகுந்து விட்டார்கள். பூக்கொய் படலம், உண்டாட்டுப் படலம் என்ற இரண்டு படலங்களும் அன்றைக்குத் தமிழ்நாடு இருந்த நிலையைத் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் இந்த நாட்டுக்கு ஆபத்து உண்டாகிவிடும் என்று நினைத்து, புலன் அடக்கத்தை அறிவுறுத்த வேண்டுமென்று நினைத்து, அதற்காக இந்தக் கதையை ஏற்றுக்கொள்கிறான் கவிச்சக்கரவர்த்தி. பாரதத்தை எடுத்துக் கொண்டிருப் பானேயானால் இப்படிப்பட்டதொரு சூழ்நிலை உருவாகியிருக்காது. அவனுடைய கருத்து என்னவோ அதற்கு இடந்தந்தது இராம காதை. அந்த அடிப்படையில்தான் இதனை எடுத்துக்கொண்டான். 3. பரதனிடத்தில் பண்பு வளர்ச்சி உள்ளது.

'நின்னினும் நல்லன் ஆயிரம் இராமர்;
எண்ணில் கோடி இராமர்கள்'

என்றெல்லாம் கம்பர் பாடுகிறார். இப்படி மற்றவர்களுடைய பண்பு வளர்ச்சி குறிக்கப்படவில்லையே. காரணம் என்ன?

இங்கே பண்பு வளர்ச்சி என்று சொல்ல நான் விரும்பவில்லை.


4.

'தள்ளரிய பெருநீதித்தனிஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையான்'

- என்று விஸ்வாமித்திரர் குறிக்கின்றாரே?

பரதனைப் பொறுத்தமட்டில் அவன் என்றுமே ஒரே நிலையில்தான் இருக்கின்றான். ஆனால், நீங்கள் காட்டிய மூன்று அடைகளும் இரண்டு பேரால் தரப்படுகின்றன. இதனை, பரதனுடைய வளர்ச்சி என்று சொல்வதை விட்டு, ஒவ்வொருவர் கணிப்பிலே அவன் எப்படி இருக்கிறான் என்பதுதான் அதனுடைய பொருள். ஒருவரைப் பொறுத்தமட்டில் ஆயிரம் இராமராகக் காட்சி அளிக்கிறான். ஒருத்தியைப் பொறுத்தமட்டில் எண்ணில் கோடி இராமராக இருக்கிறான். எனவே பரதனுடைய வளர்ச்சி என்றும் ஒரே படியாகத்தான் இருக்கிறது. காண் பாருடைய காட்சிக்கேற்ப,

'ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ?'

என்று குகனும்

'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ'

என்று கோசலையும் அவரவர் கணிப்பிலே காண்கின்றனர். 5. வால்மீகி இராமாயணத்தைத் தழுவிக் கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பர், தமிழ்ப் பண்பாட்டு இயல்புக்கேற்ப மொழி பெயர்த்திருக்கிறார். அப்படி இருக்கும்பொழுது வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா?

இந்த வினா இன்று நேற்று அல்ல. கம்பன் என்று எழுதினானோ அன்றிலிருந்து இருந்துவருகிறது. இதற்கு அவரவர் விருப்பம்போல்தான் விடை கூற முடியும்.

இது ஏதோ திடீரென்று மறைந்து நின்று அம்பு எய்தான் இராமன் என்று கம்பன் ஏற்றுக்கொள்ள வில்லை. மிகத் தொடக்கத்திலே வாலி வதை பற்றிச் சுக்கிரீவனிடம் கூறும்போது,

              '... வேறு நின்று'

'எவ்விடத் துணிந்து அமைந்தது'

என்பதாக ’மறைந்து நின்று அம்பு எய்திடப் போகிறேன்’ என்று இராமன் சொல்கிறான். அது சரியா, தவறா என்பது வேறு வாதம். ஆனால், அதை அப்படியே கம்பன் பாடுகிறான். இராமன் சொன்னான்; அது வாலியைப் பற்றி முழுவதும் அவன் ஏதும் அறியாத காலத்திலேயே எடுத்த முடிவு. பின்னர் வாலியை நன்கு அறிந்த பிற்பாடு, தான் எடுத்த முடிவு சரியோ என்கிற ஐயம் இராமனின் மனத்தில் எழுகிறது. அதற்காகத்தான்,

                  'வில்லறம் துறந்தேன்' 

என்று சொல்கிறான். அதற்குத்தான் வாலியின் மகனை அழைத்து,

                 'நீ இது பொறுத்தி' 

என்று உடைவாளைக் கொடுக்கிறான். வாள் என்பது அரசனுடைய அதிகாரத்தின் சின்னம். ஸிம்பல் ஆப் அதாரிட்டி (symbol of authority) அதிகாரத்தைச் சிறு பையனாகிய வாலியின் மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? வாலிக்குத் தான் இழைத்த தவறைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். அதற்கு வேறு வழியாகப் போக்கி யிருக்கலாம். வாலிக்கு மீட்டும் உயிரைக் கொடுத் திருக்கலாம். ஆனால், வாலி உயிரைப் பெரிதாகக் கருத வில்லை. 'என் உயிர்க்கு அஞ்சி வந்தேன்' என்று சொல்கிற சுக்கிரீவனைப் போன்றவன் அல்லன் வாலி. உயிரை ஒரு பொருட்டாக நினைக்காததால் திருப்பி அவனுக்கு உயிரைக் கொடுப்பது அர்த்தமற்ற செயல். ஆகையினால், நீ இது பொறுத்தி என அவன் மகனிடம் வாளைக் கொடுக்கிறான். ஆக, இராமன்கூட மறைந்து நின்று அம்பு தொடுத்ததை ஒரு வருத்தத்தோடுதான் ஏற்றுக்கொள்கிறான் என்று நினைப்பது தவறு இல்லை.

6. ஸ்ரீ இராமன் அவதாரமூர்த்தி என்பதைப் பல இடங்களில் கம்பன் சொல்லிச் செல்கிறான். கடவுளின் அம்சமாகிய ஸ்ரீ இராமன் பல கஷ்டங்களை அனுபவித்து இராவணனை வென்றான். இத்தகைய துயரங்களைக் கடக்க வேண்டிய கட்டாயம் என்ன? இது இராமனின் கடவுள் அம்சத்திற்குப் புறம்பானது அல்லவா?

இராமன் கடவுள் அம்சம் என்று எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள், இராமனைத் தவிர.

இரண்டாவது, பரம்பொருளாக இருப்பினும் 'நிர்குண நிராமய' என்று தாயுமானவப் பெருந்தகை சொல்வதுபோல இருப்பது பரம்பொருள். அந்தப் பரம்பொருள்கூட உலகத்திலே வந்து மானுட வடிவம் தாங்கி விட்டால் அதற்குரிய சூழ்நிலையில்தான் அது இயங்க வேண்டுமென்பது இந்த நாட்டினுடைய கொள்கை. ப்ரபோத சந்திரோதயம் என்ற அற்புதமான நூலிலே நிர் குணப் பிரம்மத்தைப் பற்றிச் சொல்வார். நிர்க்குணப் பிரம்மம் கூடச் சகுணப் பிரம்மமாக வந்துவிட்டால் இந்த மனிதர்க்குரிய எல்லாப் பண்புகளையும், நலம்-தீங்கு இரண்டையும் அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்பது இந்த நாட்டினுடைய வலுவான கொள்கை. அந்த முறை யிலே பரம்பொருள் இராகவனாக அவதரித்த பின்பு மனிதர்களுக்குரிய பல செயல்களை அவன் செய்து காட்டுகிறான். இனி மானின் பின்னே போனது கூட ஒரு வேடிக்கையான செயல்தான். இலக்குவன் மானைப் பிடித்துத் தருகிறேன் என்று சொல்லும்போது பிராட்டி இராமனிடம் சொல்கிறாள்...

'நாயக! நீயே பற்றி நல்கலை போலும்

என்று. அப்படியானால் நானே பற்றித் தருகிறேன் என்று போகிறானே, இது பரம்பொருளுக்குரிய இலக்கணமா? மனிதர்களுக்குரிய இலக்கணம். அப்படிப்பட்ட இலக் கணத்தோடு இராமனைப் படைத்ததனாலேதான் நாம் அவனோடு உறவு கொண்டாட முடிகிறது. இராகவனைப் பொறுத்தமட்டில் நம்மில் ஒருவனாக நினைக்க முடிகின்றது. அந்த முறையில் கம்பன் செய்தது சரிதான்.

7. கம்பனின் கால கட்டம் எவ்வாறு நிர்ணயிக்கப்பெற்றது?

பிரச்சினையான கேள்வி. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பல கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தந்த ஒன்று இது. இப்பொழுது ஒருவாறாக 9ஆம் நூற்றாண்டு என்பதாக அறிஞர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதற்குரிய காரணம்- இலக்கியத் திறனாய்வு வளர்ந்திருக்கிற முறையிலே இதை முடிவு செய்ய முடிகின்றது.

