மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/பரிசில் வாழ்க்கை!

விக்கிமூலம் இலிருந்து

13. பரிசில் வாழ்க்கை!


அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில் வைத்தனர். அவன் ஒற்றன் என்பதாக அவர்கள் கருதினர். கொற்றவனும் அக்கருத்தை ஏற்றான். இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது அவர் ஒடோடியும் வந்தார்.

என்ன இது? இளந்தத்தன் ஒற்றனா? என்று கேட்டார் கொற்றவன் திகைத்தான்!

கிழார் கூறினார்:

அரசே! பறவை எங்கும் பறந்து செல்கிறதே, அதனை ஒற்றன் என்று யாரும் கைது செய்வரோ? ஆனால், வேடர் அதனை அம்பெறிந்து கொல்வதுண்டு! கண்ணி வைத்துப் பிடிப்பதும் உண்டு.ஆனால், பழுமரம் அப்பறவையை வா, வா என்று வரவேற்கும்...

வள்ளன்மை பூண்ட பழுத்த மரங்களை நாடிப் பரிசில் பெறப் பறந்து செல்லும் புலவர்...ஆ...எத்தகைய இன்னல்களுக்கு ஆளாகின்றனர்....வேடர்கள் வில்லோடு திரியும் கொடிய காடுகளைக் கடந்து, அதன் நெடிய வழிகளை நீந்தி, ஆர்வச் சிறகு விரித்துப் பறந்து செல்கின்றனர்....ஏன்? புரவலாற் பெறும் சிறப்புக்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

பெறும் பரிசில்களை, அவர்கள் என்ன செய்கின்றனர்?

பறவைகள் போன்றே சுற்றத்துடன் கூடி, நாளைக்கு என்றில்லாது, உள்ளம் களித்து உண்டு தீர்க்கின்றனர்.

சுதந்திரமான இவ்வாழ்க்கைக்காக வருந்தும் புலவர்களைப்-பழு மரம் தேடும் பறவைகளைக் கண்ணியிட்டுப் பிடிப்போர் வேடரோ, அன்றி நாடரோ? என்று கேட்டார்.

நெடுங்கிள்ளியின் கண்கள் சிவந்தன....

புலவரே, நான் பழுமரம் என்றிருந்தேன்....இன்று பட்ட மரம் ஆனேன். என்று புலம்பினான்.