மானுட வாசிப்பு
மானுட வாசிப்பு
பேராசிரியர் தொ.ப.வின் தெறிப்புகள்
தயாளன்
ஏ.சண்முகானந்தம்
தடாகம்
|
- தடாகம்
- மானுட வாசிப்பு: பேராசிரியர் தொ. ப. வின் தெறிப்புகள் (நேர்காணல்)
- ❖தயாளன். ஏ. சண்முகானந்தம் ❖உரிமை : ஆசிரியர்களுக்கு
- ❖முதற்பதிப்பு : மே 2016 ❖வெளியீடு : தடாகம். 112. திருவள்ளுவர் சாலை,
- திருவான்மியூர், சென்னை-600041. ❖பேசி: 044-43100442 | 89399 67179
- ❖இணையதளம்: www.thadagam.com ❖மின்னஞ்சல் : editor.thadagam@gmail.com ❖நூல் வடிவமைப்பு : மெய்யருள்
- ❖ஒளிப்படங்கள்: தயாளன், ஏ. சண்முகானந்தம் ❖அட்டை வடிவமைப்பு : மணிவண்ணன்
- விலை ரூ.100/-
- ISBN : 978-81-932691-2-1
- தடாகம்
- மானுட வாசிப்பு பேராசிரியர் தொ. பவின் தெறிப்புகள்
- தொ.பரமசிவன் (பி. 1950)
- தமிழகப் பண்பாட்டு ஆய்வாளர்களில் முதன்மையானவர். மதுரை ::காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணீயம் ::சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். நாட்டார் ::மக்களின் வாய்மொழி வழக்காறுகள், சடங்குகள், ::உரையாடல்களிலிருந்து ஆய்வை முன்னெடுத்தவர். சிறுதெய்வ ::வழிபாடுகள் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- தற்போது குடும்பத்துடன் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
அணிந்துரை
நெளிந்தோடும் ஆறு
உண்மையில் வெட்கமாகவும், குற்றவுணர்ச்சியாகவும் இருக்கிறது.
வெட்கமென்பது இதிலுள்ள அற்புதமான ஆய்வின்பாற்பட்ட தகவல்களில் நான் ஐந்து சதவீதம்கூட அறிந்து கொள்ளவில்லையே என்பதால் எழுந்தது.
இரண்டாவதோ எந்தத் தகுதியுமற்ற ஒருவனை அணிந்துரை எழுதச் சொன்னதால் விளைந்தது.
மனதாரச் சொல்கிறேன் நண்பர்களே!
இந்த நூலுக்கு முன்னுரையோ, அணிந்துரையோ எழுத எந்தத் தகுதியுமற்றவன் நான்.
தொ. ப. வின் மீது நான் கொண்டிருக்கிற பேரன்பும், நூலைக் கொணரும் தோழர்களது அன்பின்பாற்பட்ட வலியுறுத்தல்களும்தான் எழுத வைத்திருக்கிறது என்னை. அதுதான் உண்மை.
ஓர் அற்புதமான ஆளுமையோடு நிகழ்த்துகின்ற நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறது இக்கலந்துரையாடல். அறிவின் துருத்தல்களற்ற வினாக்களும், அகந்தைகளற்ற விவரிப்புகளுமாக, நெளிந்தோடும் ஆறெனச்செல்கிறது நூல்.
எதை எடுக்க வேண்டும் என்பது நேர்கண்டவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. எதைக் கொடுக்க வேண்டும் என்பது எதிர்கொண்ட தொ. ப. வுக்கும் தெரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பே அதுதான்.
உப்புப் பெறாத விஷயம் என நாம் உதறித் தள்ளும் “உப்பு” குறித்துஞ், சங்க காலத்திலே உப்பு விற்ற “உமணர்” குறித்து, நாம் சுவைக்கும் எல்லா சுவைகளுடைய பெயர்களும் கரிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு என உப்பையே உள்ளடக்கி முடிவதற்கான காரணம் குறித்து, எல்லாம் விளக்கிச் செல்கையில், அட நாம் மலினமாக நினைத்த உப்புக்குள் இத்தனை உண்டா என்கிற வியப்புதான் மேலிடுகிறது.