ஒரு மாபெரும் வல்லரசு தோன்றுவதற்கு முன்னேயும், அந்த வல்லரசு வீழ்ச்சி அடையும் நிலையிலும்தான் காப்பியம் தோன்றுமென்று உலகத் திறனாய்வாளர்கள் - எந்த மொழியாக இருப்பினும்- சொல்கிறார்கள். அந்த முறையிலே பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்து விடுகிறது. பிறகு, சோழப் பேரரசு இன்னும் தோன்ற வில்லை. தோன்றவேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த நிலையிலே கவிச் சக்கரவர்த்தி தோன்றித் தன்னுடைய ராமகாதையைப் பாடுகிறான். அதேபோல மிகப் பிரசித்தமாக வளர்ந்த சோழ சாம்ராஜ்யம் 300 ஆண்டுகள் கழித்துக் கீழே விழப் போகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலே சேக்கிழார் தோன்றிப் பெரிய புராணத்தைப் பாடுகிறார். ஆகவே, பல்லவ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கம்- அதிலே கம்பன் தோன்றுகிறான். ஆகவே 9ஆம் நூற்றாண்டு என்பது பொருத்தமாகப் படுகிறது.

8. பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய செய்தியைச் சொல்ல வருகின்ற கம்பர்- இராமனைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது,

‘பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும்
கரை தெரிவுஇலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ’

என்று சொல்வது- நாம் அடைந்து வருகிற இன்பத்தைவிட, எப்பொழுதுமே பேரின்பம் (Eternal bliss) தருகின்ற ஒரு முறையிலே அவன் யோக நிலையிலே இருந்துவிட்டானா என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஐயாவின் கருத்து என்னவோ? இராமனைப் பொறுத்தமட்டில் பரதனைத் துல்லியமாக எடை போட்டிருந்தான் என்பது முற்றிலும் உண்மை என்றாலும், இராமன் மனத்திலே ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மரவுரி தரித்து வந்த பரதன் எவ்வளவு சொல்லியும், அந்த அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அப்படிச் சபதம் செய்துவிட்டேன் எனச் சொல்லிவிடுவானோ என அஞ்சிக் கொண்டிருந்தான். அப்படி ஒருவேளை சொல்லியிருந்தால் இராமன் பாடு மிகமிகச் சிக்கலாக முடிந்திருக்கும். தேவர்களும் சொன்னார்கள். இது என் ஆணையாம் என்று இராமனும் கட்டளையிட்டான். அந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து 14 ஆண்டுகள் ஆளுகிறேன் என ஒத்துக்கொண்டான். ஆகையினாலே, இராமன் மனத்தில் இருந்த மாபெரும் சங்கடம் அகன்றது. அது நடைபெற்றதனாலே இராமன் எல்லையில்லாத களிப்பில் மூழ்கினான். ஏனென்றால் பரதன் ஒத்துக்கொள்ளவில்லையானால் இராமாவதாரமே அர்த்த மற்றதாகிவிடும். இராவண சம்ஹாரம் நடைபெற்றிருக்க முடியாது. இந்த உலகத்திற்கு அவன் எதற்காக வந்தானோ அதை நிறைவேற்றுதற்குரிய சூழ்நிலை, பரதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டால்தான் நடைபெறும். ஏற்றுக்கொள்ளமாட்டான் எனப் பயந்து கொண்டிருந்தான் இராகவன். அவன் ஏற்றுக்கொண்டான் என்றவுடனே எல்லையில்லாத களிப்பில் மூழ்கினான். அங்கே களிப்பு என்பது எப்படிப்பட்ட களிப்பு? தன்னலத்தினாலே ஏற்பட்ட களிப்பு அன்று. தான் எதற்காக இந்த உலகத்திடை வந்தானோ அது நிறைவேறுதற்குரிய சூழ்நிலை உருவானதால் களிப்பில் மூழ்கினான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். (குறிப்பு: எழுப்பப்பட்ட கேள்வி இராமாயண இறுதியை மனங் கொண்டு எழுத்தது. பாடல் எழுந்த இடத்தைக் கானகம் செல்லுதற்கு முந்தியதாகக் கருதி அ.ச.ஞா. விடை அளித்துள்ளார். ஆனைக்கும் அடி சறுக்கும் தானே!)

9. நாட்டுப் படலத்திலேயே,

பொற்பில் நின்றன. பொலிவு; பொய்யிலா
நிற்பின் நின்றன நீதி; மாதரார்
அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே

...என்ற பாடலில் முதல் இரண்டு அடிகள் ஆண்களுக்கும், பின் இரண்டு அடிகள் பெண்களுக்குமாகச் சொல்லப் பெற்றன என்ற கூற்று உண்டு. இந்தப் பாடலை எல்லோருக்குமே பொதுவாகக் கொள்வதா அல்லது பெண்களுக்கு மட்டுமே, ஆண்களுக்கு மட்டுமே என்று இரண்டு பேரையும் பாகுபடுத்திப் பாடப்பெற்ற பாடலா இது?

இந்த நாட்டிலே சங்ககாலத்திலே யிருந்து ஏதோ ஆண்களுக்குச் சொன்னால் அது பெண்களுக்கும் உரியது என்ற கொள்கை வலுவாக நிலைத்திருக்கிறது. திருக்குறளிலே ஆண்மக்களுக்குச் சொல்லப்பட்டது எல்லாம் ஆண்மக்களுக்கு மட்டுமன்று, பெண்மக்களுக்கும் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலிலே உள்ள நான்கு அடிகளும் இருபாலாருக்கும் பொதுவானது என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. பொதுவாக இருப்பினும், மூன்றாவது அடியிலே வருகின்ற ஒன்று பெண்களுக்கு என்று தனிப்படக் கூறுகிறார். காரணம், உபசரிக்க வேண்டியது. இல்லற தர்மத்தை நடத்துவது அவர்களது கடமையாதலால் இதனைத் தனியே எடுத்துச் சொல்கிறார். இது- கம்பன் சொல்வது சரிதான் என்பதற்கு ஆற்றுப் படல (பால காண்டம்) முதற்பாட்டே உதாரணமாகும்.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்

என்பதிலே ஐம்பொறி என்பதனாலே எல்லாம் அடங்கிப் போகிறது.

காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும்

என்று மறுபடியும் ஏன் எடுத்துச் சொல்கிறார்? ஐம் பொறிகளையும் முதலில் பொதுவாகச் சொல்லிவிட்டு, அடுத்து கண் என்னும் பொறியைச் சிறப்புப்படுத்திச் சொல்கிறார். அதுபோல, அந்தப் பாடலில் ஆண், பெண் இருபாலாருக்குமாகச் சொல்லிவிட்டு, பெண்களுக்கென்று சிறப்பாக மூன்றாவது அடியைச் சொல்கிறார் என்று நினைப்பதிலே தவறு இல்லை.

10 'வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்

இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தைதிருச்செவிசாற்றுவாய்"

என்று ஆஞ்சநேயரிடம் சீதாபிராட்டி சொன்னது இராம பிரானுடைய பெருமையைக் குறைப்பதாகவோ அல்லது சீதையினுடைய பாத்திரப்படைப்பைக் குறைப்பதாகவோ இருக்கிறது என்று கருதலாம் அல்லவா?

இப்படி உங்களுக்குச் சந்தேகம் வரும் என்றுதான் கம்பன் அந்தப் பாட்டிலே ஒர் அற்புதமான சொல்லைச் சொல்லியிருக்கிறான்.

கணவன் மனைவியரிடத்தே இடைப்பிறவரலாக நடைபெறுகின்ற ஓர் உரையாடல். அதை வேறு யாரும் ஒட்டுக் கேட்டிருக்க முடியாது. ஆகவே, அதைச் சொல் வதன் மூலம் தான் உண்மையிலே, சீதைதான் என நிரூபிக்க வேண்டுமென்று பிராட்டி நினைக்கிறாள். நைஷ்டிக பிரம்மசாரியாகிய அனுமன் அதனுடைய அருமைப்பாட்டினை உணராமல் எங்கே நாலு பேர் இருக்கையில் உளறிவிடுவானோ என்று திருச்செவி சாற்றுவாய்' என்று, காது பக்கத்திலே போய்ச் சொல்லு அப்பா - இது ப்ரிவிலேஜ்ட் கம்யூனிகேஷன் (Privileged Communication) - எனக்கும் என் தலைவனுக்கும். அதை ஏன் உன்கிட்டே சொல்கிறேன் என்றால், அவன் நம்பணும் என்பதற்காகச் சொன்னேன். நீ போய்ப் பத்துப் பேர் இருக்கும்பொழுது உளறித் தொலைக்காதே என்கிறாள். திருச்செவி சாற்றுவாய்' என்றால் இன்றைக்குக் கூட வாய் புதைத்து, காது பக்கத்திலே போய்ச் சொல்லுகிறார்களே அதுபோலச் சொல்லு என்கிறாள். இதனால் பிராட்டியினுடைய எல்லையற்ற அறிவுக்கூர்மையைத் தெரிந்துகொள்கிறோம்.

இதற்கு மாறுபட்ட அடிப்படை ஒன்று இருக்கிறது. பிராட்டியினுடைய அடையாளத்தைச் சொன்ன இராகவன்- தான் மிதிலைக்குள் நுழைந்தபோது மாடியில் அவள் இருந்த அடையாளத்தைச் சொன்னான்.