பௌத்தத்திற்கும் சமணத்திற்குமான வேறுபாடு, சமணத்திற்கும் திருவள்ளுவருக்குமான தொடர்பு, கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை, துறவு போன்ற விடயங்களில் தமிழர்கள் எப்படி திருவள்ளுவரைத் தோற்கடித்தார்கள் என்பதையெல்லாம் விரிவாக சொல்லிச் செல்லும் தொ. பரமசிவன் நக்கலுக்கும் சளைத்தவரில்லை.
வள்ளுவரை சைவம் சொந்தம் கொண்டாடுவதெல்லாம், ஊரில் பெரிய்ய ஆளாயிட்டான், என்பதற்காகவே “அமைச்சர் எனக்கு நெருங்குன சொந்தம்தான்”, என்று சொல்லிக் கொள்வதைப் போலத்தான், என்கிறார் தொ. ப.
பௌத்தம் செத்த மீனைச் சாப்பிடலாம் என No Objection Certificate கொடுக்க, சமணமோ செத்ததாவது சாகாததாவது, எதையும் சாப்பிடக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கிறது. அதற்கு, ‘நீ ஆட்டை அறுக்கல சரி, ஆனா ஞாயித்துக்கெழமை காலைல 10 மணிக்கு கறி வாங்க வருவேன்றதுக்காகத்தான் அவன் 6 மணிக்கே அறுத்து வெச்சான், கொல்றதும் தப்பு, தின்னுவதும் தப்பு,’ இதுதான் வள்ளுவரோட கோட்பாடு. “சமணத்தின் உயிரான கோட்பாடே அதுதான்” அதைத்தான் வள்ளுவர் வலியுறுத்துகிறார் என மிக எளிமையாக விளக்கிச் செல்கிறார்.
தேசபக்தி என்பது எப்படி கயவர்களின் கடைசி புகலிடம் என்கிறோமோ அப்படி “சாதி என்பது பாதுகாப்பற்றவனின் புகலிடம்” என்கிறார் தொ. ப.
ராஜாஜியாலேயே முற்றாக நிராகரிக்க முடியாத பெரியாரை சிலர் புரிதலின்மையால் நிராகரிப்பது முட்டாள்தனம் தவிர வேறில்லை என நெத்தியடியாய்ச் சொல்கிறார். அதிலும் தமிழகத்தின் இடதுசாரிகள் என்பவர்கள் பெரியாரை எப்படிப் பார்த்தார்கள், பார்க்கிறார்கள், என்பதற்கு, “பகுத்தறிவு சிகரம் ஈவெரானு ஒரு புத்தகம். 1953—54 இல் தொழிற்சங்கத் தலைவர் எழுதுனது. இவ்வளவுக்கும் அய்யங்கார் அவரு. கட்சி அத ஏறெடுத்துக்கூடப் பார்க்கல. இன்னைக்கு பெரியார் 150—வது விழாவ கொண்டாட வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. வாக்கு வங்கி காரணமாக பெரியாரை நிராகரிக்க முடியாது என்ற நிலை. ஏற்றுக் கொண்டதைப் போல பாவனை செய்கிறார்கள்.” என மிக நேரடியாகவே இடதுசாரிகள் மீது தனது குற்றச்சாட்டை வைக்கிறார் தொ. ப. தங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு அறிவு நாணயத்தோடு இதற்கு இடதுசாரிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம்போல கள்ள மௌனம் காப்பார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
காடு, மலை, ஆறு, மணல், என இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து, 5001 அடிகள் கொண்ட சிலப்பதிகாரத்தில் 5000 தாவர வகைகளைக் குறிப்பிட்டிருப்பது குறித்து,
தனது இளமைக்கால நட்புகள் குறித்து,
எட்டாவது வகுப்பே படித்திருந்தாலும் கமலஹாசனுக்கு இருக்கும் புத்தக வாசிப்பின் மீதான மோகம் குறித்து, என எண்ணற்றவற்றை சுவைத்தபடி பயணிக்கலாம் இதன் பக்கங்களோடு.
அதிலும் தெரிந்ததைத் தெரியும் எனவும், தான் அறியாததை அப்பட்டமாக, "எனக்கு உணவியல் பற்றி அதிகம் தெரியாது. தெரியாத விசயங்களை பேசாமலிருப்பதுதான் நாகரிகம்." என ஒப்புக் கொள்ளும் அடிப்படை நேர்மை, நம்முள்ளும் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும் முன்மாதிரிகள்.