அவள் மருந்துச் செடிபோலக் காய்ந்து கிடக்கிறாள் காட்டிலே. அப்படித்தானே இலங்கையில் போய் இருக்க முடியும். இப்படிப்பட்ட அடையாளத்தைச் சொல்லாமல் பிராட்டியின் பழைய அடையாளத்தைச் சொல்லப்போக, ஆஞ்சநேயன் அதை நம்பிக்கொண்டு போய் அங்கு ஒவ்வொரு அழகுள்ள பெண்ணாகத் தேடி, மண்டோதரியைக் கூடச் சீதை என்று ஐயப்படுகிற பைத்தியக்காரத் தனத்தைச் செய்கிறான். ஏன்? அது இராமன் செய்த தவறு. பிராட்டி அதைச் செய்யவில்லை. மிக ஜாக்கிரதையாகத் திருச்செவி சாற்றுவாய் என்கிறாள். ஆக, இதிலே அவர்கள் இரண்டு பேருடைய பெருமையும் மலைபோல உயர்ந்திருக்கிறதே தவிர நீங்கள் நினைப்பதுபோலக் குறை ஒன்றும் இல்லை.

11. 'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்' என்கிற பாடலில், எரியிடைக்கடிது வீழ்ந்து இறப்பேன் எனப் பிராட்டி கூறுவது, இந்தக் கால கட்டத்தில் பெண்கள் நம்மை மிரட்டுவதற்காக ஒரு சொல்- எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்களே- இதற்கு முன்னோடி யாகச் சீதாபிராட்டி இருந்தாள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது சரியா?

பிராட்டியைக் கொண்டுபோய் நம்மோடு சேர்க்க வேண்டிய தேவையில்லை. அவள் இருக்கட்டும்.

எப்படிப்பட்ட சூழ்நிலை என்று தெரியவேண்டும். அன்புக் கண்ணாடி போட்டுவிட்டால். பயில்வானாக இருப்பான் மகன்- ஆனால் அவன் ஒரு தவலையைத் தூக்கினான் என்றால் அவன் தாய், அடடே தூக்காதேடா, மூச்சைப் பிடிச்சுக்கும் என்பாள். இது அன்பினாலே விளைந்த ஒன்று. அப்படிப் பிராட்டியைப் பொறுத்த மட்டில்-இராகவன் பரம்பொருளாக இருந்தாலும் அவளைப் பொறுத்தமட்டில் கணவன். தன் கணவனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று நினைக்கிறாளே தவிர இலக்குவனைப் போலப் பெருமானை எடை போடுகின்ற சூழ்நிலையிலே மனைவி இருக்க முடியாது.

நன்றாகக் கவனிக்க வேண்டும். இலக்குவன் சொல்கிறான். யாரென நினைத்தீர் அக்கமலக் கண்ணனை என்று. நீங்கள் கல்யாணம் செய்துகொண்டீர்களே அந்தப் பெருமான் யார் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வில்லையே' என்று வருத்தப்படுகிறான்.

தெரிந்துகொள்ள முடியாது. அவள் அன்புக் கண்ணாடி போட்டிருக்கிறாள். ஆகையினாலே இதிலே நீங்கள் நினைக்கிறபடி இந்தக் காலம், அந்தக் காலம் ஒன்றும் கிடையாது. அவளுடைய சூழ்நிலையிலே இந்த முடிவு நியாயமானது. அவளைப் பொறுத்த மட்டிலே பரம்பொருள் என்று நினைக்கவில்லை. அவளுடைய கணவன்- அவனுக்கு ஒர் ஆபத்து- இப்போது மற்றொரு ஆண்மகனாகிய இவன் போய்க் காப்பாற்றவில்லை என்றால் வேறு என்ன இருக்கிறது. வெருவலை' என்று சொல்கிறாள். 'லட்சுமணா என்ற சொல் கேட்டவுடன் உன் உடம்பு பதறி இருக்கணும். உதறவில்லையே' என்று கேட்கிறாள். அவளைப் பொறுத்தமட்டில் உதறுவதுதான் நியாயம். இளையபெருமானைப் பொறுத்தமட்டில் இராமன் இன்னார் என்று தெரிந்தவன். அதனாலே உதறுகிற பிரச்சினை இல்லை. அவ்வளவுதான்.

12. இராமபிரான் வாலியைக் கொல்வது குறித்து எடுத்த முடிவு அவசரமானது என்பது சிலர் கருத்து. இதனை அரண் செய்வதுபோலக் கவிச் சக்கரவர்த்தி பாடிய இடம் ஒன்று உண்டு.

பரிவு இலன் ஒருவன் தன் இளையோன்

தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ?

- என்பது கவிச்சக்கரவர்த்தி வாக்கு. எனவே, வாலியைக் கொல்வது குறித்து இராமபிரான் எடுத்த முடிவு அவசரமானது என்பது கம்பருக்கும் உடன்பாடாகும் என நாம் கூறலாமா? - இந்தக் கருத்தை ஒரளவுக்கு நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவசர முடிவு என்று சொல்வதைவிடச் சூழ்நிலை காரணமாக அவன் எடுத்த முடிவு என்று சொல்லவேண்டும். அந்தச் சூழ்நிலையை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

கை அறுதுயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம் என்று சுக்கிரீவனிடத்தில் இராமன் பேசுகிறான். இதை விட வருந்ததக்க கூற்று (Statement) இராமாயணம் முழுவதிலும் கிடையாது. அதை, காதில் வாங்கிக் கொள்ளாமல் சுக்கிரீவன் என் அண்ணன் அடிச்ச அடியைப் பாரு' என்று தன்முதுகைத் திருப்பிக் காட்டுகிறான். இராமபிரான் வருந்துகிறான்- இப்படி ஒரு பரிதாபகரமான ஜந்துவா? என்று. அந்தச் சூழநிலையிலே அவனுடைய மனம் முழுவதும் எதிரிலே இருக்கின்றவனுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்துக் கலங்கிவிடுகிறது. அப்பொழுதுதான் சுக்கிரீவன் சொன்னதையெல்லாம் கேட்டவுடனே ஒரு முடிவு- யார் எதிரி என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை இராகவன் அதனாலேதான்,

...வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார்- உன்னோடு உற்றவர்

எனக்கும் உற்றார் உன் கிளை எனது...'

என்று சொல்கிறான். இது அவசரம் என்பதைவிட உணர்ச்சிப் பெருக்கிலே ஏற்பட்ட ஒரு முடிவு. அது எல்லாருக்கும் உரியதுதான். கையறு துயரத்தோடு வந்திருக்கிறான். தன்னைவிடத் துயரம் அடைந்திருப்பவனைப் பார்க்கிறான். சாதாரண மனிதனாக இருந்தால் 'நான் இதைச் சொல்லும்போது அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லையே' என்று ஒதுங்கியிருப்பான். பரம கருணையுடையவனாகிய பெருமான் தன்னுடைய துயரத்தை மறந்து தன்னைவிட அதிகம் துயரம் அடைந் திருக்கிறானே இவன் என நினைக்கும்போது அவனுக்கு ஆறுதலாக இந்த முடிவை எடுத்துவிடுகிறான்.

13. இராமன் புகழ்பட வந்த கம்பன், இராவணன், இந்திரஜித் ஆகியவர்களையும் புகழ்கிறானே, இதற்குக் காரணம் என்ன?

இது எல்லாக் காப்பியப் புலவர்களும் கையாளுகின்ற ஒரு வழி. எதிரியை எவ்வளவுக்கெவ்வளவு புகழ்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் புகழ் எல்லாம் இங்கே வந்து சேரும். அதில் ஒன்றும் தவறு இல்லை. சாதாரணமாக எலியை அடித்தான் இராமன் என்று சொன்னால் இதில் என்ன பெருமை இருக்கிறது!

வில்லாளரை எண்ணில் விரற்குமுன் நிற்கும் வீரன் (8006) ஆகிய இந்திரஜித்தனைப் போன்ற - அத்தனை பலங்களைப் பெற்றிருக்கிற இராவணனைப் போன்ற வீரனை வென்றான் ஒருவன். இது பெருமை என்றால் கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன் என்று சொல்லிவிட்டு ஐம்பதாயிரம் குரங்குகளைக் கூட்டிக் கொண்டு போனான் என்றால் இவைகளை யெல்லாம் வைத்துக்கொண்டு வெல்லணுமா? இல்லை. எதுவும் செய்ய முடியும். ஆனால் இவர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால்- தாங்களும் ஏதோ உதவி செய்தமாதிரி திருப்தி. அந்தக் குரங்குகளுக்கு எல்லாம். பெருமானுக்கு நாங்களும் துணையாகப் போனோம் என்ற ஒரு மன அமைதியைக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். ஆகவே எத்தகைய பகைவர்களை வென்றான் என்பதைக் குறிப்பதன் மூலம், அத்தனை புகழும் இங்கே வந்து சேருகிறது என்பது காப்பிய உத்தி. ஆகையினாலே கவிச் சக்கரவர்த்தி அதை அற்புதமாகப் பயன்படுத்துகிறான்.

14. அனுமன் கடலைத் தாண்டுவது, விச்வரூபம் எடுப்பது, சின்னஞ்சிறிய உருவம் கொள்வது போன்ற இவ்வளவு நம்ப முடியாத நிகழ்ச்சிகள் வேண்டுமா? இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர்கள் ஏன் பாடுகிறார்கள்?

இயற்கை இறந்த நிகழ்ச்சி என்பதே ஒரு பொருள் இல்லாத சொல். இயற்கை என்றால் என்ன? நீங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். நம்முடைய காலத் திலேயே யோகப் பயிற்சியின் மூலம் The power of the mind என்று அமெரிக்காவில் ஒரு நீண்ட படம் எடுத்து டி.வி.யிலே போட்டுக் காட்டினார்கள். மனவலிமையை அறிந்துகொள்வதற்காக ஆர்வாடிஸ்காவில் இருந்தும், பிரிட்டனில் இருந்தும் ஒரு கூட்டம் திபெத்துக்கு வருகிறது. சாதாரணப் பெளத்த துறவிகள் எத்தனை மாபெரும் செயல்களைச் செய்கிறார்கள் என்பதனை வீடியோப் படமாகக்கூட எடுத்து வைத்திருக்கிறார்கள். மாபெரும் வீரர்கள், ஒரு கையை நீட்டி அத்தனை பேரையும் வென்றுவிடுவார்கள். அவர்களை ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்த படியாகப் பனிக்கட்டியிலே வெற்றுடம்போடு போய் உட்காருகிறார்கள். ஒண்ணுமே பண்ணவில்லை. இ.ஸி.ஜி. (BCG) எடுக்கிறார்கள். திடீரென்று ஃப்ளாட்டாக வருகிறது. அந்தப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார்கள். ஹார்ட் நின்று போச்சு- இதுவும் நடக்கிறது. B/P பார்க்கிறார்கள். 120/90 திடீரென்று 230க்கு உயர்கிறது. இதெல்லாம் இன்றைக்கும் நடக்கிறது. இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. மனிதனுடைய ஆற்றல்- நீங்கள்

அ.ச.ஞா.ப-2 நினைக்கிறதுபோல் சாதாரண ஆற்றல் இல்லை. இறைவன் என்றைக்கு நம்மைப் படைத்தானோ அன்றைக்கே தனக்குரிய முழு ஆற்றலையும் நமக்குத் தந்திருக்கிறான். நாம் பயன்படுத்துவதில்லை. அவ்வளவுதான். பலகோடி நியூரான்கள் இருக்கின்றன நம் மண்டையில். நாம் உபயோகப்படுத்துவது ஒரு பர்சன்ட்தான். ஐன்ஸ்டின் கூட 12 பர்சென்ட்தான் உபயோகப் படுத்தினார் என்கிறார்கள். அதிகமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், கந்துக மதக்கரியை அடக்குவது, தண்ணிரில் நடப்பது என்றெல்லாம் செய்யலாம். ஒன்றும் அதிசயம் இல்லை. இயற்கை இறந்தது என்று பட்டம் கொடுக்கிறதே சரியில்லை.

இயற்கைதான் உதவுகிறது. இயற்கையின் உதவி கொண்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள். உங்களுடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்களானால் நீங்களும் செய்யலாம். இதைக் கவிச் சக்கரவர்த்திதான் முதன் முதலிலே கண்டுபிடித்தான்.

அந்த அப்பாவி சுக்கிரீவன் கூற்றாக,

வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா

என்று சொல்வதன் மூலம் இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது என்று கம்பன் தெரிவிக்கிறான். யோகப் பயிற்சி உடையவர்களே இன்றைக்குச் செய்கிற காரியத்தை அனுமன் செய்கிறது என்ன பெரிய காரியம்! ஆகவே பெரிதாக வளர்வதும், சிறியதாகக் குறுகுவதும் சாதாரண- அணிமா, லகிமா, மகிமா என்று சொல் வார்கள்- அஷ்டமா சித்திகள். அது சாதாரண சமா சாரங்கள். அதை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்ய வில்லை. தேவை ஏற்படும்போது இன்றைக்குக்கூட இதைப் பெரியவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். என்னுடைய சிறு அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு நாட்டிலே வாழ்ந்த ஒரு யோகி ஒரே நேரத்தில் ஒர் இடத்தில் இருந்த ஒரு கலெக்டர் அவர் மனைவி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது 450 மைலுக்கு அப்பால் கதிர்காமத்திலிருந்தும் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். அதனாலே இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. அனுமன் செய்தது சாதாரணச் செயல். இராமன் என்ற பெருமானுடைய தொண்டனாகிவிட்டவனுக்கு இது என்ன பிரமாதமான செயல் -கடலைத் தாண்டுவது!

15. கங்கைவேடன் காளத்திவேடனின் மறுபதிப்பா? காளத்தி வேடன் கங்கை வேடனின் மறுபதிப்பா?

இது என்ன பதிப்பு? இப்போ முன்னாலே வந்தவன் கம்பன். நான் என்னுடைய சிற்றறிவின்படி கூறுவேன். தொண்டுக்கு ஒரு வடிவம் கொடுத்துப் பெரிய புராணம் இயற்றினாரே, அவரே கம்பனைப் பார்த்துத்தான் இயற்றினார்.

தொண்டு என்கிற ஒரு பண்புக்கு அனுமன் மூலமாக வடிவு கொடுத்தான் கம்பன். சேக்கிழார் அதைப் பார்க்கிறார். மூன்று நூற்றாண்டுகள் தாண்டிவிட்டன. இராமாயணத்திலே உள்ள அத்தனை பாத்திரங்களிலும் ஒரு பாத்திரம் அனுமன். இதை நினைக்கிறார். இது இன்றைக்கு நாட்டுக்குத் தேவை. எனவே, இராமாயணத்தி லிருந்து அனுமனைப் பிரித்து எடுக்கிறார். அனுமன் என்று சொன்னாலும் தொண்டு என்று சொன்னாலும் ஒருபொருட் பன்மொழி. இதற்கு ஒரு வடிவு கொடுக் கிறார். 63 வரலாறுகளாகப் பாடுகிறார். ஆகவே, One is complimentary to the other. ஆகையினால் கங்கை வேடன் காளத்திவேடனின் மறுபதிப்பா, காளத்திவேடன் கங்கை வேடனின் மறுபதிப்பா என்ற பிரச்சினை இல்லை.

16. தயரதன் வாய்மை தவறக்கூடாது என்பதை நிறுவக் கைகேயி இரு வரம் கேட்டாள் என்று அவளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஏவா மகவைப் பிரிந்து இன்று எம்போல் இடர் உற்றனை நீ போவாய் அகல்வான்’ என்பதான சாபத்தின் கருவழி மாற்றவே கைகேயி இப்படி வரம் கேட்டாள் என்று சொல்வது இன்னும் சிறப்பல்லவா?

மகனை இழந்த தாய் தந்தையர் மகன் பிரிவால் நீ வீடு பேற்றை அடைவாய் அல்லது இறப்பாய் என்றுதான் சாபம் கொடுத்தார்களே தவிர - பிரிவாகவும் இருக்கலாம்- சாவாகவும் இருக்கலாம். அதைக் கைகேயி நினைந்தாள் என்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயாராயில்லை.

அதைவிடப் பெரிய கொடுமை- கன்னிகா சுல்கத்தில் அவன் சொல்லிய வார்த்தையை மீறி அவன் இப்போது இராமனுக்குப் பட்டம் கட்டுவது. அதனாலேயே அவன் நரகத்திற்குப் போகவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்பதுதான்- தற்காத்துத் தற்கொண்டான் பேணுவது தான்- அவள் கடமை. அந்த முறையில் செய்தாளே தவிர, இராமனுக்குப் பட்டம் கட்டியிருந்தால் அவன் இறந் திருப்பான் என்று நினைப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. மகன் இறந்து அந்தத் துயரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் அது பட்டம் கட்டித்தான் இறக்க வேண்டுமென்று எங்கே இருக்கிறது? அதை நான் ஏற்றக்கொள்ளத் தயாராயில்லை. 17. மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் தசரதன். பிள்ளைகளில் இராமனையே பெரிதும் விரும்பினான். இது அவனது குறை அல்லவா? மற்றப் புதல்வர்களிடம் அவன் என்ன குறை கண்டான்?

இதற்குத் தசரதன்தான் விடை சொல்ல முடியும். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அவன் பெருந் தவறுதான் செய்தான். இராமனைத் தவிர வேறு பிள்ளைகள் தனக்கு இருப்பதாக அவன் நினைவில் கொள்ளவில்லை. இதற்கு அரணாக நானும் ஒர் இடத்தைக் காட்ட முடியும்.

வந்த விசுவாமித்திரன் நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என்றுதான் சொன்னான். இராமன் என்று சொல்லவில்லை. கரிய செம்மல் என்று அடையாளம் சொன்னான். இரண்டு பிள்ளை சிவப்பு - இரண்டு பிள்ளை கறுப்பு. கரிய செம்மல் என்று சொன்னவுடன் ஏன் பரதன் நினைப்பு இவனுக்கு வரவில்லை?