தொ.பரமசிவனின் அருமை புரிந்தது ஜெயலலிதா “கோயில்களில் ஆடு கோழி பலியிட தடைச் சட்டம்" கொண்டு வந்த போதுதான். ராமகோபாலன் மட்டுமல்ல ஆசிரியர் வீரமணியும் அதை ஆதரித்த அரசியல் அதிசயம் அப்போதுதான் அரங்கேறியது. சங்கரமடத்தில் கிடாய் வெட்டச் சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது. சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது என்பதைப் புரியவைத்தது தொ.ப. தான்.
எந்தவொரு விஷயத்தையும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை புரிந்துகொண்ட பொழுதுகள் அவை.
தோழர்கள் சண்முகானந்தமும் தயாளனும் நெய்துள்ள இந்நூல் எண்ணற்ற இழைகளைத் கோர்த்துச் செல்கிறது. முன்னரே சொன்னபடி அறிவின் துருத்தல்களற்ற வினாக்கள், ஒரு வார்த்தையைத் தொட்டால் அவர் எப்படித் தொடர்வார் என்கிற புரிதல், உண்மையிலேயே சிறப்பு நண்பர்களே.
இன்னமும்கூட...
தமிழ் பிரெய்லி கொண்டு வந்த Anne Askwith குறித்து,
1900லேயே விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம் எழுதிய சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு குறித்து,
பெரியாரின் தளபதிகளுள் ஒருவராக இருந்த பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் குறித்து, மருதநாயகம் என்றழைக்கப்படும் கான்சாகிப் குறித்து, என அவரோட பயணிக்க ஏராளம் உண்டு. அதற்கான மற்றொரு படியாக இந்நூலைச் சொல்லலாம்.தோழன் தொ. ப. விடம் “அய்யா அந்த டி. எம். நாயர் பத்தி” என்று ஆரம்பித்தாலே தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் மெனிபெஸ்ட்டோ, அதை எதிர்த்து ஐரிஷ் பெண்மணி அன்னி பெசண்ட் வெளியிட்ட அறிக்கை, “பார்ப்பனரல்லாதோர் ஒன்றிணைப்பை” தற்கொலை முயற்சி என்று அன்று “இந்து” எழுதிய தலையங்கம், டி. எம். நாயர் அன்னிபெசண்ட்டை ஆப்படித்து எழுதிய Anti septic Journal, அன்னி பெசண்ட்டுக்கும் பெர்னாட்ஷாவுக்கும் இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலின் முறிவு, அவர் குறித்து வந்த Mrs.Besant - Tricks and Dupes என்கிற புத்தகம், டி. எம். நாயரின் புகழ்பெற்ற ஸ்பர்டேங்க் ரோடு வீரமுழக்கம், “பிராமணர்கள்தான் இந்தியாவின் மனசாட்சி” என்று உளறிய அன்னி பெசண்ட் குறித்து வெளிவந்த Who is Ms.Besant? Why has she Come to India? என்கிற நூல், நீதிக்கட்சி பவள விழா மலர், என குறைந்தபட்சம் பத்து புத்தகங்களாவது படிக்க வேண்டும்.
இந்த நேர்காணலோ இன்னும் பல நூறு புத்தகங்களை வாசிப்பதற்கான வாசலைத் திறந்து விட்டிருக்கிறது.
மிக்க நன்றி நண்பர்களே!
தோழமையுடன்,
பாமரன்
கோவை
pamaran@gmail.com
முன்னுரை
கடவுள், தெய்வம் மற்றும் தொ. ப.
2000ஆம் ஆண்டு வாக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். தொ. ப. வின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த நேரம். அக்கட்டுரையின் சொற் கட்டுமானம், அனுபவ வெளிப்பாடு, பட்டுத் தெறிக்கும் புதிய செய்திகள் இவையெல்லாம் மாயாஜாலங்களாக இருந்தன. ஒரு பொருளை எப்படி அணுக வேண்டும், எந்தக் கண்ணோட்டத்தில் நின்று சிந்திக்க வேண்டும் என்று வெளிச்சம் பாய்ச்சியது அக்கட்டுரை. பின்பு, தொ. ப. வின் அத்தனை புத்தகங்களையும் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். தொ. ப. வின் மாணவர் சங்கர் ராமின் அறிமுகம் கிடைத்த பிறகு தொ. ப. குறித்து நிறைய தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பண்பாட்டு அசைவுகள், அழகர் கோவில், சமயங்களின் அரசியல், பரண், விடுபூக்கள் என்று விடாமல் வாசித்தேன்.