ஆக, இராமனைத் தவிர இவனுக்கு வேறே தியானமே கிடையாது. அந்தக் குறைதான் அவனைச் சாக அடித்தது. வேறு ஒன்றுமில்லை. இராமன் பிரிவு அல்ல. நான்கு பிள்ளைகளைப் பெற்றும் ஒரு மகனிடத்திலே அளவுக்கு மீறி அன்பு காட்டினானே, அதுதான் அவனுடைய குறைக்குக் காரணமாக இருந்தது என்பதைக் கவிச்சக்கரவர்த்தி காட்டிச் செல்கிறார். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளலாம். -

18. சிலம்பில் ஊழ்வினையை இளங்கோவடிகள் வற்புறுத்தி யதைப் போலவே கம்பநாடனும் தன் காவியத்தில் விதியினை வலியுறுத்துகிறானா? அல்லது வேறு ஏதாவது வேறுபாடு உண்டா? இந்த நாட்டினுடைய மிக அடிப்படையான கொள்கை வினைக்கொள்கை. சமணர்களுக்கும் அது உடன்பாடு. பெளத்தர்களுக்கும் அது உடன்பாடு என்பது ஒருபுறம் இருக்க- இந்த வினை உருத்துவந்து ஊட்டும் என்பதிலே சில கருத்து மாறுபாடுகள் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும், சமணர்களுக்கும் உண்டு, ஆனால் அது ஊட்டியே தீரும் என்பதில் எந்தவிதமான ஐயப் பாடும் இல்லை. இனி அதற்கு விளக்கம் தருகிற முறையிலே ஒரே பாத்திரத்தை இரண்டு வகையாகப் பேச வைக்கிறான் கவிச்சக்கரவர்த்தி.

இராமனுக்குப் பட்டம் இல்லை, பரதனுக்கு என்று சொன்னவுடனே இலக்குவன் எல்லையற்ற சினத்தோடு 'விதிக்கும் விதி ஆகும் என் வில்தொழில் காண்டி என்று பேசுகின்றான். அதே இலக்குவன் மனம் மாறி, பிராட்டி வருந்தி இராமனைத் தேடிக்கொண்டு செல் என்றபோது, வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ? என்று பேசுகின்றான்.

ஆகவே விதிக்கொள்கை இரண்டு பேருக்கும் உடன் பாடு என்பதிலே எந்தவித ஐயப்பாடும் இல்லை. சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையில்-வினைக் கொள்கைக்கு மிகவும் அழுத்தம் கொடுத்துச் சில பகுதிகள் வருகின்றன. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம், ஊழ்வினையே என்கிறார். அந்த அளவுக்குக் கம்பன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் விடையாகும்.

19. சுந்தர காண்டம் சீதையின் பெருமையைப் பேசுவதா? அல்லது அனுமனின் சிறப்பைக் கூறுவதாக எழுந்ததா?

கவிச்சக்கரவர்த்தியினுடைய ஈடு இணையற்ற புலமைச் சிறப்புக்குச் சுந்தர காண்டம் ஒர் அடையாளம். வான்மீகத்தில்கூட இன்றைக்கும் சுந்தரகாண்டத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதைத் தினம் பாராயணம் பண்ணினால் பயனுண்டு என்று நம்புகிறவர்கள், செய் கிறவர்கள் உண்டு. தமிழிலே சுந்தர காண்டம் மிகமிக உயர்ந்தநிலைக்குப் போய்விடுகிறது. இரண்டு பாத்திரங்கள் - ஒன்று ஏவல்கூர் பணி செய்கின்றேன் என்று சொல்லிக்கொள்கிறானே அனுமன், அந்தப் பாத்திரம். மற்றொன்று புருஷகார வைபவத்தின் உறைவிடமாக இருக்கின்ற பிராட்டியின் சிறப்பு. இந்தப் பிராட்டியினுடைய சிறப்பை எப்படி வெளிப்படுத்துவது?

இராமன் சொன்னால் அது அர்த்தமற்றதாகப் போய் விடும். வேறு பாத்திரங்கள் சொன்னால் அது பொருத்தமற்றதாக ஆகிவிடும்.

ஆக, மிக அற்புதமாகக் கம்பன் ஒர் அடிமையை வைத்துப் பிராட்டியின் சிறப்பை இமயமலையின் உச்சிக்குக் கொண்டுசெல்கிறான். அப்படிச் சொல்லுகின்ற அதே நேரத்தில் இவனுடைய சிறப்பும் வெளிப்படுகின்றது.

ஆகவே, இரண்டு பேருடைய சிறப்பையும் ஒன்றுக் கொன்று(background) அடித்தளமாக இட்டு, இரண்டையும் ஈடு இணையற்ற முறையிலே படைத்துக் காட்டுவதற்குச் சுந்தர காண்டத்தை ஒரு கருவியாகக் கொள்கிறான் என்று நினைப்பதிலே தவறு ஒன்றும் இல்லை.

20. சரணாகதியைப் பற்றியும், அறம் வளர்த்தல் பற்றியும், நன்றி பற்றியும், வாய்மை காத்த வள்ளல் என்று தயரதனைப் பற்றியும்- இப்படி எல்லாப் பொருள்களையும் முதல் 5 காண்டங்களிலே ஆறாயிரம் பாடல்களிலே (6058 பாடி முடித்த கம்பன் போர்ச் செய்தியை மட்டும் கூறுவதற்கு யுத்த காண்டத்தை நாலாயிரம் பாடல்களாக (4310) அவ்வளவு விரித்துப் பாட வேண்டிய அவசியம் என்ன?

அந்தப் போரைப்பற்றிப் பாடவேண்டும் என்பதுதான் அவன் கருத்தா?

முன்பு ஒரு கேள்விக்கு விடை கூறும்போது'பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சோழப் பேரரசு தொடக்கத்தில் இருக்கிறது என்று கூறினேன். அதை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. தமிழர்களுடைய ஆட்சி என்பது சோழர்களுடைய ஆட்சிதான். அது வருவதற்கு ஒரு நிலைக்களம் அமைக்க வேண்டும். சோழர்கள் ஆட்சி வருவதானால் வீழ்ச்சி அடைந்த பல்லவர்கள், கிழக்குச் சாளுக்கியர்கள், மேற்குச் சாளுக்கியர்கள், புலிகேசி போன்ற எத்தனையோ பகை சுற்றியிருக்கிறது. இத்தனை பகைகளையும் வென்றுதான் சோழப் பேரரசு நிலைகொள்ளவேண்டும். அப்படி நிலைகொள்வதானால் போரிட்டுத்தான் நிலைகொள்ள முடியும். அப்படிப் போரிடும்போது எப்படிப் போரிட வேண்டும் என்பது மிக இன்றியமையாத ஒன்று.‘Ends justify the means’ என்று சொல்கிறோமே, அதுபோல எதையாவது செய்து காரியத்தைச் சாதித்துவிட வேண்டுமென்ற கொள்கையைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை.

வழியும் தூய்மையாக இருக்க வேண்டுமென்று மகாத்மா சொன்னாரே, அது தமிழர்களுடைய பழைய கொள்கை. அந்த முறையிலே போரிட வேண்டும். அதாவது, அறத்தின் அடிப்படையில் நின்று போரிட வேண்டும். ’அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்பது தமிழர்களுடைய கொள்கை. அந்தக் கொள்கையின் அடிப்படையிலே இந்த நாலாயிரம் பாடல்களைப் பாடுகிறான். அறத்தின் மூர்த்தி போரிடுகின்றான். அவர்களுடைய படையை நோக்க- இவனுடைய படை-படை என்று சொல்வதற்குத் தகுதியில்லாத படை என்றாலும் - அறம் இவனுக்குத் துணையாக நிற்கிறது. எதிராளி படை பலத்தின் எல்லையிலே நின்றாலும் அறத்தின் அடிப்படையில் இல்லாமையாலே அது தோற்கத்தான் செய்யும் என்பதை எடுத்துக்காட்டுவது மிக இன்றியமையாதது.

இந்தச் சோழப் பேரரசு இந்த அறத்தின் அடிப்படை யிலே செல்லவேண்டுமென்று கம்பன் நினைக்கிறான். அப்பொழுதுதான் கிழக்குச் சாளுக்கியர், மேற்குச் சாளுக்கியர், புலிகேசி முதலானவர்கள், பல்லவர்கள் இவர்களை யெல்லாம் வெல்ல முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இதை ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறான். ஆனால், மாபெரும் கவிஞன் ஆதலாலே, இதை வெளிப்படையாகக் காட்டமாட்டான். உள்ளுறைப் பொருளாகக் கருத்தை அமைத்துப் பாடுகிறான். இந்தச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் அற அடிப் படையில் நின்று போரிடவேண்டும்.

மேலே உள்ள அத்தனை பகைவர்களோடு இவர்கள் போரிட வேண்டும். ஆகவேதான், இராவணாதிகளுடைய பலங்களையெல்லாம் பெரிதாகக் காட்டி, இராகவன் தன்னந்தனியாக நின்று அறத்தின் அடிப்படையில் போரிடுகின்றான் என்பதைக் காட்டுகின்றான். ஆகவே நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. போரை இவ்வளவு பெரியதாக நாலாயிரம் பாடல்களில் பாடியதற்குக் காரணம் அன்றைய சூழ்நிலை. இந்தச் சமுதாயத்திற்குச் செல்லவேண்டிய வழியைப் புலன்படுத்த அதைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான்.

21. தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி என்று கம்பனால் பாராட்டப் பெற்ற சவரி, இராமாயண வரலாற்றிலே இராம பிரானின் வைபவத்தைக் குறித்துக் கூறுவதற்கு அவ்வளவு பெரிதாக உதவி செய்ததாகக் காணப்பட வில்லை. கம்பராமாயணப் பாடல்களிலே 9 பாடல்களிலே இருக்கின்ற படலம். அப்படிப்பட்ட சபரியின் வரலாற்றைக் கூறத்தான் வேண்டுமா? அதற்கு ஏதாவது அவசியம் உண்டா என்பதை விளக்க வேண்டும்?

சபரியின் வரலாறு ஒன்பது பாடல்களிலே இருக்கலாம். பெரிய தேருக்கு ஒரு சிறிய துண்டுதான் அச்சாணி. அதுபோல இராகவன் அரையும் குறையுமாக இன்னார்தான் பிராட்டியைக் கவர்ந்து சென்றிருக்க வேண்டுமென ஒரு ஹேஷ்யம் என்று சொல்லுகிறோமே, அந்த முறையில் தேடிக்கொண்டு வருகிறான். இப்போது அவன் வருகின்ற வழியில் நேராகப் போனால் வாலி கிட்டேதான் போய்ச் சேரமுடியும். வாலியினிடம் முன்னைப்பின்னே தெரியாதவனாகிய இவன் போய்த் தன் குறையைச் சொல்லியிருப்பானானால் நிச்சயம் வாலி உதவியிருப்பான். இராமகாதை நடைபெற்றிருக்கும். ஆனால், தன்னுடைய மனைவியைக் கவர்ந்து சென்றான் ஒருவன், அவனுடன் போர்புரிவதற்கு, தம்பியினுடைய மனைவியைக் கவர்ந்து சென்ற ஒருவன் துணையைப் பெறும் பரிதாபகரமான நிலைக்கு இராமன் தள்ளப் படுவான். இதை உணர்ந்தவனாகிய கம்பன் மாபெரும் ஞானியாகிய சபரி வாயிலாக, இந்த மாபெரும் குற்றம் நிகழ்ந்து, இராகவனுக்குப் பழி வாராமலிருக்க ஒரு அற்புதமான வழியைக் கையாளுகிறான். எந்த விதத்திலும் சிறப்பு இல்லாதவனாகிய சுக்கிரீவனிடம் போவதற்கு வழி காட்டுகிறாள். சுக்கிரீவன் இரலை பர்வதத்தில் படைகள் ஒன்று மில்லாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனிடத்தில் ஏன் செலுத்துகிறாள் என்றால், அவனை வைத்துக்கொண்டு போரிட்டால் அறத்தின் மூர்த்தி யினுடைய கொள்கை நிறைவேறும். வாலியைத் துணைக்கு அழைத்திருந்தால் அது பெருந் தவறாக முடிந்திருக்கும். ஆகவே diversional way என்று சொல்லு கிறோமே-வழிமாற்றி, சுக்கிரீவனிடம் போகுமாறு செய்கிறாள். ஆகையினாலே சபரி உதவி மாபெரும் உதவி என்பதை மறுப்பதற்கில்லை.

22. இலக்குவன் ஊர்மிளையிடம் சொல்லிக்கொண்டு காடு போனதாகக்கூடச் செய்தியில்லை. பரதன் தன் மனைவியின் உணர்ச்சியைச் சிறிதும் பார்க்காமல் 14 ஆண்டுகள் இந்திரியங்களை வென்று நந்தியம்பதியில் தங்கிவிடுகிறான். சத்துருக்கனனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவனுக்கு மனைவி ஒருத்தி இருந்ததாகக் கூடச் செய்தியில்லை. இராமனோ சீதையை நெருப்பில் இறங்கச் சொல்லத் தயங்கவில்லை. வாலி தாரை சொல்லை மதிக்கவில்லை, மண்டோதரி போன்ற உத்தமி இருந்தும், அவளுக்குத் தெரிந்தே சீதையைத் சிறை வைக்கிறான் இராவணன். பெண்ணுக்கும் பெண்மைக்கும் இராமாயணம் சிறப்புத் தரவில்லை என்பது மட்டுமன்றிக் கேவலப்படுத்தவும் தயங்கவில்லை. கவிச்சக்கர வர்த்திக்கு இது அடுக்குமா?

இந்த நாட்டினுடைய வரலாற்றைப் பார்ப்போமே யானால், வேதகாலம் முதற்கொண்டு பிற்காலம் வரையில் பெண்களுக்கு முழு மதிப்புத் தந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட முடியாது. உலகம் போற்றுகின்ற மாபெரும் ஞானியும் தத்துவவாதியுமான சங்கரருக்கும் மண்டலமிச்ரருக்கும் இடையே போராட்டம் நிகழ்கிறது. அந்த வாதப்போருக்கு நடுவராக யார் அமைந்தார் என்பதை நினைத்துப் பார்ப்போமேயானால், பெருமிதம்கொள்ள வேண்டியிருக்கிறது. மண்டலமிஸ்ரரின் மனைவியாகிய சரஸ்வதியேதான் அதற்கு நடுவர். எந்த அளவிலே இந்த நாட்டுக்காரர்கள் பெண்களைப் போற்றினார்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சொல்லவே வேண்டியதில்லை. சங்கப் பாடல்களிலே அத்தனை பெண்பாற் புலவர்கள் இருக்கிறார்கள். ஆக, பெண்களுக்கு மதிப்புத் தரவில்லை என்று சொன்னால் அது அத்தனை சரியில்லை. குறிப்பிட்ட சில பாத்திரங் களை எடுத்துக் கொண்டு இந்த வினா எழுப்பப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துப் பார்ப்போமேயானால் காப்பியத்திலே குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்ய வேண்டியவர்கள் ஆகிறார்கள். சில sacrifice (தியாகங்கள்) செய்துதான் தீரவேண்டும் அதை யாரும் மறுக்க முடியாது.

மகாத்மா காந்தி வசதியாக வாழக் கூடியவர். அவர் இல்லறத்தில் வாழ்ந்தாரே தவிர, பிற்காலத்தில் மனைவிக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பகவான் இராமகிருஷ்ணர் அதே மாதிரிதான். ஆகவே இராமகிருஷ்ணர் மனைவிக்குரிய மரியாதை தரவில்லை என்று நினைத்தால் அது தவறு. சில பாத்திரங்கள் சில கடமைகளைச் செய்வதற்காக இறைவனால் படைக்கப்படுகின்றன. அந்தப் பாத்திரங்கள் அந்தக் கடமைகளைச் செய்துகொண்டு போகும்போது சிலர் துன்பம் அடையத்தான் நேரிடுகிறது. இன்றைக்கும் கூட அது நடக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. ஆகவே ஒரு தலைவன் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால் அந்தத் தலைவி விட்டுக்கொடுக்க வேண்டும். இதுபோல பரதனுடைய பாத்திரமும், இலக்குவனுடைய பாத்திரமும். இந்தக் காப்பியத்திலே இரண்டு பாத்திரங்கள் படைக்கப் பெற்றிருக்கின்றன. அவை இராமனுக்குத் தொண்டு செய்வதிலே, ஒருவன் பக்கத்தில் இருந்து செய்கிறான், இன்னொருத்தன் தூரத்தில் இருந்து செய்கிறான்.

இந்த அறத்தை வைத்துக் காட்ட வருகிறான் கவிச் சக்கரவர்த்தி. அவர்களுடைய தொண்டுதான் முக்கியமே தவிர, அவர்களோடு தொடர்ந்தவர்கள் அந்தத் தொண்டிலே முடிந்தால் பங்கு கொள்ளலாம், இல்லை யானால் சும்மா இருக்க வேண்டியதுதான். இது அவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி என்று சொல்வது ஒரு குறுகிய நோக்கம்.

பரதன் கல்யாணம் பண்ணிக்கொண்டு நம்மைப் போல் வாழ்ந்தான் என்றால், அது ஒருவேளை உயர்வு என்று நினைக்கலாம். ஆனால், பரதனாக இருக்க மாட்டான். அ.ச.வாக இருந்திருப்பான். இந்த வேறு பாட்டை மனத்திலே கொள்ள வேண்டும். ஒரு மாபெரும் காரியம் நிகழ வேண்டுமேயானால் சில பேர் தியாகம் செய்துதான் தீரவேண்டும். இராமனுக்குத் தம்பியாகப் பிறந்த காரணத்தினாலே இலக்குவனுக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரமும் இதேபோல்தான்.

இனி, இராவணனைப் போன்ற ஒருவனை ஒருத்தி திருமணம் செய்து கொண்டால் - உரலுக்குள் தலையை விட்டால் அது இடிக்கும்- அந்த நிலையிலும் அவள் கணவனிடத்தில் அன்பு காட்டுகிறாள் என்றால், அது அவளுடைய சிறப்பைக் காட்டுகிறதே தவிர, வேறு ஒன்றுமில்லை. இதை male chauvinism என்று சொல்லிப் புண்ணியம் இல்லை. அந்தந்தப் பாத்திரங்கள், அவை சாதாரண பாத்திரங்கள் அல்ல; அதை மறந்து விடாதீர்கள்; ஈடு இணையற்ற பாத்திரங்கள் உலகத்தில் மாபெரும் செயலைச் செய்வதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள். இன்சிடெண்ட்டலாகச் சில பாத்திரங்கள் அடிபடத்தான் செய்யும் ஆகவே, அதில் தவறு ஒன்றுமில்லை.