நாட்கள் நகர, நகர தொ. ப. வை நேரில் சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. கடையம் திருவள்ளுவர் கழகத்தில் ஒரு முறை பேசினார். திருக்குறளில் இருக்கும் சமணத் தாக்கம் குறித்துப் பேசினார். அங்கிருந்த சைவ அன்பர்கள் கொதித்து வந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் நான் தொ. ப. வின் ரசிகனாகவே மாறிவிட்டேன். தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பார்; புதிராக இருக்கும். பின்பு புதிரை விடுவிப்பார். கடவுளுக்குப் பின்னால் நுண்ணரசியலும் அதிகாரமும் இருக்கிறது. தெய்வம் மனிதனுடன் நேரடி உறவு கொள்கிறது என்று விளக்குவார்.
அவரின் அழகர் கோவில் கட்டுரையில் அவர் விவரிக்கும் கோவிலுக்கும் சமூகத்திற்குமான உறவுநிலை நுட்பமானது. வரலாறும், தொன்மமும் நிறைந்த கட்டுரைத் தொகுப்பு அது. அழகர் கோவிலை நேரில் பார்க்க வேண்டும் என்று மனதில் ஏக்கமாகவே மாறிவிட்டது.
மதுரையை பண்பாட்டுத் தலைநகர் என்று உறுதியாகச் சொல்வார். புழங்கு பொருள் பண்பாடு என்பார். பண்பாட்டு ஆய்வு சமையலறையில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பார்.
சண்முகானந்தத்துடன் இணைந்து தொ. ப. வைச் சந்தித்துப் பேசிய நான்கு நாட்களும் வாழ்வில் முக்கியமான தருணங்கள். ஒரு கேள்வியை முடிக்கும் முன்பே பட்டுத் தெறித்தாற்போல் ஒரு சங்கப்பாடலுடன் பதிலைத் தொடங்கி விடுவார். அவரின் நினைவாற்றல் அபாரமானது. புத்தகத்தின் பெயர், வெளிவந்த ஆண்டு, பதிப்பாளர் விவரம், எங்கு கிடைக்கும் போன்ற விவரங்களுடன் அடித்து நொறுக்குவார்.
எப்போதும் கடவுள், தெய்வம், நாட்டார் மரபு என்று பேசிக்கொண்டே இருக்கும் ஒருவர் பெரியாரியவாதியாக இருக்க முடிவது பிரமிக்க வைக்கிறது. நாமும் அன்றாடம் எத்தனையோ விடயங்களைப் பார்க்கிறோம். ஆனால் தொ. ப. மட்டுமே கவனிக்கிறார். புதிய கோணத்தில் சிந்திக்கிறார். எளிமையாக வெளிப்படுத்துகிறார்.
நேர்காணல் செய்த எங்களைவிட நேர்காணலை ஒலி வடிவில் கேட்டு எழுதி, மீண்டும் கேட்டு எழுதி, திருத்தி ஒரு மிகப்பெரிய ஆவணத்தை செய்து கொடுத்த நண்பர் சித்திரை வீதிக்காரன் மதுரை சுந்தருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூலில் நானும் மதுரை சுந்தரும் எடுத்த நேர்காணலும் இணைக்கப்பட்டிருக்கிறது. சித்திரை வீதிக்காரன் தொ. ப. வின் பக்தர் என்று சொன்னால் அது மிகையல்ல. சித்திரை வீதிக்காரனைப்போல ஏராளமானோரை ஈர்த்திருக்கிறார் தொ. ப. தமிழகப் பண்பாட்டு ஆய்வுக் களத்தில் தொ. ப. ஒரு சகாப்தம். தொ. ப.வுடன் உரையாட நான்கு நாட்கள் என்பது மிகக் குறைந்த கால அவகாசம்.
நேர்காணலுக்கு உடன் பயணித்த தோழர் ஏ. சண்முகானந்தத்திற்கும், பயணத்திற்கு உதவிய தடாகம் பதிப்பகத்திற்கும் நன்றி. முன்னுரையில் வழக்கம்போல் அசத்தியிருக்கிறார் எழுத்தாளர் பாமரன். இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணமாக நிலைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
தயாளன்
சென்னை — 94
dayalabs@yahoo.com
முன்னுரை
மானுட ஆய்வாளருடன்
சில நாட்கள்...!
பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என சமூக மாற்றத்திற்கான ஆளுமைகளை என்னுள் விதைத்த தோழரும், உடன்பிறவா சகோதரருமான ஓவியர் கரு. சின்னசாமி வழியே என்னுடைய வாசிப்பு பழக்கம் 90—களின் மத்தியில் ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. பெரியாரை வாசிக்கத் தொடங்கிய நாள் முதல் பெரியாரை ஒரு நேர்கோட்டுப் பார்வையாகவே அவதானித்து வந்துள்ளேன். பெரியார் குறித்த விவாதங்களை நண்பர்களுடன் பல நேரங்களில் செய்ததுண்டு. விவாதங்களின் மையப் பொருளாக பெரியாரின் தமிழ்த் தேசியம், மொழிவாரி மாநிலப் பிரிவினை போன்ற விடயங்கள் குறித்தே இருந்துள்ளது. கடவுள் குறித்த விவாதங்கள் பெயரளவிலேயே இருந்தது. ‘கடவுள் இல்லை’ என்ற அளவுகோலை கொண்டே பெரியாரை புரிந்துக் கொண்ட காலகட்டமாக அது இருந்து வந்துள்ளது.
நூல் வாசிப்பில் எனக்குள் இருக்கும் ஒரு பழக்கம் என்னவென்றால், புத்தகங்களை வாங்கியவுடன் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்து, பின்பு சில நாட்கள் (சில வேளைகளில் மாதக்கணக்கிலும் ஆகிவிடும்) இடைவெளியில் வாசிக்க ஆரம்பிப்பேன். கோ. கேசவனின், ‘மண்ணும் மனித உறவுகளும்’, கல்வி நூலான, ‘சன்னலில் ஒரு சிறுமி’ போன்ற நிறைய நூல்களை அந்தவகையில் உதாரணமாகக் கூறலாம். படிக்க ஆரம்பித்த பிறகு, கேசவனின் எழுத்திற்காக அவரது நூல்களை தேடித் தேடி வாங்கி படித்த காலங்கள் பசுமையாக நினைவில் நிற்கின்றன. ‘சன்னலில் ஒரு சிறுமி’ நூல் தாய்மொழி கல்வி மற்றும் நேரடி களப்பயிற்சியின் மூலம் கற்றல் போன்றவற்றில் இன்றளவும் ஒரு முதன்மையான நூலாகத் திகழ்ந்து வருகின்றது.அந்தவரிசையில், கடந்த 2010—ஆம் ஆண்டு இறுதியில் தொ. பரமசிவனின், ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலை வாங்கியும், அது அலமாரியில் இருந்தது எப்போதும் போல. நண்பர்களுடனான விவாதத்தின் முடிவில், தொ. பரமசிவனின் ‘பண்பாட்டு அசைவு’களை வாசிக்க ஆரம்பித்தேன். பெரியார் குறித்து எனக்குள் கரடு தட்டியிருந்த பல விடயங்கள் உதிர்ந்து விழுந்தன.
‘கடவுள் இல்லை... கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை...’ என்ற திராவிட இயக்கத்தினரின் முழக்கத்தை, தொ. ப. கண்ணாடி கொண்டு பார்க்க ஆரம்பித்தேன். சமூகத்தின் 90 விழுக்காட்டு மக்கள் தெய்வ நம்பிக்கையில் இருக்கும்போது, பெரியார் எந்தக் கடவுளை எதிர்த்தார் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை எப்போதுமே அவர் எதிர்த்ததில்லை.