23. காப்பியம் என்பது அரிய கலை. ஆனால் கம்பனுடைய இராமாயணத்தின் விருத்தப் பா அத்தனையையும் வெண்பாவாக மாற்றி இராமாயண வெண்பா என்று காப்பியம் செய்திருக்கிற கவிஞரின் நோக்கம் என்ன?

கம்பராமாயணத்தில் அவர்களுக்கு இருக்கிற ஈடு பாட்டை வெளிப்படுத்துகிறார்களா? அல்லது விருத்தத்தை வெண்பாவாக ஆக்க முடியும் என்பதாகத் தங்கள் திறனை வெளிப்படுத்தினார்களா?

இது போன்ற சிறப்பு கம்பராமாயணம்தவிர வேறு ஒரு நூலுக்கு உண்டா? -

இந்த வினாவுக்கு நீங்களே விடை கூறிவிட்டீர்கள். அதாவது எங்களாலே பாட முடியும் என்பதைக் காட்டுவதுதான் அடிப்படை. அது ஒருபுறம் இருக்க. இது ஒரு புதிய முயற்சி. அவ்வளவுதான். தவறு ஒன்றுமில்லை. விருத்தப்பாவை இப்படிப் பண்ணலாமென்று, புகழேந்திதான் இதற்கு வழி வகுத்தான். அவன் வம்பு கொடுக்காதிருந்தால் வெண்பாவுக்கு இவ்வளவு மரியாதை வந்திருக்காது. அவன் போய் நளவெண் பாவைப் பாடி வைக்கப் பின்னாலே வருகிறவர் களெல்லாம் அதன் பக்கத்தில் போக வேண்டும் என முயன்றார்கள்.

விருத்தப் பாவினுடைய வீச்சு வெண்பாவுக்கு கிடையாது. அதை மறந்துவிடக் கூடாது. நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு விருத்தப் பாவிலே இருக்கிற வீச்சு வெண்பாவுக்குக் கிடையாது. இப்படியும் பாடலாம் என்றால், அது வேறு சமாச்சாரம்.

புகழேந்தி பாடியது ஒரு நிலை. அவனுக்கு மூலமாக இருந்த கதை நைடதம். விருத்தங்களின் நடை அதிலே இல்லை. புதிதாக வெண்பாவிலே பாடினான். சரியாகப் போய்விட்டது. பின்னாலே வந்தவர்கள் விருத்தப் பாக்களிலே இருந்த இராமாயணத்தை, மகாபாரதத்தை அப்படிப் பண்ணனும் என்று நினைத்தது ஒரு புது முயற்சி. அந்த அளவிலே வரவேற்கலாம். தவறு ஒன்றுமில்லை.

24. உலகம் யாவையும் எனத் தொடங்கும் கம்பருடைய கடவுள் வாழ்த்துப் பாடலிலே, நீங்கலா அன்னவர்க்கே சரண் நாங்களே என்ற முடிவு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதிலே, நீக்கிலா, நீங்கிலா, நீங்கிலார்- எவர் ஆனவர்க்கே சரண் என்பதாக மூன்று பாடங்கள் காணப்படுகின்றன. கம்பன் கருதியது என்னவாக இருக்கும்?

இது இந்த நாட்டினுடைய அடிப்படைக் கொள்கை பரம்பொருள் ஒன்று உண்டு. அவனுக்குச் சரண் நாங்களே என்று. இது ஏகம் சத்' என்ற கருத்திலிருந்து அப்படியே வருகிறது. ஒருவர் -அந்த ஒருவருக்கு- எல்லா உயிர்களும் சரண் இங்கே நாங்கள் என்றால் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. மனிதர்கள் மட்டுமல்ல-புல் பூண்டு எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்கிறது. சரண் நாங்களே என்ற கருத்து இது. இன்று நேற்று தோன்றியது இல்லை, என்றோ தோன்றிய கருத்து. அதைக் கவிச்சக்கரவர்த்தி அழகு படுத்துகிறார். ஒருவர்தான் தலைவர் - இரண்டாவது தலைவர் இருக்க முடியாது. இந்தக் காலத்திலேயே இதற்கு எளிதாகப் பொருள் கொள்ளலாமே- ஏன் சிரமப்படுகிறீர்கள்?

முடிவுரை.

நண்பர்கள் பலர் நன்கு கற்றவர்கள். மேலும் சிந்திப் பதற்காக இந்த வினாக்களை எழுப்பினார்கள். அவற்றுக்கு ஏதோ நான் விடை கூறிவிட்டேன் என்பது பொருள் அல்ல. அவர்களுக்கே இந்த விடை நன்றாகத் தெரியும். என்றாலும், பகிர்ந்துகொள்வதற்காக இந்த வினாக்களைத் தொடுத்திருக்கிறார்கள். அப்படி வினாக்களைத் தொடுப்பதன் மூலம் நாம் புதிய சிந்தனையில் போவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. வினாவிடையிலேயே உள்ள சிறப்பு இதுதான்.

இதுவரையிலே நாம் அந்த முறையில் சிந்தித்திருக்க . மாட்டோம். அப்படிச் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதுதான் இத்தகைய ஒரு நிகழ்ச்சியினுடைய அடிப்படையாகும்.

இப்போது. இராமகாதையைப் பொறுத்த மட்டிலே ஒரு அறுபது, அறுபத்திரண்டு இராமாயணங்கள் இருக்கின்றன. அண்மையிலே ஜப்பானிலிருந்து வந்த ஒருவர் கிழக்கு ஆசியாவிலுள்ள சயாம் முதலான இடங்களில் இருக்கும் இராமாயணத்தில் கம்பனுடைய செல்வாக்கும் தாக்கமும் எப்படி ஏற்பட்டிருக்கின்றன என்பதை-டோக்கியோவிலிருந்து வந்த அந்தப் பேராசிரியர் பேசக் கேட்டேன்.

ஆதிகாவியம் எழுதிய வால்மீகிக்கு ஏறத்தாழ ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னாலே கம்பன் வந்தான். வால்மீகி யினுடைய இராமகாதை ப்ரைமரி எபிக் (primary epic) ஆதிகாவியம் என்று சொல்லப்படும்; ஆதி காப்பியத்திலே உணர்ச்சிகளை அப்படி அப்படியே சொல்லியிருப்பார்கள். அங்கே நகாசு வேலையே கிடையாது. அதுதான் பிரைமரி எபிக்கோட லட்சணம். அந்தப் ப்ரைமரி எபிக்ஸ் - மனிதர்கள் வளரவளர அதை அப்படியே சொல்வது என்பது பொருத்தப்படாது. ஆகவே, அதைக் கொஞ்சம் அழகுபடுத்தி- அந்த உணர்ச்சிகளையும் காட்ட வேண்டும். அதே நேரத்திலே அதை மென்மையாக-அழகு பொருந்த- tastefully என்று சொல்லுகிறோமே அந்த முறையில் சுவை ததும்பக் காட்டவேண்டும் என்பதுதான் லிட்டரரி எபிக் என்று சொல்லப்படுகின்ற இலக்கியக் காப்பியத்தினுடைய அடிப்படையாகும். அந்த முறையிலே கம்பநாடனுடைய காப்பியம் ஆதிகாவியமாகிய வால்மீகத்திலிருந்து பெரும்பகுதி ஒட்டிச் செல்கிறது, மறுக்க முடியாது.

அனுமனைப் பற்றிக் கம்பன் அத்தனை பாடுகிறானே, அவை அத்தனையும் வால்மீகத்தில் இருப்பதுதான். நினைத்துப் பார்த்தால் மிக ஆச்சரியமாக இருக்கும். அவ்வளவு பழங்காலத்திலே காட்டிலே வாழ்ந்த ஒரு மாபெரும் கவிஞன், இப்படி ஒரு காப்பியத்தை அமைத்தான் என்றால், அது இறைவனுடைய அருள்

அ.ச.ஞா.ப-3 பெற்றுத்தான் இருக்கமுடியும். ஆகவே, வால்மீகி இறையருள் பெற்றுப் பாடினான் என்பதிலே எந்தவித ஐயப்பாடும் இல்லை.