‘ராமரை செருப்பால் அடித்தார்...’ ‘விநாயகர் சிலையைத்தான் உடைத்தாரே...’ தவிர, அய்யனார் சிலையையோ, அம்மன் வழிபாட்டையோ பெரியார் எப்போதும் எதிர்க்கவில்லை என்ற தொ. ப. வின் எழுத்துக்கள் என்னுள் பலவித மாற்றங்களை ஏற்படுத்தின. சமூகத்தின் பெரும்பான்மை மக்களிடம் சிறு தெய்வ வழிபாடு, தாய் தெய்வ வழிபாட்டு முறைகள் இன்றளவும் தொடர்கிறது. பெரியார் எதிர்த்தது, பெருந்தெய்வ வழிபாட்டையும், பார்ப்பனியத்தையும், இந்துத்துவாவையும் தான் என்ற உண்மை செவிட்டில் அறைந்ததுபோல இருந்தது.
அன்றிருந்து தொ. ப. வின் நூல்களைத் தேடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போதே, என்னுள் எழுந்த ஐயங்களை வினாக்களாகத் தொகுத்து வைக்கவும் தொடங்கினேன். அதுதான் இன்று நூலாக விரிந்துள்ளது. சென்ற ஆண்டு (2015) அக்டோபர் மாத இறுதியில் தென்காசியில் நான்கு நாட்கள் தங்கி தொ. ப. வை நேர்காணல் செய்தது என்றென்றும் மறக்க இயலாத அனுபவமாக அமைந்தது.
நேர்காணலின் முதல் நாள் இருந்த சிறிது தயக்கம், தொடர்ந்த நாட்களில் மறைந்தது. அறிமுகமற்ற, அனுபவமற்ற இளைஞர்களான எங்களின் சாதாரணமான கேள்விகளுக்கும் புன்னகை மாறாத பதிலும், துறை சாராத கேள்விகளுக்கு, தெரியவில்லை என்ற நேர்மையான பதிலும் தொ. ப. மீதிருந்த மதிப்பை பன்மடங்காக உயர்த்தியது. சுருக்கமான, தெளிவான பதில்கள் — பண்பாடு, வரலாறு, கலை தொடர்பாக இன்னமும் நீண்ட உரையாடலுக்கு சொந்தக்காரராகவே தொ. ப. உள்ளார். தொ. ப. வுடனான நான்கு நாள் உரையாடல் பல புதிய பார்வைகளை எங்களுக்குள் ஏற்படுத்தியது.தமிழகத்தில் அரை நூற்றாண்டுகாலமாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சியினர், மற்றும் தேர்தல் பாதையில் பங்கெடுக்காத திராவிட அமைப்புகள், இடதுசாரிகள் என முற்போக்காளர்கள் அனைவரும் பெரியாரை ஒற்றைப் பார்வையில் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தியதோடு, அதை ஆழமாக வேரூன்றவும் செய்துவிட்டனர்.
பன்முகப்பட்ட இந்தியாவை இந்துத்துவம் சூழ்ந்துள்ள இன்றைய வேளையில், பெரியார் குறித்தும், நாட்டார் தெய்வங்கள் குறித்தும் தொ. ப. வின் பார்வையில் அணுகுவதும், மக்கள் மத்தியில் அதனைக் கொண்டு சேர்ப்பதும் திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகளின் கடமையாக உள்ளது. காலத்தை உணர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்களா?
இடதுசாரிகள் ஒரு விடயத்தைப் புரிந்து செயலாற்ற குறைந்தது சில பத்தாண்டுகளாவது தேவைப்படுகிறது. பெரியாரை புரிந்து கொள்ள, பண்பாட்டை புரிந்துகொள்ள, சாதியைப் புரிந்து கொள்ள, அணு உலையை புரிந்துகொள்ள என இவர்களுக்கு எதுவும் புரிவதற்கு நீண்டகாலம் ஆகின்றது. தொ. பரமசிவன் என்ற ஆளுமையை இவர்கள் எப்போது புரிந்துகொள்வது?
சிறு தெய்வ வழிபாட்டுக் கோவிலில் இந்துத்துவம் தன்னை சமரசப்படுத்திக் கொள்வதை, அண்மையில் கண்டிருக்கின்றேன். வடசென்னையில் அமைந்துள்ள இக்கோவிலில், இந்து முன்னணி கொடி பறக்கிறது. இதுபோன்ற இந்துத்துவா அபாயங்கள் தமிழகத்தை சூழ்ந்துள்ள நிலையில், பெரியாரின் கருத்துக்களை தொ. ப. வின் பார்வையில் அணுகுவதும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் ‘கருத்து —செயலாக்கம்’ பெறுவதற்கும், ‘மக்கள் இயக்கமாக’ மாறுவதற்கான முயற்சியாக அமையும். அப்போதுதான், பார்ப் பனியத்தையும் அதனைத் தாங்கியுள்ள இந்துத்துவத்தையும், இந்து மதத்தையும் வீழ்த்துவதற்கான ஆற்றலை முற்போக்காளர்கள் பெறமுடியும். அதற்கான ஆற்றலை தொ. ப. வின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்றன.
அதற்கான சாட்சியே, தொ. ப. வின் சமீபத்திய நூலான ‘இந்து’ தேசியத்திற்கு (கலப்பை வெளியீடு) திராவிடர் விடுதலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா. செ. மணி எழுதியிருந்த நுட்பமான முன்னுரையாகும். அதன் தொடர்ச்சியை திராவிட இயக்கத்தினர் கையில் எடுக்கும்போது மட்டுமே, இந்துத்துவத்தை எவ்வடிவிலும் வீழ்த்த இயலும். தோழர் பாமரன் ஒரு முறை குறிப்பிட்டது போல, ‘தமிழகத்தின் கருவூலமாக’ உள்ள தொ. ப. வின் கருத்துக்களை திராவிட இயக்கங்களும், இடதுசாரிகளும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அப்போது மட்டுமே நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நடக்கும். அறிமுகமற்ற இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு வேலைகளுக்கிடையிலும், உடல் உபாதைகளுக்கு இடையிலும் பலவகைகளில் ஒத்துழைப்பு நல்கிய பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கு நன்றியைக் கூறுவது கடமையாகாது.
அந்தவகையில், இந்த நேர்காணலுக்கு பல பணிச்சுமைக்கிடையில் சிறப்பானதொரு அணிந்துரையை அளித்த தோழர் பாமரனுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன். நேர்காணலுக்கு பல்வேறு வகைகளில் உதவிய தோழர்கள் கவிஞர் வெய்யில், பசுமை எழுத்தாளர் நக்கீரன், காஞ்சனை மணி மற்றும் தொ. ப. விடம் கேட்க வேண்டிய கேள்விகளில் கொள்ள வேண்டியவைகள், எடுக்க வேண்டியவைகள் குறித்து பல ஆலோசனைகளை அளித்த தோழர் லிங்கராஜா வெங்கடேசுக்கும், சங்க இலக்கியத்தில் பொருள்முதவாதம் குறித்த கேள்விகளை எழுப்பத் தூண்டிய தோழர் அருண் நெடுஞ்செழியனுக்கும், தொ. ப. வுடனான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்த தோழரும் கவிஞருமான வே. ராமசாமிக்கும், பல்வேறு வகைகளில் எங்களுக்கு உதவி செய்த தொ. ப. வின் நெருங்கிய நண்பரான ப. கண்ணன், நேர்காணல் செய்த நாட்களில் உடன் வந்திருந்து ஒத்துழைத்த ஆசிரியர் ஆவுடையப்பன், எங்களைவிட பல மடங்கு கடினமான பணியான எழுத்தாக்கத்தை முழுமைப்படுத்தி தந்த சித்திரைவீதிக்காரன், கடைசி நேரத்தில் விரைவாக பிழைதிருத்தம் பார்த்துக் கொடுத்த என் அணுக்கத் தோழர் கா. ரு. ராசேந்திரன் என அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி என்றும் உரித்தானது. எல்லாவற்றுக்கும் மேலாக நேர்காணல் முழுமைபெற தோளோடு தோள் நின்ற தோழர் தயாளனுக்கும் நன்றி சொல்வது கடமையாகாது.