ஆனால், நாகரிகம் வளர வளரச் சாம்ராஜ்யங்கள் தோன்றின; சாம்ராஜ்யங்கள் மறைந்தன. அந்த மாதிரி நிலையிலே வருகின்ற கவிச்சக்கரவர்த்தி தன்னுடைய காலத்திற்கேற்ற முறையிலே தன்னுடைய சமுதாயம் பயன்படக்கூடிய முறையிலே பல கருத்துக்களை இதிலே புகுத்தி- சில பகுதிகளை மாற்றி- சில பகுதிகளைக் குறைத்துப் பாடுகிறான். இது முழு இலக்கியக் காப்பிய மாகும். அந்த முறையில் இது ஈடு இணையற்றதாக அமைந்துவிட்டது என்பதிலே ஐயப்பாடு இல்லை. வால்மீகியினுடைய இராமகாதை பரவியிருந்தது என்பதிலும் ஐயப்பாடு இல்லை. ஆனால், கிழக்காசியா முதலான நாடுகளிலே சென்று பரவிய இராம காதையிலே கம்பனுடைய தாக்கம் மிகமிக அதிகமாக இருக்கிறது. அது ஏன்? வளர்ச்சி அடைந்த நிலையிலே அந்த இராம காதைகள் தோன்றுகின்றன. அந்த மாதிரி இடங்களிலே முழுவளர்ச்சி பெற்ற கம்பனுடைய காப்பியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

இன்றைக்கு அதைக் கதை என்ற அளவில்மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் காப்பியத்தை எப்படிக் கொண்டு செலுத்துகிறான். இந்தச் சமுதாயம் 9 ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலை, அதற்கு முன்னால் இருந்த நிலை, அல்லது பின்னாலே வளரப்போகிற நிலை, வளர்ந்தால் அதிகாரம் கைக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்பது அனைத்தையும் பார்க்கலாம். நினைத்துக்கூட உங்களாலே பார்க்க முடியாது. அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிது ஆம்

இது கம்பனுடைய வாக்கு.

பவர் கரப்ட்ஸ்-அப்ஸல்யூட் பவர் கரப்ட்ஸ் அப்ஸலூட்லி (Power corrupts. Absolute power corrupts absolutely) இது வாக்கு. இதைக் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவ்வளவு அனுபவம் பெற்றவர் சொல்கிறார் பவர் கரப்ட்ஸ் என்று.

இதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறான் கவிச்சக்கரவர்த்தி. அவன் காலத்திலே அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் இல்லை. பல்லவர்கள் வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். சோழர்கள் வரவில்லை. அப்படி இருக்கையில் எப்படிப் பாடினான்? வருவது நோக்குகின்ற-எதிரது நோக்குகின்ற பேராற்றல் படைத்தவனாகிய கவிஞன் இப்படி ஒரு சாம்ராஜ்யம் வருமேயானால் அதில் இந்தக் குறை வரத்தான் செய்யும் என்று எச்சரிக்கை செய்கின்ற முறையில்,

அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்

ஜாக்கிரதை என்று பாடுகிறான். அதேபோலச் சுக்கிரீவனுக்கு அறவுரை பகர்கின்றான் இராமன். சாதாரணச் சொல்லில் அவனைப் போகச் சொல்லிவிட்டு அனுமனைக் கூப்பிட்டுச் சொல்கிறான். அந்தப் பாட்டுக்குத் தற்குறிப்பேற்றம் மாதிரி பொருள் எழுதுகிறார்கள்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு’ என்று சொல்லுவான். ஒரு நாட்டை ஒருவன் நிறை அரசு காத்தான். இப்பொழுது இன்னொருத்தன் அந்த நாட்டை வலியப் பெற்றுக்கொண்டான். அந்நாட்டு ஜனங்கள் போன ஆட்சியோடு, இந்த ஆட்சியை compare செய் வார்கள்.

வாலி ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இராமன் நிறையரசு' என்று 'சர்டிபிகேட் தருகிறான்.

அதை வலியப் பற்றிக்கொண்டான் அவன் தம்பி சுக்கிரீவன். மக்கள் அந்த ஆட்சியோடு இந்த ஆட்சியை ஒப்பு நோக்குவார்கள். நலனும் தீங்கும் வாலி காலத்தில் இப்படி நடக்குமா என்று நினைப்பார்கள்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற

வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்

அரும்புவ நலனும் தீங்கும் ஆகலின் ஐய நின்போல்

பெரும் பொறை அறிவினோரால் நிலையினைப் பெறுவது அம்மா

'அதற்கேற்றபடி நீதான் நடத்த வேண்டுமென்று யாரிடத்திலே இந்த அறிவுரையைச் சொல்கிறான் இராமன்? அனுமனிடம் சொல்கிறான். இங்கேதான் கவிச் சக்கரவர்த்தி ஈடு இணையற்று விளங்குகிறான். இதை இராமன் சுக்கிரீவனிடத்தில் சொல்லியிருக்க வேண்டும். சொன்னால் பிரயோஜனம் இல்லை அவன். மாபெரும் அறிஞனாகிய அனுமனிடத்திலே - "நீதான் அமைச்சனாக இருந்து guide பண்ண வேண்டும். ஜாக்கிரதை, நிறை அரசு போய்விட்டது. இப்படி வலிதில் பற்றிய உங்களுடைய சுக்கிரீவன் ஆட்சி வந்திருக்கிறது. மக்கள் ஒப்பிடுவார்கள். ஆகவே, நீ இந்த அரசை ஜாக்ரதையாகக் கொண்டுசெலுத்து" என்று சொல்கிறார் என்றால், இது அனுமனுக்குச் சொல்லியதா?

இந்த உலகத்திலே எத்தனை சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றனவோ அத்தனை சாம்ராஜ்யங்களுக்கும் பொது அது. இப்படி உலகம் முழுவதையும்- உலகம் யாவையும் என்று தொடங்கினானே - அதை மனத்தில் வைத்துக் கொண்டே உலகம் முழுவதற்கும் நீதி புகட்டுகின்ற முறையிலே கவிஞன் தன் காப்பியத்தை அமைக்கிறான். கதையாகப் பார்த்தால் கதையை அனுபவிக்கலாம். கதையை விட்டுவிட்டு, சிறு பாத்திரங்களாக - சிறுசிறு பாத்திரங்கள் நடந்து கொள்ளுகின்ற முறையிலே பார்ப்பீர்களானால்-எப்படி நடந்துகொள்ள வேண்டு மென்பதை அவன் தனக்கே உரியமுறையில் எடுத்துச் சொல்வான்.

இன்னும் சொல்லப் போனால் clairvoyant என்று சொல்வார்கள். வருங்காலத்தையும் அறிந்தவன் கவிஞன். என்று. இந்த 1995 அல்ல- 2996லே கூட- நீங்கள் எவ்வளவு தான் மக்களாட்சி என்று சொல்லப்படுகிற ஒட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் ஆட்சி வந்தாலும்கூடக் கம்பன் சொல்லிய சட்டம் என்றைக்கும் செல்லும்.

அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதுஆம்

இன்றைக்கும் அனுபவித்துக்கொண்டேயிருக்கிறோம். ஆகவே, கம்பன் என்றைக்கும் பொய்யாவதே இல்லை.

அறன் இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது என்பதை ஒட்டுப் போடுகிற காலத்திலேகூட உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, உலகம் முழுவதற்கும்- என்றைக்கும் பொதுவாக- வள்ளுவப் பேராசான் எப்படி ஒரு பொதுநூல் இயற்றினாரோ அது போல இந்தக் காப்பியத்திலே உங்களுக்குப் பிடித்தால் இராமனையும், இலட்சுமணனையும் வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள். அதைப் பற்றிக் கவலையே இல்லை. அவன் சொல்லிய கருத்துக்களை யெல்லாம் தொகுத்துக் கம்பன் கண்ட அரசியல் என்று சொல்வீர்களேயானால்-மாடர்ன் க்வாலிடி (modern quality) என்று சொல்லுவார்களே-அதற்கு இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வருகின்ற நூற்றாண்டும் வணக்கம் செலுத்துகின்ற முறையிலே அரசியல் அமைப்பை அமைத்துவிடுகிறான்.

இதை யெல்லாம் நினைந்து பார்க்கும்போது நம் முடைய மூதாதையாகிய கம்பன் நமக்குமட்டும் இந்த நூலை இயற்றித் தரவில்லை. மனித சமுதாயம் அனைத்திற்கும் எந்தக் காலத்திலும் அவர்கள் வாழும்போது எத்தகைய வளர்ந்த நாகரிகத்தை அடைந்தாலும், சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் அப்போது இராமகாதையை எடுத்துப் படிப்பார்களேயானால் அது அவர்களுக்கு உதவும். கதை பழையதாக இருக்கலாம். ஆனால் அன்றாடம் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய பல அடிப்படைச் சூழ்நிலைகள் அங்கே விளக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போது, வள்ளுவனுடைய குறளைப் போல இதுவும் உலகம் முழு வதற்கும் பொதுவான அறநூல் என்பதை உணரலாம்.

காப்பியம் என்று சொல்வதைவிட அறநூல் என்றே தெளிவாகச் சொல்ல முடியும் என்னால், அப்படிப்பட்ட அறநூலை ஆக்கித் தந்தான் கம்பன். அந்த அறநூலிலே அன்பர்கள் பல்வேறு விதமான வினாக்களை எழுப்புவதன் மூலம் அவர்களோடு சேர்ந்து நாம் அனைவரும் சிந்திக்கின்ற ஒரு வாய்ப்பைத் தந்தார்கள்.

(28.10.1995- கோவை வானொலி நிகழ்ச்சியில் சுவைஞர்கள் எழுப்பிய வினாக்களும், அவற்றுக்கு அ.ச.ஞா. தந்த விடைகளும்.)