இந்நேர்காணலை சிறந்த முறையில் நூல் வடிவமாக்கும் தடாகம் பதிப்பகத்திற்கும், நூலை வடிவமைத்த மெய்யருளுக்கும், சிறந்த முறையில் அட்டையை வடிவமைத்த ஓவியர் மணிவண்ணனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏ.சண்முகானந்தம்
04.04.2016, சென்னை.
shanmugam.wildlife@gmail.com
நடக்கும். அறிமுகமற்ற இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு வேலைகளுக்கிடையிலும், உடல் உபாதைகளுக்கு இடையிலும் பலவகைகளில் ஒத்துழைப்பு நல்கிய பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கு நன்றியைக் கூறுவது கடமையாகாது.
அந்தவகையில், இந்த நேர்காணலுக்கு பல பணிச்சுமைக்கிடையில் சிறப்பானதொரு அணிந்துரையை அளித்த தோழர் பாமரனுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன். நேர்காணலுக்கு பல்வேறு வகைகளில் உதவிய தோழர்கள் கவிஞர் வெய்யில், பசுமை எழுத்தாளர் நக்கீரன், காஞ்சனை மணி மற்றும் தொ. ப. விடம் கேட்க வேண்டிய கேள்விகளில் கொள்ள வேண்டியவைகள், எடுக்க வேண்டியவைகள் குறித்து பல ஆலோசனைகளை அளித்த தோழர் லிங்கராஜா வெங்கடேசுக்கும், சங்க இலக்கியத்தில் பொருள்முதவாதம் குறித்த கேள்விகளை எழுப்பத் தூண்டிய தோழர் அருண் நெடுஞ்செழியனுக்கும், தொ. ப. வுடனான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்த தோழரும் கவிஞருமான வே. ராமசாமிக்கும், பல்வேறு வகைகளில் எங்களுக்கு உதவி செய்த தொ. ப. வின் நெருங்கிய நண்பரான ப. கண்ணன், நேர்காணல் செய்த நாட்களில் உடன் வந்திருந்து ஒத்துழைத்த ஆசிரியர் ஆவுடையப்பன், எங்களைவிட பல மடங்கு கடினமான பணியான எழுத்தாக்கத்தை முழுமைப்படுத்தி தந்த சித்திரைவீதிக்காரன், கடைசி நேரத்தில் விரைவாக பிழைதிருத்தம் பார்த்துக் கொடுத்த என் அணுக்கத் தோழர் கா. ரு. ராசேந்திரன் என அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி என்றும் உரித்தானது. எல்லாவற்றுக்கும் மேலாக நேர்காணல் முழுமைபெற தோளோடு தோள் நின்ற தோழர் தயாளனுக்கும் நன்றி சொல்வது கடமையாகாது.
இந்நேர்காணலை சிறந்த முறையில் நூல் வடிவமாக்கும் தடாகம் பதிப்பகத்திற்கும், நூலை வடிவமைத்த மெய்யருளுக்கும், சிறந்த முறையில் அட்டையை வடிவமைத்த ஓவியர் மணிவண்ணனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏ.சண்முகானந்தம்
04.04.2016, சென்னை.
shanmugam.wildlife@gmail.com
மானுட வாசிப்பு
பேராசிரியர் தொ.ப.வின் தெறிப்புகள்
பண்பாடு, கல்வி, அரசியல்,
நாட்டார் வழக்காற்றியல்,
ஆளுமைகள், சுற்றுச்சூழல்,
சித்தர்கள், பார்ப்பனியம்,
சமயம், மரபு, பெரியாரியல்,
சாதி என எந்த தளத்திலும்
ஆற்றொழுக்குடன்
தொ.ப.பேசும் அழகை
நாள் கணக்கில் கேட்டுக்
கொண்டிருக்கலாம்.
2015ஆம் ஆண்டு
மழைக்கால
மாதமொன்றின் இறுதியில்,
அவரது வீட்டில் நான்கு
நாட்கள் மாலை
வேளையில் நடந்த நீண்ட
உரையாடல்....
அத்தியாயங்கள்
- அரசியல்-சாதி-மதம்
- பண்பாடு
- புழங்கு பொருள் பண்பாடு
- உணவு
- ஆளுமைகள்
- சித்தர் இலக்கியம்
- கல்வி
- மொழி
- சுற்றுச்சூழல்
- தலித்தியம்
- பெரியாரியம்
- தமிழ்த் தேசியம்
- நாட்டார் வழக்காற்றியல்
- கோவில்
- அழகர்கோவில்
- பாரதியார்
- குடும்பம்
- சமூகம்